நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

இரண்டாவது முறை ரௌத்திரம் பழகிய போது...

 கடைசி வரி தவிர்த்து கடைசி வரை படியுங்கள் ☺☺

 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவுள்ள படைப்பு குழுமத்தின் நூல்வெளியீட்டு விழாவிற்குத் தொகுப்புரைக்காகப் பணிக்கப்பட்டிருந்தேன். 27.08.2017  ஞாயிற்றுக்கிழமை தான் நிகழ்வென்றாலும் சென்னை வாசம் செய்து ஆறு மாதங்கள் இருக்குமென்பதால் ஒருநாள் முன்கூட்டியே செல்வதென்பதும் முதல் நிகழ்வின் ஒத்திகை செய்து பார்ப்பதென்பதும் உறுதியானது. அதன் பொருட்டு பல்கலைக்கழகத்தின் விடுதிக்கு விடுப்பு விலாசம் எழுதிக்கொடுத்து சென்னை நோக்கிப் புறப்பட திருவாரூர் வரத் தயாரானேன்.

மாலை திருவாரூர் வந்து ஏனைய ரஜ கஜ புஜ சேனைகள் உதவியுடன் பயணத்தின் மேற்படிகளை எடுத்து வைத்து சென்னை செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  வெள்ளிக்கிழமை மதியம் வரை எப்போது செல்வதென்ற முடிவு எடுக்கப்படாமையால் முன்பதிவு பயணம் என்பது அபார்ஸன் செய்யப்பட்டுவிட்டது.  இரவு அப்பாவின் வழியனுப்பலோடு திருவாரூர் இருப்புப்பாதை நிலையத்தை அடைந்திருந்தேன்.  கம்பன் அன்று சற்று தாமதமாகத் தான் வந்திருந்தான்.

10.35க்கு திருவாரூர் தொடர்வண்டி நிலையத்துள் வருகைப்பதிவு செய்யக் காத்திருந்த கம்பன் வண்டியை வரவேற்கவும் வழியனுப்பவும் வந்தாலமரவும் காத்திருந்தவர்கள் ஏராளம். அந்தப் பெருந்திரள் கூட்டத்தில் நானும் ஒருவன். ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியைத் தெரிவு செய்து ஏறிட வேண்டும்.   இருபது நிமிடங்களாவது இன்ஜின் தன்னை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசைமாற்றம் மேற்கொள்ளும்.  இருப்பின் இருபது நிமிடத்தில் முதல் இருபது நொடிகளுக்குள் இரயில்பெட்டியுள் களம் காண்போருக்கே உட்காருவதற்கு இடம் உத்திரவாதம்.




அப்படியாய் ஒரு பெட்டிக்குள் உள்நுழைந்து எனக்கான பட்டா இடத்தை தேடித் திரிந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவென்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அன்று நான் வேறு., என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். உள் நுழைந்து ஒவ்வொரு பத்து பத்து சீட்டுகளையும் பைனாகுலர் பார்வையால் கூகுள்சர்ச் செய்ய, எதிர்பார்த்ததைப்போலவே பல்வேறு பதில்கள் திரும்பி வந்திருந்தன. கால் முடியலை, வயசானவங்க, எனக்கு ஸ்டொமக் பெயின், அங்க இடம் இருக்கு அங்க போங்களேன், என அடுத்தடுத்த பதில்கள் கேள்வி கேட்கும் முன்னரே செவிப்பறைக்குள் சென்றிருந்தன.

ஒரு வழியாய் மனிதர்கள் உட்காரும் சீட்டுகளில் பட்டா கிடைக்காது என்றான பிறகு, பொருட்கள் உட்காரும் லக்கேஜ் சீட்டுகளைத் தேடி தேடுதல் வேட்டை தொடங்கலாயிற்று. நான் இடம் தேடிக்கொண்டிருந்த அந்தப் பெட்டி தொட்டில் குழந்தையான புதிய இந்தியாவில் புதிதாய் பிறந்த இரயில் பெட்டியென்பதால் லக்கேஜ் மட்டுமே வைப்பதற்கான முன்வரைவுகள் எடுக்கப்பட்டிருந்தன. பழைய இரயில் பெட்டிகளில் மரப்பலகை இருக்கும் அதுவும் கை எட்டும் உயரத்தில் இருக்கும் எளிதில் ஏறலாம், இறங்கலாம், உறங்கலாம் என நடுத்தர மக்கள் பயணத்தில் பைவ் ஸ்டார் படுக்கையாகவே இருந்தது.

இப்போதெல்லாம், மரங்களைப் பாதுக்காக்கும் வகையில், மேலும் மனித நடமாட்டத்தை பொருட்கள் அமரும் இடங்களில் தவிர்க்க எண்ணி இரும்பு உருளைகள் அந்த லக்கேஜ் சுமை தூக்கிகளாக இடம் பெற்றிருந்தன. அதன் உருளை வடிவம் மனிதன் உட்காருவதற்கான வகையில் ஏற்புடையதானதாக இருக்காது. நெடுநேரம் உட்கார வேண்டுமென்றால் முதுகுத் தண்டுவடத்தின் முழுத் தகுதி இன்றி பாஸாக முடியாது. இதனால் வயதானவர்கள் மேல் உட்காரும் எண்ணிக்கை தற்போதெல்லம் குறைந்து விட்டது. உயரம் அதிகம் என்பதால் சிறு பிள்ளைகள் மேலேறுவதும் குறைந்துவிட்டது. 16- 50 வரையிலான பால பருவத்தினரே இப்போதெல்லாம் அங்கே ஆட்சி புரிகிறார்கள்.

சரி, கம்மிங் டூ தி லக்கேஜ் சீட் சர்ச்சிங்... காரைக்கால், நாகூர், நாகை என மூன்று  இரயில் நிலையங்களைத் தாண்டி திருவாரூர் வந்திருந்தால் பெரும்பாலும் அந்த லக்கேஜ் இடங்களும் பொருட்களாலும், மனிதர்களின் ஸ்ரீரங்கநாதர் கோலத்தினாலும் நிரம்பியிருந்தன. இச்சூழலில் ஒரு இளைஞனின் காலடி ஓரத்தில் ஒதுக்குப் புறமாயிருந்த பெருநிலப்பரப்பில் பை வைத்து எனக்கான இடத்தை  நான் உறுதி செய்து கொண்டேன். திருவாரூர் தாண்டிவிட்டால் அடுத்து நடுநிசி தான் வரும் என்பதால் மயிலாடுதுறையில் பெரும்பாலும் கூட்டமிருக்காது.  ஆகவே திருவாரூர் நிலையத்தோடு உட்கார இடம் தேடும் படலம் என்பது முடிவடைந்திடும்.

ஒரு வழியாக படுத்துக்கொண்டு கனவு கொண்டிருந்த இளைஞனின் காலடியில் ஒன்றுக்கு ஒன்றரை அளவில் தாரளமாக இருந்தது இடம். அடுத்த ஆறு மணி நேரப் பயணத்திற்கு எனக்கு அதுவே போதுமானதாக இருக்குமென்பதால் உடனடியாக என் பையை மேல வைத்து பதவிப் பிரமாணம் செய்யாமலே அந்த இடத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டேன்.  இவையெல்லாம் திருவாரூரில் கம்பன் தொடர்வண்டியின் என்ஜின் மேற்கே மறைந்து கிழக்கே உதயமாவதற்குள் நடந்து முடிந்தது. என்ஜின் மாற்றி தொடர்வண்டி கிளம்பத் தயாரானதை உறுதி செய்திருந்தது காவலர்கள் இதழிடுக்கில் மாட்டிக்கொண்ட ஊதுகுழல்.

அப்பத்தான் அந்த நபரின் எண்ட்ரி, ஒருவரைப் பார்த்தவுடன் அவரது வித்தியாசங்கள் அவர்களது அடையாளங்களாகப் போய்விடும்.  அப்படி கையில் கட்டு,  1மி.மீ முடிமுளைத்து இரண்டு நாட்களாகியிருக்கும் மொட்டைத் தலை, நல்ல உயரம் என இருந்தார். சங்கு ஊதிய பின் சவம் கிளம்புவது போல ! கிளம்பியது தொடர்வண்டி ....

கையில் அடிபட்டிருக்கும் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் இடம்கேட்டு அமரலாம், இல்லை கிடைக்கிற இடத்தில் அமரலாம், அல்லது தரையிலாவது அமரலாம், யாரவது இரக்கப்பட்டு தரும் இடத்தில் அமர்வதற்கான விண்ணப்பத்தை யாரிடமாவது வைக்கலாம். அதுவுமின்றி மேலே ஏறி அமரலாம் என்று இறுதித் தீர்ப்பை உறுதியாக நம்பினார். அந்த பெட்டியில் அவர் அமர தேர்ந்தெடுத்த இடம் எனக்கு எதிரே. அங்கே ஓய்வுக்கு நான்கு வருடம் இருக்குமளவு மதிக்கத்தக்க ஒரு மத்திய அரசு ஊழியர் காலை சன்னல் பக்கம் வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். (அதெப்படி, இவனே வயது - ஊழியம் எல்லாம் கண்டுபிடிக்கறாண்ணு கதறாதீங்க, அவர் பாக்கெட்டில் பாக்கெட்டுக்கு மேல் தெரியுமளவு அரசு ஊழியர் சங்க அட்டை வைத்திருந்தது தான் காரணம்)

தொடர்வண்டியில் இளசுகளாயில் தலை சன்னல் பக்கமும், இளசுகளின் ஆண்டனிம்ஸ் ஆயின்,  கால் சன்னல் பக்கமும் இருக்குமென்பது எழுதப்படாட இந்தியன் ரெயில்வே யூசர் கைட்-இன் பாகம் நான்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரி கம் டூ தி கை உடைஞ்ச ஆசாமி,  அவர் மேலே ஏற முனைந்து கொண்டிருந்தார். அதற்காக தலையைத் தட்டி எழுப்பி காலை இந்தப் பக்கம் வைத்துப் படுங்கள் எனச் சொல்லினார். பின்பு தன் மேல் உள்ள நம்பிக்கையால் திரும்பிப் படுத்தவரின் கால் ஒதுங்கிய பரப்பில் தனக்கான பையை வைத்தார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். ஒரு கை தான் இயங்கும், அதை வைத்து மேலே ஏறுதல் எவ்வளவு கடினம் என்று தெரியும். இரண்டு கை உள்ளவனாலே, படாத இடம் அடிபடாதபடி ஏறுதல் அரிது. ஒரு கை உள்ளவனின் பாடு இரு கால்களை மயிலை நோக்கி சீறிக்கொண்டிருந்த வண்டியின் கிழக்கும் மேற்கும் மாறி மாறி வைத்து ஒரு வழியாக மேலே ஏறினார். அவர் பத்திரமாக ஏறுவாரா ? ஏறமாட்டாரா ? என டிக்கெட் வாங்காது பட்டிமன்றம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை ஏறினார் என்ற தீர்ப்பு கொடுத்த மகிழ்ச்சியில் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பின்னர்... குழந்தை அழுகல், இருமல் தாத்தா, தூரத்தில் கேட்கும் அந்திமழை பொழிகிறது பாட்டுட்டன் தடக்  தடக் என்ற பின்னணி இசையோடு பல நூறு மனிதர்களை தாங்கி தன் அன்றாடத்தைச் செய்து கொண்டிருந்தான் கம்பன் (தொடர்வண்டி).  என் அன்றாடத்தை நான் செய்திட வேண்டாமா ? ஒரு வழியாக பேசியில் எல்லா சமூகவலைதளங்களிலும் சுறாவளி சுற்றுப் பயணம் முடித்து வர மயிலாடுதுறை நிலையம் வந்திருந்தது, பொறுத்தருளணும் பொதுமக்களே, கம்பன் தான் வந்திருந்தான்.

மயிலைக்கு பை பை காட்டி இரண்டு நிமிடங்களுக்குப் பின், முற்றாக இணைய இணைப்பு விவகாரத்து செய்ய நான் பழைய படி வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல, ஏதாவது படம் பார்க்கலாம் என பேசிக்குள் துழாவிக் கொண்டிருந்தேன்.  ஏற்றி இன்னும் பார்க்காமலே இருந்த படத்தில் ஒன்றையாவது விடிவதற்குள் பார்த்திட வேண்டுமென்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினேன்.   விக்ரம் வேதா தயாராக இருந்தது என் பார்வை பட. அந்த பின்னிரவில் படம் பார்க்கத் தொடங்கியதும் அதனை படமெடுத்து நெடுநாட்களுக்குப் பின் பின்னிரவில் படம் பார்க்கிறேன் என பகிரியில் (watsapp) பகிர்ந்தேன். அப்போது சிதம்பரம் என எண்ணுகிறேன் இணையம் மறுமணம் செய்திருந்தது என் பேசியிடம். பின் பயணத்தின் ஓட்டத்தில் படத்தை பார்க்கத் தொடங்கினேன்.

படம் அருமை, அது வேறு கதை. இது வேறு கதை. ஒரு வழியாக விழுப்புரம் அடைந்ததும் ஈ என்ஜின் மாற்ற பொழுது விடிந்து கொண்டிருந்தது. மறு மார்க்கம் திருவாரூர் செல்லும் தொடர்வண்டியும் வந்திருந்தது.  இவற்றையெல்லாம் பாஸ் செய்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இறுதிக் காட்சி அமைப்புகளுக்குள்ளும் விஜய் சேதுபதியின் அசால்ட் நடிப்புக்குள்ளும் மேடியின் மேஜிக் ஹாசத்திலும் சிறைபட்ட எனக்கு ரிபீட் மோட் இறுதிக்காட்சி தண்டனையாகத் தரப்பட்டிருந்தது. படம் முடித்து, செல்பேசியை நெஞ்சாக்கூட்டில் கிடத்திய போது, மணி 2.30க்கு மேல் இருக்கும்.

விழிகள் உறங்கூருக்கு வழி கேட்டுக் கொண்டிருந்த தருவாயில், அசதி அழைத்துச் சென்று வழி காட்டியது. கண்கள் தூக்கத்தில் லயிப்பதைப் பிடிக்காத அந்த என்ஜின் பைலட் அவ்வப்போது ட்ராக் மாறுகையில் எழுப்பி விட்டிருந்தார். இதனால் தொடர்ச்சியான தூக்கமின்றி அயர்ச்சியானது உடலும் மனமும். அவ்வப்போது எதிரே இருந்த அந்த ஆள் மட்டுமே கண் திறக்கும் போதெல்லாம் காட்சியளித்தார். ஏனெனில் டிசைன் அப்படி. அதற்கு மேல் பார்வை செலுத்த அசதி அனுமதிப்பதற்கில்லை.

மேல்மருவத்தூரில் சில மாணவர்கள் ஏறி இருந்தனர். அவர்களது சென்னைப் பேச்சும் சில டெக்நிக்கல் சொற்களும் மாணவர்கள் என்பதை அமரத்துவம் எய்திருந்த எனக்கு காதுகள் ஊடே உறுதி செய்யப்பட்டிருந்தது. மீண்டும் தூக்கம்.  செங்கல் பட்டு தாண்டியிருப்பேன். அங்கிருந்து தான் மின் பயணிகள் தொடர்வண்டி தொடங்கும் சென்னைக்கு. பல முறை செங்கல்பட்டு இரயில்நிலையத்தில் இறங்கியிருப்பதால் எனக்கு தெரியும்  அதிகாலை 03.40 என்று.

அதற்கு மேல் தூக்கம் தற்கொலை செய்து கொண்டது. தூக்கமின்றி தவித்த எனக்கு அந்த அதிகாலைப் பொழுதின் எதிரிலிருந்த நபரின் நடவடிக்கை மேல் சற்றே கவனக்குவியல் ஏற்பட்டிருந்தது. அவர் தன் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருப்பார் என எண்ணினேன். ஆனால், ஹெட்போன் இல்லை. ஒரு கை கட்டு போடப்பட்டுள்ளது. மற்றொரு கையில் அசைவும் இல்லை.  எல்லா செயல்களையும் சந்தேகத்தோடு எதிர்நோக்கும் எனக்கு இது மேலும் சந்தேகத்தை வலுவேற்றியது.

பக்கத்தில் பார்க்கிறேன். இருபதைக் கடந்த பெண்களிருவர். திருவாரூரில் விரல்கள் உழுத செல்பேசியை இன்னும் உழுது கொண்டே இருந்தனர். எதிரே பார்த்தேன் அவரது கண்கள் பேசியையே பார்த்துக் கொண்டிருந்தது.  எனக்குத் தயக்கம்., நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் , ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று தமிழ்த் திரைப்படங்கள் பழக்கிய பஞ்சாங்கத்தால் எந்த முடிவிற்கும் என்னால் வர இயலவில்லை. ஆனால், அதனைப் பார்த்துக் கொண்டுமிருக்க முடியவில்லை.

எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்தே பழகிப் போன சராசரி இந்திய மனதிலிருந்து சில மாதங்களில் தான் எதிர்த்து நிற்கப் பழகினேன். முதல் முறை ரௌத்திரம் பழகினேன் என்ற போது பலர் வாழ்த்தினார்கள். இரண்டாவது முறை ரௌத்திரம் பழகுவதற்கான நேரம் இதுவென இரயில் சென்று கொண்டிருந்த போது ஒளிர்ந்த பச்சை விளக்கு கூறியது. ஆயத்தமானேன். நான் மட்டும் களத்திறங்கக் கூடாதென சம்பவத்தின் சாட்சிக்கு ஒருவர் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.


அந்த நொடி, உடலில் சுரந்த HCL அமிலமும், இதயத்தின் துடிப்பும் மாநிலப் போட்டிக்கு முடிவு அறிவிப்பதைப் போல ஆக்ட் செய்துகொண்டிருந்தது. நிதானி, முடிவெடு, களத்திரு, காத்திரு, இயங்கு எனத் தெளிந்த பின் செயல்படத் தொடங்கினேன். எதிரே இருந்தவரின் கையைப் பிடித்தேன். அந்த ஒரு கையிலிருந்து அவரது பேசியை பின்னிருக்கையில் இருந்த ஒருவரை அழைத்து வாங்கச் சொன்னேன். அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த பலருள் சிலர் விழித்துக் கொள்ள விநாடி முள் ஒரு சுற்றைக் கடப்பதற்குள் இருபது பேர் சூழ்ந்து கொண்டனர்.

செல்லில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கச் சொன்னேன்., ஆமாம், அந்த கை உடைந்த நபர் தன் மற்றொரு கையால் அந்த இருபதைக் கடந்த இளமங்கையை படமெடுத்திருக்கிறார் என்பது உறுதியானது. பலரது கோபத்திற்கு ஆளான அந்த நபர் வலுக்கட்டாயமாக மேலிருந்து கீழிறக்கப்படுகிறார். அதுவரை கீழே படுத்துக் கொண்டு இடம் தராத நபர்கள் ஏன் இவர் மேலே ஏறினார் என்று இப்போது தெரிந்துவிட்டதென வசை பாடத் தொடங்கினர்.

அதற்குள் சென்னை சென்று கொண்டிருந்த பாலிடெக்நிக் மாணவர் ப்ப்ப்ளாஆர் என ஒன்று விட்டான். இன்னும் சப்தம் நினைவுள்ளது. சென்னையின் பூர்வகுடி போல் அந்த மாணவன். கேட்ட கேள்விகளும் அந்த அறையும் அப்படிப்பட்டது. ஆளாளுக்கு அந்த ஒரு கை கட்டுப் போட்ட கயவன் மீது கை வைக்க முனைந்தனர். எல்லாரையும் சாந்தப்படுத்த முனைந்து முடியவில்லை. பிரச்சினைக்கான தீர்வைத் தான் தேட வேண்டும்.  அதனை மேலும் பிரச்சினைக்குரியதாக மாற்றக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

அவர் யார் ?  எதன் பொருட்டு வந்திருக்கிறார் ? என்பதெல்லாம் அவர் வைத்திருந்த மருத்துவப் பையிலிருந்து தெரிய வந்தது. கட்டுப் போட்டிருந்த கைக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவர் செய்த தவறினால் தற்போது குற்றவாளியாகியிருக்கிறார். சுற்றியிருந்த கூட்டம் தன் கருத்துகளை சரமாரியாக வைத்தது. அதற்குப் பின், அந்தப் இளம்பெண்ணிடம் என்ன செய்யலாம் என்று சொல்லிக் கேட்டோம். அந்தப் பெண்மணி தாம்பரத்தில் இறங்குகிறார் , அங்கே இரயில்வே பாதுகாப்புப் படை RPFஇல் ஒப்படைத்து விடலாம் என முடிவு செய்தோம். தாம்பரம் வந்தது.

இந்தப் பிரச்சினைக்கான ஆதாரப் புள்ளியை அடையாளம் காட்டியது நானென்பதால் பாலிடெக்நிக் மாணவர்கள், அந்த இளம் பெண்மணி அவர் நண்பி, ஒரு கை கட்டுப் போட்ட குற்றவாளி உள்ளிட்ட பலரும் தாம்பரத்தில் இறங்கினோம். இரண்டு நிமிடத்துள் நான் தொடர்வண்டி ஏறிட வேண்டும். இல்லெனின் என் பைகள் எழும்பூர் நோக்கி தனிப்பயணம் மேற்கொண்டுவிடும். இரண்டு நிமிடத்துள் அந்தப் பெண்மணி எந்த முடிவும் எடுத்த பாடில்லை. ஆனால், பாலிடெக்நிக் மாணவர்கள் கராராக பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்மணியும் அவர்தம் தோழியும் போனில் கதைத்துக் கொண்டிருக்க, பாவம் அந்த கை உடைந்த நபர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்து செய்து தவறு, இப்படி ஆக்கியதென என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈற்றில், பைலட் சங்கு ஊதி இரயில் கிளப்ப வேறுவழியின்றி நான் தொடரியில் பயணம் தொடர்ந்தேன். ஆனால், இன்னும் எத்தனை பேர் இவரைப் போல் குற்றம் செய்து கொண்டிருக்கின்றனரோ, எத்தனை பேர் குற்றவாளியாக்கப்படாமல் இந்தத் தாம்பரத்தைக் கடந்து போயிருப்பரோ ? இதற்கான தீர்வு எதுவாக இருக்கும் என விடைக்கான தேடலில் நீச்சல் தெரியாது மூழ்கிக் கொண்டிருந்தே நான்.

ரௌத்திரம் பழக்குவோம் ?

த.க.தமிழ் பாரதன்
(25.08.2017 அதிகாலை தொடரியில் நிகழ்ந்த சம்பவத்தின் சாரத்தால் உந்தப்பட்டு எழுதியது)