நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 17 மே, 2018

வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…


வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…

சாகப் பிறக்கும் மனிதன் -
செத்துக் கொண்டிருக்கும் மொழி.

ஊமையாய் இருந்திருக்கலாம் மொழி
பேசிக்கொண்டேயிருப்பதால்,

அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது
அறிவிப்பின்றி…
இது ஓரதிசியம்
நோயாளி ஒரு மருத்துவர்.

அவருருவாக்கிய நோய்த் தாக்குதலுக்கு
அறுவை சிகிச்சை செய்பவர் அவரே..,

மொழிகளெத்தனை
பண்பாடுகள் அத்தனை.

மொழிகள் நிறைந்த உலகில்
முகவரி யற்றவை மொழிகள்

நிறத்திற்கு, நிலப்பரப்பிற்கு,
நீயா நானா வெல்வதற்கென மொழிகள்.

எழுத்துகள் நிறைந்த தொன்று.
எழுத்தே இல்லாத தொன்று

எப்போதோ பிறந்தது ஒன்று – இவை
எப்படித்தான் பிறந்திருக்குமோ இன்று

சாகப் பிறந்தவன் வாழத் தொடங்குகையில்
வாயிலூற்றெடுத்த நாற்ற மொழியெல்லாம்
வாழுமொழியிலிருந்து சாகத் தொடங்குமோ…!

குருதிக்கு நிறம் ஒன்று
வகைகள் வேறு.,

மொழிக்கு முகங்கள் வேறு
மூலம் ஒன்று.

யாமறிந்த மொழிகளெலாம்
ஏதுமில்லை ஒன்றைத்தவிர.

அதையே கவிஞர் சொன்னார் நெஞ்சம் நிமிர,

அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனுடை வழியாகும்.


த.க.தமிழ் பாரதன்
06.03.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக