நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 22 அக்டோபர், 2020

பிபிசி 100 பெண்கள் - 2019 நிகழ்ச்சி

பிபிசி 100பெண்கள் - 2019 நிகழ்ச்சி

கடந்த ஆண்டு (22.10.2019) பிபிசி 100women நிகழ்வு புதுதில்லி லோதி சாலையிலுள்ள ஆந்திரா பவனின் கோதாவரி அரங்கில் நடைபெற்றது. ஊடகவியலாளர் நியாஸ் அகமது அழைப்பின் பேரில் ஜேஎன்யு சார்பில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. முதல்முறையாக பன்னாட்டு ஊடகத்தின் ஆங்கில நிகழ்வொன்றை நேரடியாகக் கண்ட நாள் அன்றைக்கு.



விடியற்காலை அகில இந்திய வானொலி நிகழ்வு முடித்து அங்கேயே ஓய்வெடுத்தபின், காலை 9மணிக்கெல்லாம் அரங்கிற்குள் வந்தாயிற்று. இந்திய வழக்கமான தாமதத்திலிருந்து அந்நிகழ்வும் தப்பவில்லை. 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வு 10.15க்கு தொடங்கியது. மொத்த அரங்கும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. தேநீர், உணவு, மெய்நிகர் கண்காட்சி, கலந்துரையாடல் வெளி என திட்டமிடப்பட்டமைந்தது சிறப்பாக இருந்தது.

பிபிசி சார்பில் முதன்முறையாக தில்லியில் இந்நிகழ்வு நடைபெற்றது. பிபிசி நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 100 பெண்களுள் ஆரண்யா ஜோஹர், நந்திதா தாஸ் முதலான இந்தியப் பெண்களுடன் பன்னாட்டுப் பெண்களும் பங்கெடுத்தனர். இருக்கை இரண்டும் மின்திரை ஒன்றும் இடம்பெற்ற மேடை ஒட்டுமொத்த அரங்கையும் மாலை வரை அயர்ச்சியுறாது இருக்கவைத்தது.

வெவ்வேறு துறை, பேசும் ஆங்கிலமும் வெவ்வேறு உச்சரிப்பு, வெவ்வேறு பண்பாட்டைப் பின்னணியாகக் கொண்ட பெண்கள் தம் பங்களிப்பு அத்துறையில் பெரிய மாற்றத்தைக் கொடுத்திருந்தது. அதனால், பிபிசி அடையாளப்படுத்தியிருக்கும் என்பதை அப்பெண்களின் off the stage செயல்படுகளால் அறியமுடிந்தது.



கண்முன்னே தாய் எரிந்து தற்கொலை செய்துகொள்ள, இளம்பிராயத்திலே பாலியல் வன்முறைக்கு ஆளாகிய நடாஷா நோயலின் உரை உடலியல் சிந்தனைக்குரியது. பெண்களின் பலம் உடல். அதைத்தான் காலாகாலமாக பலவீனமாகச் சித்திரித்துக் கட்டமைத்திருக்கிறது சமூகம். அச்சமூக உளவியலிலிருந்து விடுபடுவதற்கான உடல் சார்ந்த நேர்மறை எண்ணங்களை அவர் எடுத்துரைத்தார். அரங்கிலேயே சிரசாசனம் (தலைகீழ் நிற்பது) செய்தார். பொத்தம் பொதுவாக எதிர்க்கும் போக்கில் பாஜக அரசு கொண்டுவந்தாதாலேயே யோகா எதிர்ப்பு பரவலாகக் காணப்படுகிறது. இதனைத் தவிர்த்து பெண்ணுடலை வலுவாக்க இவர்தம் (யோகா) பயிற்சி முயற்சிகள் வரவேற்புக்குரியன.  

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன் இன்ஸ்டாகிராம் பதிவில் (https://www.instagram.com/p/B32NcIrlpEH/) ஐந்தாண்டுகளுக்கு முன்பு உடல் பருத்தும் தற்போது உடல் கட்டுக்கோப்பாகவும் இருக்கும் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். பலரும் பாராட்டி பகிர்ந்திருந்தனர். தற்போதைய உலகில் உடலை மூலதனமாக்கி தொழில்புரிவோர் தவிர பிறர் உடலைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதுவே பருமனுக்கும், மேலான வியாதிகளுக்கும் இட்டுச்செல்கிறது. குண்டான உடலுக்கு foodie என்று பெயரிடுகிறோம். மரபு வழி உடல் பருமனைத்தாண்டி உடலைப் பரமாரித்தலின் தேவையை நடாஷா நோயல் சுட்டிக்காட்டினார். மாலை நிகழ்வு முடிந்ததும் குருவி மிட்டாய் சிரிப்பழகன் ஜி.கே.தினேஷ்-ஐ நடாஷாவிடம் அழைத்துக்கொண்டுபோய் அறிவுரைச் சொல்லச் சொன்னேன். அதைக் காதில் கூட ஏற்றிக்கொள்ளவில்லை அவன்.



காலையில் அரங்கேறிய பெண்களில் ஆரண்யா ஜோஹருக்கு அடுத்து, மிகக் கவர்ந்தவர் டேனில் பீலேக். அவரது எண்ணம் மிகப்பெரிய மாற்றத்திற்கான சிறிய விதை. 3டி ஆடை வடிவமைப்பிற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஆடைகள் பெரும்பாலும் மறுசுழற்சிக்கு ஆட்படுவதில்லை. எலைட் மக்கள் அன்புசுவர் போன்ற முறைகளில் தங்களின் பயன்பாடற்ற உடைகளை எளிதாக வெளியேற்றிவிடுகின்றனர். உலகளவில் உற்பத்தியாகும் ஆடைகளோடு ஒப்பிடுகையில் பயன்படுத்தப்பெற்று மறுசுழற்சியாகும் ஆடைகள் மீச்சிறு அளவேயாகும். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக டேனில் பீலேக் முன்வைப்பது 3டி ஆடைகள். ஆடை உலகின் எதிர்காலமாக அவர் இதைக் கருதுகிறார். அவரது உரை விளக்கத்திற்குப் பின்பு இது மெய்யெனவும் நம்ப முடிந்தது.

3டி ஆடைகள் மறுசுழற்சிக்குரியது, உள்ளாடை முதல் பாரம்பரிய ஆடைகள் வரை வடிவத்தை உள்ளீடு செய்தால் இயந்திரம் உடையைத் தந்திடும். துவைக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகமாகும். மறைநீர் பொருளாதாரத்தில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும். காற்று எளிதாக உட்புகுந்து செல்வதால், உடலியல் பிரச்சினைகளும் இருக்காது. பண்பாட்டை நீர்த்துப்போகா வண்ணம் போராடி வரும் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வுடை, பயன்பாட்டிற்கு வர மீப்பெரும் காலம் எடுத்துக்கொள்ளும். புடவை முதலான உடைகளையும் தயாரிக்க முடியுமா என்பது போன்ற கேள்வி வந்தது, சிரிப்பாக இருந்தது. புடவை போன்ற கலைநுட்பம், உருநேர்த்திமிகுந்த பிரதியை 3டி உடையால் ஈடு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. 3டி உடையின் மாதிரி அரங்கத்திற்கு வெளியே இருந்தது. இதில் உடை மடிப்புகளுக்கு வாய்ப்பில்லை.  உடை உடலை மறைக்கவே!


தேநீர் இடைவெளிக்கு வெளியே வந்திருந்த போது, நந்திதாதாஸ் சாதாரண உடையணிந்து தோள்பட்டை பை அணிந்து வளாகத்துள் வந்தார். பேனாவும் பெனோவும் நினைவு தான் வந்தது. நந்திதாதாஸ் மிகச் சரளமாகக் கேள்விகளைக் கையாண்டார். வெள்ளை என்பது அழகல்ல, நிறம் என்பதை நிரூபிக்கும் வகையில் உரை இருந்தது. அரங்கிருந்தவர்களிடமிருந்த கேள்விகள் திரைத்துறையொட்டியே அமைந்தாலும் நிறம் சார்ந்து கருத்துகளே பதில்களாயின. நிறமே சாதனை எனச் சராசரியானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சாதனை புரிபவர்களின் நிறம் எப்போதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

பாலியல் உறவுகள் குறித்துப் பேசிய ப்ரகதி சிங் மற்றும் ஆரண்யா ஜோஹரிடம் எப்படி நீங்க இவ்வளவு வெளிப்படையா பேசறீங்க, இதுக்கான தைரியம் எங்கருந்து வந்தது? வீட்டுல திட்ட மாட்டாங்களா?” போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இருவரும் தந்த பதில், “பெற்றோரின் ஒத்துழைப்பு, பெற்றோரின் வழிகாட்டுதல்இவை தான்.

ஆமாம். பெற்றோர் நினைத்தால் தான் எவ்வளவு மாற்றங்களைக் கொடுக்க முடிகிறது. முற்போக்கான பெற்றோர்கள்கூட பிள்ளைகளின் எதிர்காலத்தை சில முன்முடிவுகளால் மட்டுப்படுத்திவிடுகின்றனர். பிள்ளைகள் தன் சிறகை விரித்துப் பறப்பதற்கு ஆரோக்கியமான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தரலாம். இல்லெனில், அவர்களை சுமந்து பறப்பதற்கும் பிள்ளைகள் தயார். நீ பறக்க வேண்டாம், கூட்டினுள்ளே இரு! என்று பெற்றோர்கள் தடுக்கவேண்டாமே...!



உணவு இடைவெளியில் ஆரண்யா ஜோஹர், விஐபி+பிபிசி நிறுவனத்தாருக்கு ஏற்பாடு செய்திருந்த ரங்கத்தில் உண்டு முடித்துவிட்டு மாணவர்களுக்கான உணவரங்கத்தில் வந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பலரும் அவரோடு படம் எடுத்துக்கொண்டிருக்க ஒரு மாணவி உங்கள ரொம்பப் பிடிக்கும்  ‘ஹக்செய்துக்கவா? என்று கேட்டு, ‘ஹக்செய்துவிட்டு, அவரோடு படம் எடுக்காமலே சென்றார். ஆரண்யாவின் பேச்சு உண்மையிலே அவரிடத்துத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றியது. ஒரு ஆரண்யா தோன்றுவதற்குத் தான் நேரம் எடுக்கும். ஆரண்யாக்கள் தங்கள் நிகழ்கால/எதிர்கால பிரதிகளை எளிதில் உருவாக்கிவிடுகிறார்கள்.

இவர் தான் ஆரண்யா ஜோஹர் என்று தெரியாத நாட்களிலேயே அவரது காணொளிகளைப் பகிர்ந்திருந்ததுண்டு. அவரது அநாயசமான பேச்சும் ஆங்கிலமும் உணர்வுகளைக் கடத்தும் திறனும் ரசிக்கவைத்து சிந்திக்க வைத்தவை. பிபிசியினால் கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்ட ஆரண்யா தன் முழு உரையும் மின்திரை உதவியுடன் கொடுத்தார். தன் கருத்துகளை உணர்வுகளாக அப்படியே கடத்தினார்.  இருமை எதிர்வுகளையும் வளர்க்கும் நவீன ஊடகப் பெருக்கத்தில் முற்போக்கையும் விழிப்புணர்வையும் ஒருசேர வளர்க்கும் இளந்தலைமுறை இன்ஃப்ளுயன்சர்களில் ஆரண்யா ஜோஹரும் ஒருவர்.

 Gina Zurlo (religion) எதிர்காலத்தில் மதங்களின் ஆட்சி குறித்து இவரது உரை இருந்தது. சுகி சிவம் தனது பேச்சில் ‘எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், மதங்களைத் தாங்கிப் பிடித்திருக்கும் வேரே பெண்கள் தான். பெண்கள் மதம் எனும் கருத்திலிருந்து நீங்கிவிட்டால், ஆண்கள் தானாகவே வெளியேறிடுவார்கள். எவ்வளவுதான் அடிமைப்படுத்தினாலும் பெண்களே அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு மதம் ஆட்சி செலுத்துவதை அவரது உரையின் சாரம் தெரிவித்தது. சில புள்ளிவிவரங்களை அவர் தெரிவித்தார். அதை இங்கே பதிவு செய்வது தேவையற்றது என்பதால் வெளிப்படுத்தவில்லை. தொழில்நுட்பங்கள் முன்னேறும் அதேவேளையில், பெண்களே நாளைய உலகில் மதத்தைத் தலைமையேற்பார்கள். இன்னும்சொல்லப்போனால், பெண்களுக்கென தனி மதம் உருவாக்கினால் அதுவே உலகை ஆளும் என்றும் உவகை பூத்தார்.

Susmita Mohanty (science and space)

சுஸ்மிதா மோஹந்தி, விண்வெளி அறிவியல் துறை எதிர்காலத் திட்டங்களையும் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான திட்டங்களையும் எடுத்துவைத்தார். குறிப்பிட்ட தொகையில் விண்விமானங்களின் பயணத்தை சராசரி மனிதனுக்கும் அறிமுகப்படுத்தினார். இவர் குறிப்பிட்ட எதுவும் ஏரோபிளேன்குறித்ததன்று. விண்வெளிப் பயணம் குறித்ததே. விமானப் பணிப்பெண்கள் எனும் நிலையிலிருந்து விண்வெளி ஓடத்துக்குப் பொறுப்பேற்கும் சுஸ்மிதா மோஹந்தி நம்பிக்கைத் தளிர்களே.


Marilyn Waring and Subhalakshmi Nandi (unpaid work) நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பெண்களின் வருமானம் பெறாமல் செய்கின்ற வேலைகள் ஏற்படுத்தும் மதிப்பை கலந்துரையாடல்வழி எடுத்துரைத்தனர். இந்த உரையை, சமையலறையே கதியெனக் கிடக்கும் சீரியல்களில் தொலைத்தவர்கள் கேட்டிருக்க வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தின் பன்முகமும் அதில் பெண் உடலுழைப்புக்குக் கிட்டாத ஊதியமும் எவ்வாறு மறைந்துள்ளதென்பது அறிந்துகொள்ள இயலும்.

 


Raya Bidshahri (education)

ராயா பிட்ஷாஹ்ரி கல்விப் புலத்திற்காகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். எதிர்காலக் கல்விமுறையில் பாடங்களற்று, பள்ளிக்கூடங்களற்று எத்தகைய மாற்றங்களைக் கொணர வேண்டும் என்பது அவரது பேச்சின் அடிநாதமாக விளங்கியது.



Sarah Martins da Silva (fertility)

சாராஹ் மார்டின்ஸ் ஆண்களின் மலட்டுத் தன்மை பெண்களை எவ்வாறெல்லாம் பாதிக்கின்து என்பதைச் சுட்டினார். ஆண்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் கடிகாரம் முதற்கொண்டு பல உபகரணங்கள் ஆணின் பாலியல்/உளவியல்/உடலியல் செயல்பாட்டை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதைத் தெளிவுபடுத்தினார். அதற்கான காரணங்களையும் அலசி, அதிலிருந்து விடுபடுதலுக்கான நேர்த்தியான முறைகளையும் சுட்டினார்.

Pragati Singh (sexuality and gender identities) - Beyond sex: The future of love, family and intimacy

Hayfa Sdiri (business and entrepreneurship) - How virtual investment could stop North Africa's brain-drain

Vasu Pirmlani (environment) - One step for (wo)man, a giant step for mankind: A talk on the Precautionary Principle and a history of the world

Paola Villareal (justice and data equality) குறித்தும் உரை நிகழ்த்தினர். மாலை ஆறு மணிக்கு மேல் ஆயிற்று அனைத்தும் முடிய. பின்னரே, கிளம்பி அறை வந்து, அன்றிரவே தமிழகம் திரும்பியாயிற்று. ஒரு நேரத்தில் பல்வேறு பொருள்தளங்களில் இந்த நிகழ்வை கொண்டு சேர்த்த பிபிசிக்கு நன்றி.

-தக | 22.10.2020