நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

நடந்து வந்த ஆய்வுப் பாதை: பேரா. அண்ணாமலை அவர்களின் நேர்காணல்

 நடந்து வந்த ஆய்வுப் பாதை:

சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு நேர்காணல்

பேராசிரியர் அண்ணாமலை சிகாகோ பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற தருணத்தில்  மே 2021இல் நடந்த நேர்காணல். நேர்கண்டவர் பேராசிரியர் கான்ஸ்டான்டின் நகாசிஸ். இவர் மானிடவியல் துறையில் மொழி மானிடவியல் (Linguistic Anthropology) ஆய்வாளர்பல துறைகளில் உள்ள தென்னாசியா சார்ந்த ஆய்வில் ஈடுபட்டவர்களின் பல்கலைக்கழகம் முழுவதுக்குமான கூட்டமைப்பின்  (Committee on Southern Asian Studies, COSAS) இயக்குநர்தமிழ் இளைஞர் கலாச்சாரம்தமிழ் சினிமாவின் கலாச்சார அம்சங்கள் ஆகியவை பற்றிக் கள ஆய்வு செய்பவர். 

ஆங்கிலத்தில் நடந்த நேர்காணலின் மூலத்தை COSAS-இன் இணையதளத்தில் கேட்கலாம்(https://southasia.uchicago.edu/annamalai-interview/). இதன் தமிழ்  வடிவத்தை அச்சில் வெளியிட அனுமதித்த COSAS-க்கு நன்றி. 

உரையாடல் மொழியைப் பேசிய இருவருக்கும் தெரிந்த விசயங்கள்  மறைவாக இருந்ததை வெளிப்படுத்தவும் வாசிப்பு எளிமைக்காகவும் மொழிபெயர்ப்பு பேராசிரியர் அண்ணாமலையின் ஒப்புதலுடன்  சில உரிமைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. 

மொழிபெயர்ப்பாளர்: த.தமிழ் பாரதன். மொழிபெயர்ப்பைப் படித்துப்பார்த்துத் திருத்தித்தந்த பேராசிரியர் அண்ணாமலைக்கு இவரது நன்றி.

நேர்காணல் வெளியான நூல் விவரம்: தமிழின் மீது தூரத்துப்பார்வை பேரா. இ. அண்ணாமலையின் பங்களிப்பு. (பக்கம்:31-53) என்.சி.பி.எச் வெளியீடு 

நேர்காணல்

நகாசிஸ்:  ம்..ம்..ம்.. நம் உரையாடலை உங்கள் சிகாகோ வாழ்க்கையிலிருந்து துவங்கலாம் என்று நினைக்கிறேன். சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு எப்படி வந்தீர்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.  நீங்கள் உலகம் முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணியை ஏற்று நடத்தியிருக்கிறீர்கள்யேல் பல்கலைக்கழகம்அயல்நாட்டு மொழிகளுக்கான டோக்கியோ பல்கலைக்கழகம்மேக்ஸ் பிளாங்க் ஆய்வு நிறுவனங்கள்,  மெல்போர்ன் பல்கலைக்கழகம் என்று சிலவற்றில் கற்றும் கொடுத்திருக்கிறீர்கள். கல்வித்துறைக்கான மொழிக் கொள்கைகளை வகுப்பதில் பங்காற்றியிருக்கிறீர்கள்.  இந்தியாவில் மைசூரில் இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில் பல நிலைகளில் பணிபுரிந்திருக்கிறீர்கள். நீங்கள் முதலில் கல்வியாளராகஆய்வாளராக உருவாகத் துவங்கியது சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்று நினைக்கிறேன். உங்கள் கல்வி வாழ்க்கையின்  துவக்கக் கட்டத்தில் இங்கு வந்தீர்கள்பின் நிறைவுக் கட்டத்தில் மீண்டும் வந்தீர்கள்.  முதலிலும் பணி ஓய்வுக்குப் பின்பும் எப்படி இங்கு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விருப்பம்இதைச் சொல்வீர்கள் என்பது என் நம்பிக்கை. இங்கிருந்து நம் உரையாடலைத் துவங்கலாம்.  

 

அண்ணாமலை: சிகாகோ பல்கலைக்கழகத்துடன் எனக்குள்ள அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பை வழங்கியமைக்குத் தங்களுக்கும் COSASக்கும் நன்றி. என் மொழியியல் பயணம் மிகவும் நீண்டது! 1960ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் தமிழ் கற்பித்தபோது​​மொழியியல் புதிய பாடமாக இந்தியாவில் அறிமுகமானது. மொழியியலின்பால் ஈர்க்கப்பட்டுகோடைக்காலத்தில் அதில் பயிற்சி பெற்றேன்பின்னர் இந்தப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் கற்பிக்கத் தொடங்கினேன். அப்போதுதான்சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. எனது மொழியியல் பயிற்சியை வலுப்படுத்த விரும்பியதாலும்சாம்ஸ்கியின் மொழியியல் கொள்கைக்குக்  குறிப்பிடத்தக்க இடமாக சிகாகோ பல்கலைக்கழகம் விளங்கியதாலும் அந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டேன்.  தெற்காசியத் துறையில் விரிவுரையாளராக நான் பாடம் கற்பிக்கையில்மொழியியல் மாணவனாக இருக்கவும் அனுமதிக்க வேண்டுமென நிபந்தனை விதித்தேன். இதெல்லாம் நடந்தது 1966-ஆம் ஆண்டு.என் திருமணத்திற்குப் பிறகு,எனக்கும் என் மனைவிக்கும் திருமணப் பரிசாக அமைந்தது இந்த வாய்ப்பு!  1966 செப்டம்பரில் இருவரும் சிகாகோ வந்தடைந்தோம். அடுத்த ஐந்து ஆண்டுகள் அங்குதமிழ் கற்பித்தேன். அதே சமயம்மொழியியலில் தமிழ் குறித்த தொடரியல் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றேன். ஏ.கே. ராமானுஜன் என்னுடன் பணியாற்றியவர்களுள் மூத்தவர். அந்நாட்களில்தெற்காசிய ஆய்வு தனித்துறையாக உருவெடுத்துஇரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. அதனால் அத்துறையின் தொடக்கக் காலத்திலிருந்தே அதில் பங்காற்றி வருகிறேன் என்று சொல்லலாம். மானுடவியல்அரசியல்சமூகவியல் மற்றும் தெற்காசிய ஆய்வு போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் நடந்தது. கற்பித்தலைத் தவிரகற்பித்தலுக்குத் தேவையான பாடங்களை உருவாக்க வேண்டியிருந்தது. நான் கூறியதுபோல்துறை புதியதுமாணவர்களுக்குத் தமிழ்ப் படிப்பு புதியது. எனவேஇந்த நாட்டில் தமிழ் கற்கும் பலரும் அறிந்திருக்கும் ஜிம் மற்றும் ராஜா உரையாடல்களை உள்ளடக்கிய தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான பாடங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டேன்.  ஏ.கே. ராமானுஜனுடன்  இணைந்து உருவாக்கிய Reference Grammar of Tamil பதிப்பிக்கப்படவில்லை எனினும்தமிழ் கற்பவர்களுக்குப் பயன்தந்தது.

 

நகாசிஸ்: ஜிம் மற்றும் ராஜா உரையாடல்கள்ஜேம்ஸ் லிண்ட்ஹோமுடன் இணைந்து நீங்கள் எழுதியதா?

 

அண்ணாமலை:  ஜேம்ஸ் லிண்ட்ஹோம் இந்தியாவில் மதுரையிலிருந்த நாள் முதலே எனது நண்பர். அவர் அந்நேரத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் என்னுடன் மொழியியல் படித்தார்.  ஜிம் - ராஜா உரையாடலை உருவாக்கும்போது இருவரும் மொழியியல் மாணவர்களாகவும் நண்பர்களாகவும் கலந்துபேசியிருக்கிறோம்.

நகாசிஸ்: மொழியியலில் உங்கள் ஆலோசகர் ஜேம்ஸ் மெக்காலேயா?

அண்ணாமலை: ஆம். எனது மொழியியல் முனைவர் பட்ட ஆய்வேட்டுக் குழுவின் தலைவராக ஜேம்ஸ் மெக்காலே இருந்தார். அவருக்குத் தமிழ் தெரியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்ஆனால்,அவர் ஜப்பானிய மொழியில் அறிஞராக இருந்ததால்ஜப்பானிய மொழியிலிருந்து சில எதிர்நிலைச்சான்றுகளைக் கொண்டுவந்து தமிழில் பயன்படுத்திப் பார்ப்பார்சில வழிகளில் தமிழைப் புரிந்துகொள்ள இது முக்கியமானதாக இருந்தது.

நகாசிஸ்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படித்துவிட்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான உங்கள் நிலைமாற்றம் எப்படி இருந்தது?

அண்ணாமலை: இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் குறிப்பாக,சிகாகோ பல்கலைக்கழகத்தில்பாடம் கற்பிக்கும் விதம் புதிய அனுபவமாக இருந்தது. (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தமிழ் மற்றும் மொழியியல் துறையில் புகழ்பெற்ற அறிஞரான என் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்திடம் தமிழ்க் கல்வி அனுபவம் பெற்றேன்இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள கற்பிக்கும் வழமைப்படி பேராசிரியர் என்பவர் நீதிபதியைப் போன்றவர்அவர் தீர்ப்புகளை வழங்குவார்அதை மாணவர்கள் ஏற்றுக்கொள்வோம். ஆனால் மெக்காலேயின் வகுப்பில் எனக்குக் கிடைத்த முதல் அனுபவமே மாறுபாடானதுஅவர் சாம்ஸ்கியை விமர்சிக்கும் வழக்கறிஞரைப் போன்று பாடம் நடத்துவார். இது எனக்கு உண்மையிலேயே புதிய வெளிச்ச அனுபவமாக அமைந்தது. இந்தியாவில் புத்தகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட அறிவு மிகவும் மதிக்கப்படும்அது சர்ச்சைக்குரியதாகக் கொள்ளப்படாது. ஆதலால்சாம்ஸ்கியின் எழுத்தை  விமர்சிக்கும்போது,இந்தியாவில் எனது மாணவப் பருவத்தில் மிகுந்த மதிப்புடன் நடத்தப்பட்டவர் இப்படி விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறாரே என ஆச்சரியம்  தோன்றும். நான் கற்பிக்கும் போது இந்த உணர்வு என்னுள்ளே இருக்கிறதுஇதனால்தமிழ் மீதான எனது பார்வை குறித்து என்னிடம் கேள்வி கேட்க மாணவர்களை எப்போதும் ஊக்குவிக்கிறேன்.

நகாசிஸ்: இந்தியாவில் தமிழ் கற்பித்தீர்கள்இங்கு முனைவர் பட்ட ஆய்வு செய்ய வந்தபோதும் கற்பித்தீர்கள். SALC மூலமாகத் தமிழ் மொழி கற்பவர்களுக்குக் கற்பித்தீர்கள். இங்கு தமிழ் மாணவர்கள் வித்தியாசமாக இருந்தார்களா?




அண்ணாமலை: ம்ம்.., அப்படிச் சொல்ல முடியும்இந்தியாவில் கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் கற்பிப்பதிலிருந்துஅமெரிக்காவில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் நிலை ஏற்பட்டது. பேச்சு மொழியைக் கற்பிப்பதென்பது இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டதென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த மாற்றம் முற்றிலும் புதிதன்றுஏனெனில்இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வரும் அமைதிப்படை (Peace Corp) தன்னார்வலர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்த அனுபவம் எனக்கு இருந்தது. எனவேஇரண்டாம் மொழி கற்பித்தல் முறைகளையும் கல்விமொழி மீதான அமெரிக்க மாணவர்களின் அணுகுமுறையையும் வெளிக்கொணர்ந்தேன். அந்த வகையில்அமெரிக்க மாணவர்களின் வகுப்புகளில் இது எனக்குப் புதிய கற்பித்தல் அனுபவமாக இல்லை. அந்தக் காலத்தில் அமெரிக்க மாணவர்கள் பேச்சுத் தமிழில் இரண்டு காரணங்களுக்காகக் கவனம் செலுத்தினார்கள். முதலாவதுஎனது பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்குக் களப்பணி தேவைப்படும் துறைகளைச் சேர்ந்தவர்கள்எனவே அவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதில் தேர்ச்சி பெற விரும்பினார்கள். இரண்டாவதுஅந்தக் காலத்தில் - அதாவது அறுபதுகளில் – தமிழ்க் குடும்பத்திலிருந்து தமிழ் படிக்க வரும் மாணவர்கள் யாருமில்லைஇப்போதெல்லாம் தமிழ்க் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள்தமிழ் மொழியைப் பேசுவதைவிடவும் படிக்கவும் எழுதவும் விரும்புகிறார்கள்தமிழ் பேச அவர்களுக்கு ஓரளவு தெரியும். அதோடுதெற்காசிய இலக்கியத்தில் முதுகலைப் பெறப் படிக்கும்  மாணவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். இதனாலெல்லாம் இலக்கியத் தமிழைப் படிப்பவர்கள் குறைவு. எனது பெரும்பாலான மாணவர்கள் மானுடவியல்,சமூகவியல் அல்லது அரசியல் துறைகளிருந்து வந்தவர்களாதலால்பேச்சுத் தமிழில் பாடங்களை எழுதுவதே எனக்குப் பணியாக இருந்ததுஇது சிகாகோவில் மட்டுமின்றி இந்த நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருந்ததுரோமன் எழுத்துக்களில் பேச்சுத் தமிழை எழுதுவது தமிழ் கற்பித்தலில்  வழக்கம். அப்போது பேச்சுத் தமிழில் எழுதுவதற்கு தரப்படுத்தப்பட்ட  எழுத்துக்கூட்டல் (spelling) இல்லை. எனவேதொடக்ககநிலைப் பாடங்களான ஜிம் - ராஜா உரையாடல்கள் ரோமன் வரிவடிவில்தான் இருக்கும். தமிழ் ஒலிப்பை ரோமன் எழுத்தில் குறிப்பதில் சில சிக்கல்கள் இருந்தனசரியான உச்சரிப்பைப் படிப்பது கடினம். அதனால் நான் சிகாகோவுக்கு இரண்டாவது முறை வந்தபோது​​அந்தப் பாடங்களைத் தமிழ் எழுத்துகளுக்கு மாற்றினேன்;  பேச்சுத் தமிழுக்கான எழுத்துக்கூட்டல் முறையை நான் உருவாக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டு மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாகப் பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் முறையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம்.





 

நகாசிஸ்: பெரும்பாலும் இரண்டாம் மொழி கற்பித்தலுக்குப் பயிற்றுவிப்பது மொழியியல் துறையில் இருக்காது. எனவேமொழியியலில் பயிற்சி பெற்றவர்கள் மொழியியலுக்கு  இணையான வேலையாக,இரண்டாம் மொழி கற்பித்தலைச் செய்யும் வாய்ப்பு இல்லை. நீங்கள் ஒரே சமயத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டதோடு பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தீர்கள்இதை எப்படிச் செய்தீர்கள் என்பதைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளேன்நீங்கள் மொழியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதிலும் மொழியைக் கற்பித்ததிலும்  நீங்கள் மேற்கொண்ட அணுகுமுறையில்  மொழியியல் தாக்கம் ஏற்படுத்தியதாக உணர்கின்றீர்களா?

அண்ணாமலை: தாக்கம் மிகவும் உண்மை.  சிகாகோ மொழியியல் துறைஅந்தக் காலத்தில்சாம்ஸ்கியின் இலக்கணக் கொள்கையின் அடிப்படையில் தொடரியல் கோட்பாட்டில் கவனம் செலுத்தியது. பயன்பாட்டு மொழியியல் அல்லது சமூக மொழியியல் கற்றுக்கொடுக்கப்படவில்லை. எனவேஇந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில் பணிபுரிய மைசூர் திரும்பியபோது​​மொழி மற்றும் மொழிக்கல்வி தொடர்பான சமூகப் பிரச்சினைகளுக்காகஇலக்கணப் புலமையிலிருந்து என் கவனம் மாற வேண்டியிருந்தது. அது வேறு கதை. சிகாகோவில்நீங்கள் சொன்னதுபோல்மொழியியல் துறையில் இரண்டாம் மொழி கற்பித்தல் பற்றிக் குறிப்பிடத்தக்க பயிற்சி இல்லை. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழி கற்பித்தலில் சிறிது பயிற்சி பெற்றிருந்தேன். பெரும்பாலும்அது மாணவர்களின் தேவைகளிலிருந்து கற்ற சுயமான அறிவு எனக்கு அமைந்தது. மொழியியலிலிருந்து பெற்ற ஒரு திறனை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்இது நான் அடிக்கடி சொல்வது தான்என் மாணவர்கள் தமிழ் கற்கும்போது என்னைக் கேட்ட கேள்விகளுக்கு மொழியியல் சார்ந்து பதில் கண்டுபிடிக்க என்னைத் தூண்டின. எனவேதமிழின் சில இலக்கணக் கட்டமைப்புகள்அவற்றின் பயன்பாடுகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க அப்போது எனக்கிருந்த மொழியியல் பயிற்சி உதவியாக இருந்தது. ‘தமிழின் ஒவ்வொரு கட்டமைப்பையும் சில தற்கால மொழியியல் கோட்பாடுகளின் மூலம் விளக்குவது’ எனது தமிழ் கற்பித்தலின் தனி அடையாளம் என்று கூறலாம்.

 

நகாசிஸ்: நீங்கள் மைசூர் என்று குறிப்பிட்டதால் இதைக் கேட்கிறேன்சிகாகோவில் முனைவர்  பட்டம் பெற்ற பிறகுநீங்கள் எங்கு சென்றீர்கள்பிறகு மீண்டும் சிகாகோவிற்கு எப்படித் திரும்பி வந்தீர்கள் என்பதைப் பற்றியும் கேட்க விரும்புகிறேன்.

 

அண்ணாமலை: 1969இல் முனைவர் பட்டம் பெற்றேன்.  1971இல் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில் சேர்ந்தேன். இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்தது;இந்திய மொழிகளின் வளர்ச்சியே இந்நிறுவனத்தின் இலக்குகல்வியில் பயன்படுத்துவதற்காக இந்திய மொழிகளைத் தயார்ப்படுத்துவது என்று மொழி வளர்ச்சி  வரையறுக்கப்பட்டதுபழங்குடி மொழிகள் முதல் வட்டார மொழிகளைக் கற்பிப்பது வரை பரந்த  களம் இது. எனவேஇந்த வேலை பயன்பாட்டு மொழியியலை அடிப்படையாகக் கொண்டு செய்வதுஇது எழுதப்படாத மொழிகளுக்கு வரிவடிவம் வடிவமைப்பதிலிருந்து அவற்றைக் கற்பித்தற்குத் தேவையான பாடப்புத்தகம்அகராதி போன்ற கருவிகளைத் தயாரிப்பது வரை இருந்தது. இதில் இரண்டு சிறப்புத் தேவைகள் இருந்தன. ஒன்றுஇந்திய மாணவர்கள் ஒரு இந்திய மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கத் தனிப்  பாட தேவை. வட்டார மொழிகளில்  இருந்த  பாடப்புத்தகங்களே பயன்படுத்தப்பட்டன.  அவை தாய்மொழி மாணவர்களுக்கானவை. எனவேஇந்திய மாணவர்களுக்கான இரண்டாம் மொழி கற்பித்தல் கருவிகளைத் தயாரிப்பதில் நாங்கள் ஈடுபட்டோம்இது அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுஇந்திய மாணவர்கள் இந்திய மொழியின் இலக்கணக் கட்டமைப்புகள்பேசுவோரின் பண்பாடுகள் போன்றவற்றை ஊகிக்க முடியும். எந்த இந்திய மொழியும் தெரியாத அமெரிக்க மாணவர்களுக்கு இது கடினம். இருப்பினும்,  தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பிக்கும்போது சிகாகோவில் எனக்குக் கிடைத்த அனுபவம் உதவியாக இருந்தது.

இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில்மொழி கற்பிக்க உதவும் கருவிகளை நான் தயாரிக்கவில்லை.அவற்றை உருவாக்க மொழி ஆய்வாளர் குழு ஒன்று இருந்ததுநிறைய மொழி ஆசிரியர் பயிற்சிகளை நடத்தினோம்.  பாடத்திட்டத்தை வடிவமைப்பதுபாடப்புத்தகங்களை எழுத வழிகாட்டுவதுஆசிரியர் பயிற்சித் திட்டம் வரைவது போன்றவை என் வேலை. இந்த அனுபவம் சிகாகோவில் தமிழ் கற்றுக் கொடுக்க உதவியாக இருந்தது. 

இந்த நிறுவனம் இந்தியாவின் பன்மொழித் தன்மையைப் புரிந்துகொள்ள உதவியது. பழங்குடி மக்கள் மொழி என்று வரும்போது​​அவர்களில் படித்த இளைஞர்களுக்கு நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கான பயிற்சிபடைப்பாற்றல் உள்ள பழங்குடி இளைஞர்களுக்குப் புத்திலக்கியம் படைக்கப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும்இந்தியாவில் பல்வேறு மொழிகளின் சமூகப் பயன்பாடுகளை ஆய்வு செய்தோம்இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆய்வைச் செய்தோம். இந்தியாவில் நிலவும் பன்மொழியம் குறித்த இந்த ஆய்வானதுமொழிக் கொள்கைகளை உருவாக்க இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆகும்.  மொழிக் கொள்கைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன்இந்திய அரசின் மொழிக் கொள்கைகளைச் செயல்படுத்தும் கடமையும் இந்த நிறுவனத்துக்கு இருந்தது. இதனால்மொழிக் கொள்கை வகுப்பதுகொள்கையை அமல்படுத்துவது என்று இரண்டு வகையான தொப்பிகளை வேலையைப் பொறுத்து அணிய வேண்டியிருந்தது. 

இது போன்ற சமூக மொழியியல் சார்ந்த செயல்பாடுகளிலிருந்துநிறுவனம் மற்ற நாடு தழுவிய முதியோர் கல்வித் திட்டங்களுக்கு நகர்ந்ததுபழங்குடி மக்களின் மொழிகள் உட்படப் பல இந்திய மொழிகளில் எழுத்தறிவைத் தரும் தொடக்கநூல்களைத் தயாரித்தோம்

இவையே  நிறுவனத்தில் செய்த மொழி சார்ந்த செயல்பாடுகளின் நடைமுறை. இங்கு சிகாகோவில் நான் பெற்ற மொழியியல் பயிற்சியை எப்படிப் பயன்படுத்தினேன் என்ற கேள்விக்குநான் முன்பு குறிப்பிட்டது போல்சமூக மொழியியல்பயன்பாட்டு மொழியியல்நீங்கள் மானிடவியல் துறையில் இப்போது கற்பிப்பது போன்ற மொழியும் பண்பாடும் போன்ற எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்ற பதிலைத் தரவேண்டும்.   இவை அனைத்தும் நான் சுயமாகக் கற்றதே ஆகும்அதாவது,யதார்த்தமாகக் களத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வுகளைத் தேடுவதன் மூலம் கற்றதே ஆகும். பழங்குடி மொழிகளுக்கு இலக்கணம் தயாரிக்க ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியபோது எனது சிகாகோ மொழியியல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததுஇலக்கணங்களைத் தயாரிக்க மொழியியல் பயிற்சி வேறுவகையானதுஇலக்கணக் கொள்கைகளை உருவாக்க அடிப்படை அமைப்பது. நிறுவனத்தில் மொழி கற்பிக்க உதவும் இலக்கணம் (Pedagogical Grammar) அதிலிருந்து வருவது.  இந்த மாற்றத்துக்கும் மொழியியல் அறிவு வேண்டும்.  சிகாகோவில்  தமிழ் கற்றுக்கொடுக்கத் தேவையான இலக்கணம்  எழுத இந்தத் திறன் உதவியது.

 

நகாசிஸ்: உங்கள் முனைவர்  பட்டம் தமிழ் பேச்சுமொழியின் தொடர்பியலின் கூறுகளைப் பற்றிய விரிவான ஆய்வாகும். நீங்கள் CIILஇல் இருந்தபோது​​உங்கள் ஆய்வு ஆர்வங்கள் என்னவாக இருந்தன?  அவை உங்கள் வேலையில் ஏற்பட்ட மாற்றத்துடன் தொடர்ந்து இருந்தனவா?  சிகாகோவில்  மொழியியல் ஆய்வு செய்தபோது எடுத்துக்கொண்ட கேள்விகளைத் தொடர்ந்தீர்களா?  அந்தக் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் தேடினீர்களா?

அண்ணாமலை: ஆம். நான் தொடரியலில்குறிப்பாகத் தமிழ்த் தொடரியலில் மைசூரில் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தேன்எனது தனிப்பட்ட ஆராய்ச்சி தொடர்ந்தது


இதற்கு நிறைய வாசிப்புத் தேவைப்பட்டதுசாம்ஸ்கியின் மொழியியல் ஒவ்வொரு ஆண்டும் மாறிக்கொண்டே வந்தது. இது ஒரு சவாலாக இருந்தது. இரண்டாவதாகமொழியின் சமூக அடிப்படைகளை - சமூக மொழியியலை - நானே படித்தேன்இதில் எனது ஆராய்ச்சி இரண்டு பிரச்சினைகளைப் பற்றி இருந்தது. ஒன்று மொழிக்கொள்கை (language policy), குறிப்பாகக் கல்வியில் ஆங்கிலத்தின் பங்குபற்றியது. மற்றொன்றுமொழிகளுக்கிடையே உள்ள தொடர்புஇது என்னை மொழி மாற்றத்தில் ஆர்வத்தைக் கொண்டுவந்தது.  இந்தியாவின் பன்மொழிச் சூழலில் மொழிகளுக்கு இடையிலான தொடர்பு அம்மொழிகளில் இலக்கண மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எனது ஆராய்ச்சி ஆர்வத்தின் வழியேதமிழின் இலக்கணம்பன்மொழியத்துக்கான மொழிக் கொள்கைமொழித்தொடர்பு காரணமாக வரும் மொழி மாற்றம் ஆகிய மூன்று தளங்களிலும் ஆராய்ச்சி செய்து வந்தேன். இவை எனது ஆய்வுப் பரப்பை வரையறுத்தது. ஆய்வுப் பணிக்கும் இயக்குநர் பணிக்கும் இடையே சமநிலையை வைத்திருப்பது பெரிய சவாலாக இருந்தது. நான் அதை வைத்திருந்தேன் என்று சொல்லலாம்எனது ஆய்வு ஆர்வத்தையும் வேலையில் இருந்த சவால்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.  நான் முன் சொன்னது போல்இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில் எனது இளைய சகாக்களின் ஆய்வுகளை மேற்பார்வையிடவும்  ஆற்றுப்படுத்தவும் என் நிறுவனப் பணி பயன்பட்டதும் மகிழ்ச்சி. இந்தியாவில் அரசுத் துறை எப்படிச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்முடியாத அலுவல் பணிகளும்,கோப்புகளைப் பார்ப்பதும் மிகுதியான நேரத்தை எடுத்துக்கொள்ளும். அப்படிப்பட்ட நிர்வாகப் பணிகளுக்கிடையே  ஆய்வுப் பணியை இணைத்துச் செய்வதற்கு மிகப்பெரும் முயற்சி தேவைப்பட்டது. 

நகாசிஸ்:  நீங்கள் எப்போது அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தீர்கள்முதலில் யேல்  பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு...

அண்ணாமலை: இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில் என் பணியின் இறுதியாண்டில், ​ அதன் இயக்குநராக நான் இருந்தபோதுடோக்கியோ அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மொழிகள் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று நான் ஓய்வுக்காலம் வரும் முன்பே ஓய்வு பெற்றேன்.  டோக்கியோவில் ஓராண்டு ஆராய்ச்சி செய்தேன். நான் டோக்கியோவிலிருந்து திரும்பிய பிறகு எனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் வரும்போது ஏற்றுக்கொண்டேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் அல்லது அது போன்ற நிர்வாகப் பணிகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.  அயல்நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து ஆராய்ச்சி வாய்ப்புகள் வந்தன. நான் ஆறு மாதங்கள் லெய்டனில் ஆசிய ஆய்வுகளுக்கான பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தேன். பிறகுமெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும்வேறு சில இடங்களிலும் ஆய்வாளனாக  இருந்தேன்.  தெற்காசிய ஆய்வுத் துறையைத் தொடங்க முனைந்துகொண்டிருந்த யேல் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் கற்பிக்கும் திட்டத்தைத் துவங்க அழைப்பு வந்தது. யேல் பல்கலைக்கழகத்தில் தொடக்கக் காலத்திலிருந்தே சமஸ்கிருதம் உள்ளது;சமஸ்கிருதம் கற்பிக்கும் திட்டத்தை அமெரிக்காவில் முதன்முதலில் அமல்படுத்திய பல்கலைக்கழகம் இதுதான் என்று எண்ணுகிறேன். இந்தப் பல்கலைக்கழகம் சமஸ்கிருத ஆய்வை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்ப ஆய்வுகளில் ஒன்றாகப் பார்த்ததுதெற்காசிய மொழிகளின் ஆய்வாகப் பார்க்கவில்லைபுதிதாகத் தெற்காசியத் துறையைத் தோற்றுவித்தால் சமஸ்கிருதத்தை அதில் சேர்த்து அதை இந்திய மொழியாகப் பார்ப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கும். அதற்கு முன் இந்திதமிழ் என நவீன மொழிகளுக்கு இடமளித்து  அடித்தளம் இடவேண்டும் என்ற எண்ணம் அப்போது இருந்தது. அதனால் யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் படிப்பை உருவாக்க நான் அழைக்கப்பட்டேன்அங்கு 2009 வரை ஐந்து ஆண்டுகள் தமிழ் கற்றுக்கொடுத்தேன். அதன் பிறகு ஓராண்டு கழித்துத் திரும்பவும் சிகாகோ வந்தேன். 

நகாசிஸ்: நீங்கள் எந்த ஆண்டு CIILஇல் இருந்து ஓய்வு பெற்றீர்கள்?

அண்ணாமலை: 1995 ஆகஸ்ட்.

நகாசிஸ்: அதன் பின் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முனைவர் பட்டம் பெற்ற இடத்திற்கே திரும்பி வந்தது எப்படி?

அண்ணாமலை: யேல் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தம் முடிந்த காலகட்டத்தில்தனிப்பட்ட காரணங்களுக்காகத் தமிழ் கற்பிப்பதிலிருந்து ஓய்வு பெற்ற ஜிம் லிண்ட்ஹோமுக்குப் பதிலாகஇன்னொரு பயிற்றுவிப்பாளரைச் சிகாகோ பல்கலைக்கழகம் தேடி வந்ததுஅதனுடைய தெற்காசிய நாகரிகங்கள் மற்றும் மொழிகள் துறை என்னைத் தொடர்பு கொண்டபோதுஅதிகம் ​சிந்திக்கவில்லை ஆழ்ந்தேன்ஏனெனில் அது எனது இரண்டாவது வீட்டிற்குத் திரும்புவது போலிருந்தது. உடனே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்தொடக்கத்தில் தமிழ்ப் பயிற்றுவிப்பாளருக்கான மாற்று நியமனம் ஓராண்டுக்கு என்றே சொன்னார்கள். ஆனால்வருகைதரு பேராசிரியராக நான் பதினொரு ஆண்டுகள் விரும்பி இருக்கச் சொன்னார்கள். அதன் பிறகும் இருக்கச் சொன்னார்கள். நான் வயது காரணமாக ஓய்வு பெற்றேன்.

நகாசிஸ்: அப்படியானால் நீங்கள் சிகாகோவுக்கு வந்தது  2009 அல்லது 2010?

அண்ணாமலை: 2010 – 2011 கல்வி ஆண்டு.

நகாசிஸ்:  நான் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வந்ததும் அந்த ஆண்டுதான்.

அண்ணாமலை: நினைவிருக்கிறது.

நகாசிஸ்: நீங்கள் 1971இல் சிகாகோவிலிருந்து இந்தியா திரும்பியதாகச் சொன்னீர்கள். 39 ஆண்டுகளுக்குப் பிறகு துறையில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது என்பது குறித்துச் சொல்லுங்கள்

 

அண்ணாமலை: சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தெற்காசிய நாகரிகங்கள் மற்றும் மொழிகள் துறை (SALC) மட்டுமன்றிபிற துறைகளிலும் தெற்காசிய ஆய்வு நிலைபெற்று ஆழமாக வேரூன்றியுள்ளது. முன்னால் தமிழார்வம் இருந்த சமூகவியல்மானுடவியல்அரசியல் ஆகிய துறைகளுக்கு மேலாகச் சமயம்,  வரலாறுகலை வரலாறுஇசைசூழலியல்மானிட வளர்ச்சி,மரபணுவியல்  முதலான பல துறைகளிலும் தமிழ் அல்லது தமிழ்நாடு சார்ந்த ஆய்வு நடக்கிறதுதமிழ் ஆய்வு ஆர்வம் பரந்திருப்பதைக் காண்கிறேன்; SALC-இல்  முனைவர் பட்டம் பெறப் படிக்கும் மாணவர்களில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.  தமிழ் படிக்கும் மாணவர்களின் பின்னணியிலும் அதனால் தமிழ் கற்பிக்கும் முறையிலும் இது பிரதிபலிக்கிறது. திரும்ப இங்கு வந்தபோது பேச்சுத் தமிழைக் கற்பிப்பதிலிருந்து தமிழ் நூல்களைக் கற்பிக்கும் நிலைக்குச் தமிழ் கற்கும் சூழலை விரிவுபடுத்தினேன்இலக்கிய நூல்கள் மட்டுமல்லமரபிலக்கணங்கள்உரைநூல்கள்,ஆய்வுநூல்கள் மற்றும் கல்வெட்டுகள் முதலாகப் பல்வேறு பிரதிகளும் இதில் அடங்கும். பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காகத் தமிழ் கற்க வருவதால்எல்லாருக்கும் பொதுப்பாடமாக  ஒரு நூலைமட்டும் பாடம் சொல்வது சரியாகப் படவில்லைமாணவர்கள் எந்த நூலைப் படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கொடுத்தேன்எனது தமிழ்ப்பயிற்சியில்  பாடம் கேட்காத நூல் என்றாலும்மாணவர்கள் படிக்க விருப்பம் தெரிவித்தால்அது சவால்தான் என்றாலும்ஏற்றுக்கொண்டு பாடம் நடத்தினேன். 

நான் கவனித்த மற்றொரு பெரிய மாற்றம் பயிற்றுவிப்பாளரின் நிலை.  இப்போது அப்பதவி பயிற்றுவிப்புப் பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறதுஅறுபதுகளில் நான்  இருந்தபோது இவர்கள் விரிவுரையாளர்கள் எனப்பட்டனர்,  ​​துறையின் ஆசிரியர் கூட்டங்கள்,  COSAS அறிஞர் கூட்டங்கள் போன்றவற்றுக்கு இவர்கள் அழைக்கப்படமாட்டார்கள். அந்தக் கூட்டங்கள் விரிவுரையாளர்களின் களத்திற்கு  வரம்பிற்கு வெளியே இருந்தன. பொதுவாக மொழி கற்பித்தலின் நிலை உயர்வடைந்திருப்பதை இப்போது காண்கிறேன். இது பெரிய கட்டமைப்பு மாற்றமாகும்.

எனது தனி வாழ்வில்நான் சொல்லக்கூடிய பெரிய மாற்றம்தெற்காசிய ஆய்வுக்காக மேலும் மேலும் தமிழ் இலக்கியகலாச்சாரசமூகசமயஅரசியல் ஆய்வு நூல்களை வாசிப்பது. இவை  பல்துறை ஆய்வுகள். மொழியியல் ஆய்வுகளிலிருந்து வேறுபட்டவை. நான் 1960-இல் தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றேன்அதன்பிறகு மொழியியல் என்னை ஈர்த்தது. என் கவனம் முழுவதுமாக மொழியியலில் சென்றது. நான் தமிழில் பணிபுரிந்தாலும்அந்தப் பணி தமிழின் மொழியியல் இலக்கண அல்லது மரபிலக்கண ஆய்வுகள் தொடர்பாக இருக்கும். தமிழ் இலக்கியம் எனது தனிப்பட்ட வாசிப்பார்வமாகவே இருந்தது. நான் தமிழ் இலக்கியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கற்பித்ததில்லை. சுமார் 40 ஆண்டு இலக்கிய இடைவெளிநான் திரும்பி வந்தபோது மாணவர்களுக்குப் பேச்சுவழக்கு மற்றும் நவீன மொழியையும் தவிரஉயர்நிலை மாணவர்களுக்குக் கற்பிக்க நவீனத்திற்கு முற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களையும்  தேர்வு செய்தேன். தமிழ் இலக்கியத்துடன் இருந்த எனது தனிப்பட்ட  இடைவெளியால் மட்டுமல்லதமிழ் இலக்கியத்தை மீள்வாசிப்பு செய்வது சவாலானதுதான்எனக்குத் தனிப்பட்ட வாசகன் என்ற முறையில் இலக்கியத்தோடு அறிமுகம் இருந்தாலும் தமிழ் இலக்கியத்துடன் கல்விரீதியான தொடர்பு இல்லை. 

 மைசூரில் எனக்கு இருந்த சவாலைப் போன்றதே இந்தச் சவாலும்அதாவது, CIILஇல் சமூக மொழியியல் தொடர்பானவற்றைச் சொந்தமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததைப் போலவே நான் இரண்டாவது முறையாக சிகாகோ வந்தபோது​​தெற்காசியா பற்றி மிகுதியாக வளர்ந்திருந்த ஆய்வுகளை அறிந்துகொள்ள வேண்டியிருந்ததுமொழியியலில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது எனக்கு இந்த வளர்ச்சி முற்றிலும் தெரிந்திருக்கவில்லை. எனவேநீங்கள்- மானுடவியல்சமூகவியல்அரசியல் அறிவியல்தென்னாசியத் துறைகளில்  உள்ளவர்கள் தமிழைப் பற்றி எழுதுவதையோ அல்லது பிற இந்திய மொழிகளைப் பற்றி எழுதுவதையோ நான் வாசிக்க வேண்டியிருந்தது. மீண்டும் நான் இங்கு வரும்போது அடைக்க வேண்டிய இடைவெளியாக இருந்தது இது.

 

நகாசிஸ்: அறுபதுகளில் தமிழ்நாட்டில் உங்கள் அனுபவத்தைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன்,ஆனால் அதற்கு முன்புஉங்கள் இளங்கலைமுதுகலைத் தமிழ்ப் படிப்பு குறித்துக் கூறுங்களேன்.

 

அண்ணாமலை:  என் இளங்கலைப் பட்டம் கணிதத்தில்.

நகாசிஸ்: கணிதத்திலா?! சரி.  உங்கள் முதுகலைப் படிப்பு தமிழ்தானே. மொழியியல் தவிரஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்பிக்கப்பட்ட முறையில் உங்களுக்குச் சில அனுபவங்கள் இருந்திருக்கும். தமிழ்த் தொடரியல்உருபனியல்சமூக மொழியியல்பேச்சுத் தமிழ்மொழியரசியல் கொள்கை ஆகியவற்றில் கவனம் செலுத்திய பிறகுஉங்கள் இரண்டாவது ஆட்டத்தில்மீண்டும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட தமிழுக்கே திரும்பினீர்கள்நீங்கள் வயதில் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தபோது உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட சில இலக்கிய நூல்களை இப்போது ஒரு மாணவராக அல்லாமல் இலக்கிய ஆசிரியராக மறுவாசிப்புச் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இலக்கிய மாணவனாக இருந்து மொழியியல் ஆசிரியனாக மாறி மீண்டும் இலக்கிய ஆசிரியன் ஆக  இலக்கியத்தை மீண்டும் வாசித்து முழுச் சுழற்சி செய்திருக்கிறீர்கள். 

அண்ணாமலை: ஆம்நான் இப்படிச் சொல்வேன்:  இலக்கியத்தில் ஆர்வத்தை நான் ஒருபோதும் இழக்கவில்லைமொழியியலாளனாகவும் இழக்கவில்லை. தமிழ் பேசுபவன் என்ற முறையில்நவீன இலக்கியம் மற்றும் நவீனத்திற்கு முற்பட்ட இலக்கியங்களை வாசித்து வந்திருகிறேன். இலக்கியத்தைக் கற்பிப்பது முற்றிலும் மாறுபட்டதென்பது உங்களுக்குத் தெரியும். அதனால்இலக்கியத்தைக் கற்பிக்கும் சவாலை நான் எதிர்கொண்டபோது,  அது என்னைப் பயமுறுத்துவதாக நான் உணரவில்லை. அது எனக்கு அறிமுகமான வேலைதான். தமிழ் பேசுபவன்மொழியியலாளன் என்ற முறையில் என் முன் வைக்கப்படும் எந்தப் பனுவலையும் என்னால் உணர்ந்து கற்பிக்க முடியும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் அதை வெற்றிகரமாகச் செய்தேன் என்றே எண்ணுகிறேன். வகுப்புகளில் நாங்கள் வாசித்த தமிழ்ப் பனுவல்களின் பட்டியலைப் பார்த்தால்அது பரந்த அளவினதாக இருக்கும். தமிழ்ப் பனுவல்களைக் கற்பிப்பதில் சிக்கல் ஏற்படவில்லை. நான் முன்பு கூறியது போல்அவற்றை இலக்கியத் தத்துவார்த்தச் சூழலில் படிப்பதுதான் நேரம் எடுப்பதாக இருந்தது,  ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பொருள் பற்றிஒரு இலக்கியப் பனுவல் கையாளும் கருப்பொருள் பற்றி,  நகாசிஸ் அல்லது மற்ற சமூகஅறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இவற்றைக்   கற்றல் ஏறுபாதையாக இருந்ததுஅதைச் சவாலாக ஏற்றுக்கொண்டேன்இந்தச்  சவாலை ஏற்றுக்கொண்டதால்நான் சாம்ஸ்கியின் பிற்கால மொழியியலைப் படிப்பதில் சற்றுப் பின்தங்கியிருக்கிறேன் என்பேன்.

நகாசிஸ்: சரிதான்.  மொழியியலும் ரொம்ப மாறிவிட்டது.

அண்ணாமலை: ஆம்பல துறைகளில் முதன்மையில் இருப்பது என்பது முடியாத காரியம்!

 

நகாசிஸ்: தொல்காப்பியம் முதல் பெஸ்கி எழுதிய இலக்கணம் வரைசங்க இலக்கியத்திலிருந்து  பிற்காலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய ஆசிரியர்கள் எழுதிய பனுவல்கள் வரை எவ்வளவோ கற்றுக்கொடுத்துள்ளீர்கள்.  தமிழ் ஆய்வாளராக இந்த வகையான அனுபவம் தமிழ் மொழி மீதான உங்கள் பார்வையை மாற்றியதா?

 

அண்ணாமலை: ஆம்ஆனால் மாற்றம் இங்கிருந்து தொடங்கவில்லை. நான் சிகாகோவுக்கு வருவதற்கு முன்பே அது தொடங்கிவிட்டது. தமிழ்மொழி தானே வளர்ந்தது அல்லது தனிமையில் வளர்ந்ததுபிற மொழிகள் மற்றும் இலக்கியங்களிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது என்பது தமிழ்த் தேசியவாதக் கண்ணோட்டமாகும். இந்தக் கண்ணோட்டத்தில் எனக்குப் பிரச்சினை இருந்தது. இரண்டாவதுமுறை சிகாகோவிற்கு வந்த பிறகுஇந்திய மொழிகள் மற்றும் இந்திய இலக்கியங்களுடன் சேர்த்துத் தமிழை நோக்கும் கண்ணோட்டம் இருந்ததுஇது என் யோசனையைத் தூண்டியது ஒரு தமிழ்ப் பனுவலை நோக்கும் முறையைப் பிற படிப்புகளின் நோக்குமுறைகளிலிருந்தும் (disciplines) ஏற்றுக்கொண்டேன்.  மொழியை நோக்கும்முறை பேச்சுமொழிப் பகுப்பாய்விலிருந்து பனுவல் மொழிப் பயன்பாட்டு நோக்குமுறையாக மாறியதுநான் ஒரு பனுவலைப் படிக்கத் தொடங்கும்போது அனைத்து வகையான ஆய்வு வழிமுறை மாற்றங்களையும் (methodological shifts) கொள்ள வேண்டும் என்று எண்ணுவேன். இந்த இலக்கிய நோக்குமுறை மாற்றங்கள் அனைத்தையும் இலக்கியத்தைக் கற்பிக்க மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன். அதனால்தான் நான் இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒரு பனுவலை எப்படி என் முறையில் கற்பித்தேன் என்பது ஒரு விசயம்கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ள ஒரு பனுவலைப் படிப்பிக்க வேண்டியதில்லை என்பது இன்னொரு விசயம்.இவை மகிழ்ச்சிக்குக் காரணம்சிகாகோ பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பில் தீவிர ஈடுபாடு உள்ளவர்கள்;அவர்களிடமிருந்து நல்ல கேள்விகள் வரும். இதுவும் உற்சாகத்தைத் தந்தது. 

நகாசிஸ்: தனித்து வளர்ந்த மொழி என்பதாகத் தமிழ் பற்றிய கருத்தியல் சிந்தனையைக் குறிப்பிட்டீர்கள். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 20ஆம் நூற்றாண்டில் உண்மையில் பெரும் மாற்றங்களை விளைவித்த திராவிட இயக்கத்தை இங்கு நினைக்கிறேன்அந்தக் காலத்தில் அது எப்படிப் பார்க்கப்பட்டதுதிராவிட இயக்கம் உங்கள் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டதுஉங்கள் தலைமுறையில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன;உண்மையில்பல முக்கிய அரசியல் போராட்டங்கள் உங்கள் பல்கலைக்கழகமான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் இருந்தபோது அறுபதுகளில் நடந்தது. உங்கள் நீண்ட சிறப்புவாய்ந்த வாழ்க்கையில் தமிழ் மொழி மீது பலவிதமான பார்வைகளைக்கொண்டுஇந்தியாவில் உள்ள மாணவர்களுக்கும்தமிழ்நாட்டுக்கு வந்த வெளிநாட்டு மாணவர்களுக்கும்தமிழ்ப் பின்னணி உள்ள அமெரிக்க மாணவர்களுக்கும்இலங்கைசிங்கப்பூர்மலேசிய நாட்டிலிருந்து வந்து யேல்சிகாகோ பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களுக்கும்பிற அமெரிக்க மாணவர்களுக்கும் தமிழ் கற்பித்துள்ளீர்கள்இப்போது கூறுங்கள்உங்கள் சொந்தச் சிந்தனையில்புலமையில்திராவிடச் சிந்தனை வடிவங்களின்  தாக்கத்தை நீங்கள் இப்போது எப்படிக் காண்கிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.  நீங்கள் கல்வி நிறுவனங்களில் பணி தொடங்கும் நேரத்தில் அந்த இயக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். 

அண்ணாமலை: ஆம்அது என் மாணவர் வாழ்வில் சக்திவாய்ந்த கருத்தோட்டம். நீங்கள் கூறியது போல் திராவிடக் கருத்தியல்அதில் ஒன்றான தமிழ்த் தேசியம்அந்தக்கால மாணவர்களிடம்  ஆதிக்கம் செலுத்தியது தவிர்க்க முடியாதது. நான் இதற்கு விதிவிலக்கல்ல,  நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது தமிழ்த்துறையின் புதிய தலைவராக தெ. பொமீனாட்சிசுந்தரம் சேர்ந்தார். அவர் இந்திய நீரோட்டத்தில் விளைந்தவர்.  மாணவர்கள் திராவிடக் கருத்தியலில் ஈடுபாடு உடையவர்கள்சிலர் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆவர்அவருடைய தமிழ் இலக்கிய விளக்கம்,தமிழ்க் கல்வியை அவர் அணுகும் முறை இவற்றால் வகுப்பில் நிலவிய பதற்றத்தை என்னால் உணர முடிந்தது. தமிழை எவ்வாறு பரந்த இந்தியச் சூழலில் காணலாம் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். மேலும்தமிழை  முற்றிலும் புறவயமாகக் காண முடியும்காண வேண்டும் என்ற ஆய்வு முறையையும் கற்றுக்கொண்டேன்.  தமிழைத் தனித்துப் பார்த்துப் பெருமை தேடும் நோக்கம் பின்னுக்குச் சென்றது. பின்னர் நான் கர்நாடகத்தில் இந்திய மொழிகளின் மைய நிறுவனத்திற்குப் பணிபுரியச் சென்றபோது​​தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையும் அறிமுகமானது. தமிழை நேசிக்கும்,தமிழுக்காக எதையும் செய்யும் உணர்வு கன்னடத்தைப் பற்றி எனது கன்னட சகாக்களிடம் அதே முறையில் காணப்பட்டதுஇந்த மொழி உணர்வு தமிழுக்கு மட்டும் உரியதல்ல என்ற உண்மை தெரிந்ததுதமிழை மட்டும்  ஏன் வேறாகப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி பிறந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழியுடன் உளமார்ந்த உறவு இருக்கிறது. ஒருவருடைய மொழியுடனான இந்த உறவு பகிரப்பட்டதாகவும் பரவலானதாகவும் இருப்பதை உணர்ந்தேன். மற்ற மொழிச் சமூகங்களின் கண்ணோட்டத்தில் தமிழை நோக்க இயலும் என்பதைச் சாத்தியமாக்கியது.பின்னர்நான் மீண்டும் சிகாகோவிற்கு வந்தபோதுஇந்திய மொழிகளைஅவற்றின்  பண்பாடுகளைத் தங்களுக்குள் முரண்படும் அல்லது போட்டியிடும் அமைப்புகளாக நோக்காமல் ஒரு வகையான வலைப்பின்னலில் கோர்த்து நிற்பவை என்று நோக்க முடியும் என்று காண முடிந்தது. இந்த அனுபவங்கள் ஆரம்ப காலத்தில் இருந்த திராவிடக் கருத்துகளின் பிடிப்பைத் தளர வைத்தன. இத்தகைய கருத்து இந்தியாவில் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லைஎனது கருத்து நிராகரிக்கப்பட்டாலும்இன்றைய தமிழை மட்டுமல்லதமிழின் ஒட்டுமொத்த வரலாற்றைப் பார்க்கும் பார்வையைப் பற்றிக்கொண்டிருக்கிறேன்.  

நகாசிஸ்: இந்த மாற்றம் உங்கள் ஆய்வை ஏற்றுக்கொள்வதில் மாற்றம் ஏற்படுத்தியதாஉதாரணமாக,உங்களது ஆய்வு  தூய்மைவாத மொழி அரசியலை விமர்சித்தது என்று எண்ணுகிறேன்.

அண்ணாமலை:  நண்பர்களிடம் நான் சொல்வது போல்தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தில் வரும் ஆய்வை விமர்சிக்கும்போதுஎனக்கு ஒரு நன்மை இருந்ததுஅது அவர்களுக்கு இல்லைகர்நாடகம்பின் அமெரிக்கா என்று எனது கல்வி வாழ்க்கையின் (academic life) பெரும்பகுதியைத் தமிழ்நாட்டிற்கு வெளியே கழித்தேன். எனவே தமிழ் பற்றிய தொலைதூரப் பார்வை - பறவைக் கண்ணோட்டம் - எனக்கு இருந்தது. அதனால் தமிழ் மீதான என் பார்வையில் வேறுபாடு உண்டு.  தமிழ் பற்றிய எனது கண்ணோட்டத்தைத் தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் கொள்கைரீதியாக நிராகரித்தாலும்இதுவரை பலரும் என்மீது தனிப்பட்ட விரோதத்தைக் கொண்டிருக்கவில்லை. எனது புலமையில் அரசியல் நோக்கமோ சுய இலாபமோ இருப்பதாக எண்ணவில்லை என்று எண்ணுகிறேன்மேலும் ஒரு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் போன்ற பதவிகள் போன்றவற்றாலும் என் ஆய்வுக்கு அங்கீகாரம் இருப்பதாகவே கருதுகிறேன்இவை என் ஆய்வை மலினப்படுத்தாத ஒரு நிலையைத் தோற்றுவிக்கிறது என்று எண்ணுகிறேன். என் ஆய்வுக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்களும் என்னைப் புறந்தள்ளவில்லைமூத்த தலைமுறையினரை விட இளைய தலைமுறையினர் மத்தியில் மாற்றுக் கருத்துகளுக்கு வரவேற்பைக் காண்கிறேன்இது மேலும் பரவும் என்ற நம்பிக்கை உள்ளதுஅண்மையில்ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும்மாணவர்களுக்கும் தமிழ் பற்றிய எனது பார்வையை விளக்கும் வகையில் நேர்காணல் அளித்தேன். அதனால் மாணவர்களிடம் விளைவுகள் இருக்கலாம்.

நகாசிஸ்: உங்கள் தலைமுறை எனக்கு சுவாரசியமாக இருக்கிறது,  இந்தியாவில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மொழியியல் படிப்பு பரவியதுஅதே நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகையான மொழி அரசியலின் நிறுவனமயமாக்கல் இருந்தது. பின்னோக்கிப் பார்க்கையில்அந்தத் தருணத்தில் அதில் பங்குபெற்ற ஒருவராகவும் சிறப்புப்பெற்ற மொழியியலாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள்,  தற்காலத் தருணத்தில்தமிழ் மொழியின்தமிழ்மொழி அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆசைஏனென்றால்திராவிட இயக்க வரலாற்றில் மிகவும் சுவாரசியமானமாறிவரும் தருணத்தில் நாம் உள்ளோம்நாம் சுட்டிக் காட்டியது போலமொழியியல் வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பல வழிகளில் சாம்ஸ்கி ஆதிக்கம் செலுத்தினார். தமிழ்மொழி பற்றிய பார்வைக்குத் திராவிடம் எப்படி முக்கியமானதோ  அதே போல மொழி பற்றிய பார்வைக்கு முக்கியமானவர் சாம்ஸ்கி.  இளைய தலைமுறை மொழியியலாளர்களும் பிற சமூகஅறிவியலாளர்களும்  தமிழ் அறிஞர்களும் மொழிபற்றி வெவ்வேறு வகையான பார்வை கொண்டிருக்கலாம்தானே?

அண்ணாமலை: இரண்டு பார்வைகளுக்கிடையே பதற்றம் இருக்கிறது என்றே எண்ணுகிறேன்நீங்கள் சொல்வது போல்தமிழ்க் கல்வியுலகிற்கு மொழியியல் அறிமுகப்படுத்தப்பட்டபோது​​அது தமிழ் இலக்கணத்தைப் புரிந்துகொள்ளப் புத்தொளியைக் கொடுப்பதாக ஒரு சாராரால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேவேளையில்தமிழ் இலக்கணத்தைப் பற்றிப் புதிதாகக் கற்க மொழியியலில் எதுவும் இல்லை எனத் திராவிடக் கருத்தியல் அல்லது தமிழ்த் தேசியக் கருத்தியல் கொண்டவர்களிடமிருந்து எதிர்ப்பும் எழுந்தது. அவர்களிடம் ‘ஏற்கனவேதமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியம்நன்னூல் முதலான இலக்கண நூல்கள் விவரித்துவிட்டனமொழியியலாளர்கள் தமிழின் மரபிலக்கணத்தைத்தான்  ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்’ என்றொரு இளக்காரம் இருந்தது.இந்தப் பார்வை தமிழ்க் கல்வி உலகில் இன்னும் நிலவுகிறது. தமிழுக்கு அரசியல் அங்கீகாரம்அரசியல் அதிகாரம்அலுவல்மொழிப் பயன்பாடு என்பவற்றில் திராவிடக் கருத்தியலுக்கு முக்கியமான இடம் உண்டுதமிழ்மீதுஅதன் பெருமைமீது உணர்வுபொங்கும் உறவைக் கட்டி எழுப்பியது திராவிடக் கருத்தியல். அதே சமயம்,  தமிழின் உலகத்தரமான வளர்ச்சிக்குவளமான எதிர்காலத்துக்கு  என்ன செய்திருக்கிறது என்பது போன்ற கேள்விகளும் உண்டு. இந்தக் கேள்விகள் கல்வியில் தமிழுக்கு ஆங்கிலத்துக்குப் பின்னால் இரண்டாம்தர இடத்துக்குத் தள்ளிய பிறகு உண்மையான கேள்விகள்அரசால் தமிழுக்குச் செவ்வியல் அங்கீகாரம் பெற்றதில்தமிழின் தொன்மையை நிலைநாட்டியதில் திராவிடக் கருத்தியலுக்குப் பெரிய பங்களிப்பு உண்டுஅதே நேரத்தில்தமிழ் பேசும் மக்கள் தற்காலத்தில் உலகியல் வாழ்க்கை வாய்ப்புகளுக்குத் தமிழ் காலுக்குக் கட்டை என்று உதாசீனம் செய்யும் நிலையும் இருக்கிறது. இந்தக் கேள்விகள் மக்கள் மனதில் மட்டுமல்லகல்வியாளர்கள்,அறிஞர்கள் மனதிலும் உள்ளன. தமிழின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தைக் காட்டிலும் அதன் கடந்த காலத்தைப் பற்றிய பெருமை வலுவாக இருக்கிறது என்பது உண்மை.

நகாசிஸ்: தமிழ் ஆய்வுக்கு முதன்மையான ஆய்வுப் பொருள்கள் என்னதமிழ் ஆராய்ச்சி எவற்றை மேற்கொள்ள முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

அண்ணாமலை: புதிய ஆய்வுகளைத் தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான்:  தமிழ் இலக்கிய மொழியாகவாழும் மொழியாகஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.  அதைப் பற்றிப் பெருமிதம் கொள்வதைவிடஅது எப்படிஏன் சாத்தியமாகியது என்று ஆராய வேண்டும். தமிழின் பழமை பெருமைப்பட வேண்டிய உண்மைஆனால்சமஸ்கிருதம்லத்தீன் போன்ற பிற மொழிகள் ஏன் நவீன இலக்கிய மொழியாக வாழவில்லை என்ற ஆராய்ச்சியும் கேள்விக்கு விடை தரலாம். அது தமிழின் உள் வலிமையைப் பற்றிய கருத்துத் தரலாம். தமிழின் உள் வலிமையைக் கண்டறிய வேண்டுமென்றால்தமிழைப் பற்றிய எதையும் சமஸ்கிருதத்துடன் தொடர்புபடுத்தி  ஆய்வு செய்வது ஒரு வழிதமிழின் வலிமைக்கு மொழியைப் பற்றி மட்டுமல்லமொழியைப் பேசுபவர்களின் மனப்பாங்குமற்ற மொழிகளோடு ஊடாட்டம் ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். குதிரையின் கண்மறைப்புப் போன்று அணிந்துகொண்டு செய்யும் ஒற்றைப் பாதை ஆய்விலிருந்து விலகிச் செல்ல வேண்டும். சமஸ்கிருதம் தமிழுக்கு நல்லது செய்ததா கெட்டது செய்ததா என்பதே இன்று ஆய்வில் ஆதிக்கம் செலுத்தும் கேள்வி.  அதைத் தாண்டி,  தமிழின் உள்வலிமையைத் தேட வேண்டும். இந்தப் பெரிய கேள்வியோடுபிற மொழிகள்இலக்கியங்களுடன் தமிழின் உறவு எப்படித் தமிழில் படைப்பாற்றலில் புத்தாக்கத்தைக் கொண்டுவந்தது என்றும் பார்க்க வேண்டும். பிற மொழியின் தொடர்பினால் அழிந்த மொழிகள் உண்டுசெழித்த மொழிகளும் உண்டு. தமிழ் அப்படிச் செழித்த மொழி. 

தமிழை அழிவிலிருந்து பாதுகாப்பது அரசியல் செயற்பாட்டாளர்களின் கடமை மட்டுமல்ல தமிழ்ப் புலமையாளர்களின் கடமையும்  என்பதே   இளைய ஆய்வாளர்களுக்கு எனது முக்கிய அறிவுரை. தமிழ்ப் புலமையாளர்கள் என்றால் அவர்கள் தமிழ்ப் புலவர்கள் மட்டுமல்லதமிழில் ஆய்வுசெய்யும் பிற துறை அறிஞர்களும் ஆவர். தமிழின் படைப்பிலக்கியத்தில் மட்டுமல்லாமல் எல்லா அறிவுத் துறைகளிலும் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் நகர வேண்டும். அதுவே தமிழின் வாழ்வு குறித்த முன்னுதாரணமாக விளங்கும் மாற்றத்தின் அடிநாதமாக இருக்க வேண்டும் என்று தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் துறை மாணவர்களுக்கும் சொல்வேன்.

நகாசிஸ்: நீங்கள் என்னிடம் ஒருமுறை சொன்னது ஞாபகம் வருகிறது: ‘தமிழ் மொழி களிமண் போன்றது.

அண்ணாமலை: ஆம். நான் அதை உறுதியாக நம்புகிறேன்தமிழுக்கு வடிவமைக்கும்  பார்வை இப்படி இருக்க வேண்டும்.  இன்று இருப்பது வேறு. களிமண்ணில் செய்த விநாயகரின் முன் விழுந்து ஆசி பெறுவதாக அது இருக்கிறது. தமிழ் விநாயகர் அல்ல. தமிழைக் களிமண்ணாகப் பார்த்துஇதுவரை நினைத்துப்பார்க்காத புதிய பொம்மைகளை அதிலிருந்து உருவாக்க வேண்டும். இந்தப் பார்வையைத் தமிழ் ஆய்வாளர்கள்அறிவாளிகள் மனதில் வாங்கிச் செயல்படுத்துவது மலையைப் புரட்டும் வேலையாகும்.

நகாசிஸ்: ஏனெனில்மக்கள் தமிழை வணங்கச் செய்வதில் அரசியல் லாபம் இருக்கிறது.  நீங்கள் முன் சொன்னது போலநீண்ட காலமாகத் தமிழைக் காப்பது அரசியலே என்ற கதை சொல்லப்பட்டு வருகிறது.  மொழியை எப்படியோ இழந்துவிடுவோமோ என்ற அச்சம்தான் இந்தச் சிந்தனைக்குக்  காரணம் என்று எண்ணுகிறேன்.

அண்ணாமலை: சரிதான். தமிழ்க்காதல் என்றால் தமிழ்க் காவல் என்றாகிவிட்டது. தமிழ்ப் பாசமென்றால் தமிழ் வணக்கம் என்றாகிவிட்டதுநான் தமிழ்க் கட்டுரை ஒன்றில்  எழுதியது போலஒருவர் தன் தாயை நேசிக்கிறார் என்றால்தாய்க்கு ஆபரணங்கள் வாங்கிப் பூட்டி வணங்கிவிட்டு உணவில்லாமல்,  பட்டினி போடலாமாஇதெப்படி உங்கள் தாயை நேசிப்பதாக ஆகும்இந்த நிலை மொழிக்கும் வரக்கூடாது மொழிக்கு சத்துக்கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும். 

நகாசிஸ்: உங்கள் சமூக மொழியியல் ஆய்வில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி குறிப்பாகசமஸ்கிருதம் மற்றும் இந்தியிடமிருந்து தமிழின் தமிழைக் காப்பதில் தமிழ்ச் சமூகம் கவனம் செலுத்துகிறதுஆனால்,ஆங்கிலத்திலிருந்து காக்கும் எண்ணம் இல்லைமாறாக ஆங்கிலத்துடன் தமிழ் மொழிக்கு ஆழமான உறவு வேண்டும் என்று நினைப்பது முரண்பாடாகும். இது திராவிட இயக்கத்தின் பக்க விளைவுகளில் ஒன்றாகும்.  நீங்கள் பல முறை சுட்டிக்காட்டியபடிஇது மொழிசார்ந்த  அரசியல்வழிப் பொருளாதாரத்துடன் (Political Economy) தொடர்புடையது;  தமிழ்ப் படிப்பு இன்று எங்கே போகிறது என்று நினைத்துப் பார்க்கையில்மாணவர்கள் வணிக மேலாண்மை அல்லது பொறியியல் பட்டங்கள் பெறச் செல்வதையே பெரும்பாலும் விரும்புவதைப் பார்க்கிறோம். தமிழைப் படிப்பதில் ஆர்வத்தை எவ்வாறு ஊக்குவிப்பதுஎவ்வாறு தமிழ்ப் பட்டம் பொருளாதார வாழ்வுக்குக் குந்தகமாக இருக்காது என்பவற்றுக்கு வழி காண்பது தமிழின் எதிர்காலம் பற்றிய முக்கியக் கேள்வியாக இருக்குமென்று எண்ணுகிறேன்.

அண்ணாமலை: இது பெரிய பிரச்சனைஇல்லையாதமிழர்கள்சாமானியர்கள் முதல் அறிவாளிகள் வரைதமிழைச் சொத்துஅதில் தங்களுக்குப் பங்கு உள்ளது என்று ஏன் எண்ணுவதில்லைஅவர்கள் தமிழைத் தங்கள் முன்னோர் விட்டுசென்ற கடன் என்று எண்ணுகிறார்கள்அந்தக் கடனைத் தங்கள் பிள்ளைகள் தலைமேல் ஏற்றுவதை விரும்பவில்லைகடனை ஈடுசெய்ய ஆங்கிலம் என்று நினைக்கிறார்கள். ஆனாலும்அவர்களே தமிழைத் தங்கள் குலதெய்வமாகவும்  தங்கள் பிள்ளைகளுக்குக் விட்டுச்செல்ல விரும்புகிறார்கள்அதனால்,  அவர்கள் தமிழைக் கைவிடுவதில்லை. தமிழோடு இப்படி  இரட்டை உறவுமுறையைக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தைப் பொறுத்தவரைபெரிய கேள்வி என்னவென்றால்முந்தைய காலத்தில்தமிழ் தன் சொந்த மொழிச்சமூகத்தைக் கடந்த மொழியாக (Cosmopolitan language) இருந்த சமஸ்கிருதத்தைச் ஒரு வகையாகக் கையாண்டது. இப்போது அதே மாதிரியான மொழியாக உள்ள ஆங்கிலத்தை எப்படிக் கையாள்வது என்பது கேள்வி.  இது வெறுமனே தமிழைக் கெடுக்கும் பிரச்சினை அல்லதமிழ் மற்ற மொழிகளைக் கையாள்வதைப்போல உலகப் பொதுமொழியை எவ்வாறு கையாளும் என்ற கேள்வியைத் தமிழர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

முன்பு கூறியது போல்திராவிடக் கருத்தியலின் பெரும் பங்களிப்புதமிழ் பற்றிய அரசியல் உணர்வும்தமிழ் பேசுபவர்களுக்கு அளித்த அரசியல் அதிகாரமும்தான். இந்த உணர்வையும் அதிகாரத்தையும்  தமிழ் சார்ந்த படைப்புச் சக்தியாக (creative energy) மாற்ற வேண்டும்.  படைப்புச் சக்தி என்பது நவீன இலக்கியம்புனைகதைகவிதைநாடகம் - ஆகியவற்றிற்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுஇந்தச் சக்தி அறிவியலுக்கும் விரிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் சொல்லும்  மென்அறிவியல் (soft science), வன் அறிவியல் (hard science) ஆகிய எல்லா அறிவியலுக்கும். சொல்லப்போனால்அனைத்து வகையான அறிவுப் படைப்புகளுக்கும் (knowledge production). தமிழ் மொழி பேசுபவர்கள் மற்றும் அறிவாளிகள் -  தமிழ் மொழி இலக்கியத்தில் புலமையாளர்கள்பல்வேறு அறிவுப் படைப்பில் ஈடுபட்ட  தமிழ் பேசுபவர்கள் - அவர்கள் எப்படித் தமிழின் படைப்புச் சக்தியை வெளிக்கொண்டு வர முடியும் என்று சிந்திப்பதே இன்றைய தமிழின் தேவை.  “தமிழ் உங்கள் உயிரைக் கேட்கவில்லைஉங்கள் அறிவைக் கேட்கிறது” என்ற கோஷத்தை ஒருமுறை மாணவர்களுக்குக் கொடுத்தேன்.  இதற்கேற்றபடி தமிழ்மொழிக் கொள்கையின் அணுகுமுறை மாற வேண்டும்,  இதுவே தமிழை நவீன மொழியாக மாற்றும்,  தமிழ் கால்கட்டை  என்ற எண்ணத்தை மாற்றும்.

நகாசிஸ்: கடைசியாக ஒரு கேள்வி. உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் ஓய்வு பெறுவதில்லை. ஒரு வகையில்நீங்கள் ஏற்கனவே ஒரு தொழில்நிலை வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுமீண்டும் கல்வியாளராக இரண்டாவது வாழ்வைத் தொடங்கினீர்கள். நீங்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெறுகிறீர்கள் என்பது தெரியும்ஆனால் நீங்கள் ஆய்வாளராக ஓய்வு பெறவில்லை. எனவே நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

அண்ணாமலை: எனது எட்டாவது பத்தாண்டு வாழ்வில் இன்னும் மனது வயதாகாமல் சுறுசுறுப்பாக இருப்பதால் நான் கொடுத்துவைத்தவன் என்று சொல்ல வேண்டும்அதனால் மேலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வேன் என்று நம்புகிறேன். என் ஆய்வு வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது​​பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்அந்த வகையில்சிறுகதை எழுத்தாளனோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நான்  நாவலாசிரியன் அல்ல. முந்தைய ஆண்டுகளில் நான் ஆய்வு நூல்கள் எழுதவில்லை. நூல் எழுதுவதில் கவனம் செலுத்தப்போகிறேன்.  வெளியிட்ட சில ஆய்வுக் கட்டுரைகளைச் சேகரித்து அவற்றின் கருப்பொருள்களின் அடிப்படையில் ஒழுங்கமைத்து,  தொகுக்கப்பெற்ற நூல்களையும் கொண்டுவர எண்ணுகிறேன். இக்காலத் தமிழுக்கு இலக்கணம் எழுத வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருக்கிறது. சவாலான இந்த வேலைக்கு என் மனம் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்! இது மொழியியல் நண்பர்களின் கோரிக்கை. தமிழ் என்றால் என்னஅது எப்படித் தொடங்கியதுஎங்கே போகிறது என்பது பற்றிய எனது கருத்துகளை எழுத வேண்டும் என்பது மொழியியல் தெரியாத நண்பர்களின் கோரிக்கை. தமிழ் மொழி என்றால் என்ன என்பதை  அறிவின் வழி,   உணர்வின் வழியை அகற்றிஎழுத வேண்டும்இது என்னால் முடியும் என்று நம்புகிறேன். சிகாகோவில் இலக்கியஇலக்கணப் பாடக்குறிப்புகளை நூலாக்குவதும் ஒரு திட்டம்.

நகாசிஸ்: நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் உங்கள் நூல்களைப் பார்க்கவும்  படிக்கவும் ஆர்வமாக உள்ளோம். மிக்க நன்றி. தங்கள் நேர்காணலுக்கு நீங்கள் சம்மதித்தது மகிழ்ச்சி தருகிறது.

அண்ணாமலை: மிக்க நன்றி.

நகாசிஸ்: நாம் இன்னும் ஒரு மணி நேரம்கூடப் பேச முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அண்ணாமலை: நானும் பேச விரும்புகிறேன்ஆனால்எதுவும் ஒரு முடிவுக்கு வர வேண்டுமே! நீங்கள் என் ஆய்வுப் பாதை பைக் கேள்விகள் கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் நினைவுப் பாதையில் திரும்பிச் சென்று நான் என்ன செய்தேன்ஏன் செய்தேன் என்று காண முடிந்தது.