நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 26 ஜூலை, 2020

கோவிட் -19 தடுப்பூசிக்கான பந்தயத்தில் இந்தியா

26.07.2020

கோவிட் -19 தடுப்பூசிக்கான பந்தயத்தில் இந்தியா

(இந்தியன் சயின்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியர் என்.பத்ரான் நாயர் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/101798

சீன நகரமான வூஹானிலிருந்து கொரோனோ வைரஸ் திடீரென பரவி, உலகையே மூடிமறைத்து விட்டது  அதன் பரவலைக் கையாள்வதில் முதலாவதாக அதன் அறிகுறிகள், அது தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது தொற்றுநோயாக இல்லாவிட்டாலும் சரி; இரண்டாவதாக மிக முக்கியமாக, உடனடி ஆன்டிஜென்கள் ஏதேனும் இருந்ததா?

ஜனவரி நடுப்பகுதியில் இந்தியா தனது குடிமக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தனது செயல்களை ஒருங்கிணைத்து சீனாவுக்குப் பயண ஆலோசனைகளை வழங்கியது. உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து நாடுகளுக்கும் விரிவான தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்கிய பின்னர், அந்நேரத்தில் வைரஸ் பற்றி அறியப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

வைரஸ் தொற்று பல நாடுகளுக்குப் பரவியதால், இதை WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்திய ஆய்வகங்கள் இணைந்தன.

கோவிட்-19இன் பரவலாக்கத்தால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடுப்பூசி உருவாக்கத்திற்கு மற்றும் மருந்து சோதனைகளைக் கண்காணிக்க அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன் மற்றும் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால் தலைமையில் பல்துறை தேசிய பணிக்குழுவை இந்தியா அமைத்தது.

இந்தப் பணிக்குழுவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), உயிரி தொழில்நுட்பத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, சுகாதார சேவைகள் இயக்குநரக ஜெனரல் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் -இருந்து வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பயனுள்ள மருந்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அணுகுமுறை முப்பரிமாணமானது. முதலாவது தற்போதுள்ள மருந்துகளின் மறுநிலைப்படுத்தல், இரண்டாவது புதிய மருந்துகள் மற்றும் மூலக்கூறுகளை உருவாக்குதல், மூன்றாவது, தாவர சாறுகள் மற்றும் பொதுவான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தல்.

கோவிட்-19க்கான பயனுள்ள தடுப்பூசியைக் கண்டறிவது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தடுப்பூசி உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் சுமார் 160 தடுப்பூசிகள் உள்ளன.

ஃபார்மா மேஜர் ஸைடஸ் காடிலா இந்தியாவில் முதன்முதலில் களத்தில் இறங்கியது, மறுசீரமைப்பு டி.என்.ஏ தொழில்நுட்பம் மற்றும் மறுதலை மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்தில் முன்-மருத்துவ விலங்கு சோதனைகளைத் தொடங்கியது. இப்போது தடுப்பூசி உருவாக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் ஸைடஸ் உட்பட ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் செயலாற்றுகின்றன.

இரண்டாவதாக ஐ.சி.எம்.ஆர்-க்கு கீழ் இயங்கும் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து உருவாக்கிய Covaxinஐ மனித சோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுபாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தார். புதுதில்லியின் அகில் ஐந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ரோஹ்தக் முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட 12 சுகாதார நிறுவனங்களில் கோவாக்சினுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், உலகின் மாபெரும் தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவில் உள்ள சீரம் நிறுவனம்  பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனெகா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட Covishield எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தடுப்பூசி தற்போது பிரேசிலில் 3ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஒப்புதல்கள் கிடைத்தவுடன், சீரம் நிறுவனம் 3 முதல் 4 மில்லியன் டோஸ்களை நிறுவனத்தின்படி உற்பத்தி செய்யும். ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் அளவில் தயாரிக்குமளவுக்கு உற்பத்தித் திறன் இருப்பதாக அது கூறுகிறது.

தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, Covishield நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது, பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது, உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

கோவிட்-19க்கு எதிராக சிறந்த தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாதவகையில் பந்தயம் நடைபெற்று வரும்சூழலில், இந்த நோய் ஏற்கனவே 1.5 கோடி மக்களைப் பாதித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 6.32 லட்சம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது.

இருபெரும் மருந்து உற்பத்தியைத் தவிர, சி.எஸ்.ஐ.ஆர் உட்பட கோவிட்-19 க்கு எதிராக ஒரு பயனுள்ள மருந்தை உருவாக்க பல ஆய்வகங்களும் முயற்சி செய்கின்றன. இந்திய மரபு மருத்துவ முறையின் கீழ் இயங்கும் சில ஆய்வகங்களும் இதில் அடங்கும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சில ஆய்வகங்கள் நிலையான பாதுகாப்புக்கான துணை சிகிச்சையாக நோய்தடுப்பு சோதனைகள் மற்றும் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளைத் தொடங்கும் என்று பல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்குழுவின் தலைவர் டாக்டர் பூஷண் பட்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 80,000 காவல்துறையினரும் நோய்த்தடுப்பு சோதனைகளில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

பல்வேறு பணிக்குழுக்களைத் தவிர, நடைமுறை தாமதங்களை சமாளிக்க ஒவ்வொரு கட்டத்திலும் கோவிட்-19க்கான பயனுள்ள சிகிச்சையின் வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடியே கண்காணித்து வருகிறார். தற்போதைய மனித சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய தொற்றுநோய்க்கான உயிர் காக்கும் தடுப்பூசியை இந்தியா கொண்டுவர முடியும் என்று நம்பலாம்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa/

புதன், 22 ஜூலை, 2020

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கலாம். சிவஞானபோதம் என்னும் நூல், மோகம் என்பது மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்கிறது. கம்பர் மோகமெங்குமுளவாக என்று திகைப்பு என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.

மோகம் பழைய வார்த்தை.மெள்ள மெள்ள இந்தச் சொல் மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி திணறுமளவுக்கு மனதை ஆக்கிரமிக்கும் உணர்ச்சிக்கு, ஆங்கிலத்தில் Obsession என்று சொல்கிறார்களே… அதற்கு ஈடாகப் பயன்படும் வார்த்தையாகி விட்டது. இந்தக் கோணத்தில் தான் நாம் வெளிநாட்டு மோகத்தைப் பார்க்கப் போகிறோம்.

வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

ஒன்று - வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் (மேட்ச்பாக்ஸ்கூட ஃபாரின்தாங்க எங்க வீட்ல…). 
இரண்டு -வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகித்து, அதைக் குருட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பது. (ராதாவுக்கு கோக் இல்லைன்னா உயிர் வாழமுடியாது). 
மூன்றாவது - இடது கையை வெட்டிக் கொடுத்தாவது வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம் (சியாட்டில்ல எப்ப மழை பெய்யும்னு சொல்ல முடியாது…).

வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் இருப்பதில் ஓரளவுக்குத் தவறில்லை… வெளிநாட்டில் தயாராகும் சில விற்பனைப் பொருட்கள், அந்த நாடுகளின் நுகர்வோர் கலாசாரத்தின் கடும் போட்டியால் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.

உதாரணமாக, அமெரிக்காவில் தயாராகும் ஷேவர்கள் நன்றாக சவரம் செய்யும். ஜப்பான், கொரிய நாட்டு கம்ப்யூட்டர்,வி.சி.ஆர்., எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.இவற்றைப் பாராட்டுவதிலோ, பயன்படுத்துவதிலோ - ஏதும் தயக்கமில்லை.ஆனால், அந்தப் பொருட்கள் நமக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். ஒரு லாப்-டாப்போ, ஒரு மாக்கின்டோஷோ, ஒரு சின்தசைஸரோ, கீ-போர்டோ இல்லாமல் நம்மில் பலரால் உயிர் வாழ முடியும். பர்மாபஜாரில் கிடைக்கிறது என்று சின்தசைஸர்களைக் காசைக் கொட்டி வாங்கி, அதில் ஒரே ஒரு பாட்டை மட்டும் வாசித்துக்கொண் டிருப்பது வீண். அதற்கு உள்நாட்டு ஆர்மோனியம் போதும்.

அதேபோல, நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக - இருந்தால் மாக்கின்டோஷ்- கணிப்பொறி வாங்கலாம். அதை வாங்கி வைத்து, லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் பயன்படுத்துவது முட்டாள்தனம். நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளிநாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவையிருக்கும் போது வாங்கலாம். வெளிநாடு என்கிற ஒரே காரணத்துக்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.

சுதேசிக் கொள்கை, இந்த உலகப் பொதுச் சந்தை காலகட்டத்தில் அர்த்தமற்றது. மேலும், உள்நாட்டிலேயே தயாராகும் எல்லாப் பொருட்களிலும் வெளிநாட்டுத்தொழில் நுட்பமோ, மூலப் பொருளோ இருந்தே தீர்கிறது. வெளிநாட்டுப் பொருளே கூடாது என்று பிடிவாதமாக இருந்தால், வாழை இலையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, ஜப்பானிய நேஷனல் கம்பெனியின் ரைஸ் குக்கர் உலகப் பிரசித்திப் பெற்றது. அதை நிச்சயம் வோல்டேஜ் பார்த்து வாங்கலாம். பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டில் சமைக்கும் இளம் கணவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம். அதேபோல, டோஸ்ட்டர் போன்ற பொருட்கள் நம் அவசரங்களுக்குப் பயனுள்ளவை. ஆனால், வெளிநாட்டு முத்திரை இருக்கிறது என்பதால் ஷ¨க்கள், செருப்புகள், சிகரெட்டுகள், வாசனை ஷாம்புகள், சோப்புகள் போன்ற கண்டா முண்டா சாமான்களையெல்லாம் வாங்கிப் போடுவதில் அர்த்தமில்லை.

நான் சென்ற ஒரு வீட்டில் கக்கூஸ் காகிதம்கூட ஹாலந்திலிருந்தோ, நியூஸிலாந்திலிருந்தோ கொண்டுவந்தது என்று - பெருமைப்பட்டுக் கொண்டார்கள். முதலில் பேப்பரே எதற்கு என்பது என் கேள்வி. ஃபாரின் விஸ்கிதான் மயக்கம் வராது. ஃபாரின் சிகரெட்டுதான் கான்சர் வராது என்னும் மனப்பான்மை தீங்கானது.

நான் பணிபுரிந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு, லண்டனில் கிடைக்கும் - எரின்மூர் என்னும் புகையிலைதான் பைப்பில் அடைத்துப் பிடிக்க வேண்டும். அதனால், வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இன்ஜினீயரையும் ஒரு டப்பா வாங்கிவரச் சொல்வார். அதனாலேயே அவர் சில சமயங்களில் நடுநிலைமையை இழக்கவேண்டி இருந்தது.

மும்பை விமானநிலையத்தில் ஒரு முறை திரும்பியபோது, கஸ்டம்ஸ் அதிகாரியிடம் ஓர் இளைஞர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து சைக்கிள் ஒன்று கொண்டுவந்திருந்தார் (பபுலுவுக்கு விளையாட!). அப்புறம் ஒரு பெட்டி நிறைய சாக்லெட். கஸ்டம்ஸ் அதிகாரி இன்னும் லஞ்சம் வாங்கத் துவங்காத இளைஞர். ஏன் சார், நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்காக சைக்கிள் ஏற்றுமதி செய்கிறோம். நீங்கள் சைக்கிளை இம்போர்ட் செய்கிறீர்களே… உங்களை என்ன சொல்வது..? என்றார். நீ என்ன அதைக் கேட்பது..? அதற்கான டூட்டி கொடுக்கிறேன். சைக்கிள் என்ன, அண்டர்வேர்கூட என்னுடையது ஃபாரின்தான்… பார்க்கிறாயா..? என்றார் இளைஞர். அதிகாரி பதட்டப்படாமல், ஏறக்குறைய ஒரு மோட்டார் சைக்கிள் விலைக்கு டூட்டி தீட்டினார்! ஒரு ஃபேமிலிக்கு இத்தனை சாக்லெட் அதிகம். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை… என்று கடுப்பில் தடுத்துவிட்டார். அந்த இளைஞர், தன் குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து, அங்கேயே அத்தனை சாக்லெட்டையும் சாப்பிட்டு முடித்தார்! இம்மாதிரியான பகுத்தறிவை மயக்கும் அபத்தங்கள் கொண்ட மோகத்தைத்தான் நான் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

அடுத்து,வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகம். இது நமக்கு ஊடகங்களிலிருந்து வருகிறது. ஊடகம் என்ற வார்த்தை சினிமா, டி.வி., செய்தித்தாள் போன்றவற்றுக்குப் பொதுவான, மீடியம் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே… அதற்குத் தமிழ். குறிப்பாக, நம் நகர்ப்புற இளைஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.மூத்திரம் போவதற்குக்கூட, ஆங்கிலம் பேசிக்கொள்ளும் ஐ டோண்ட் நோ டமில் யார் வகை. இது ஒரு அபாயகரமான கலாசாரத் தாக்கம்.

அவர்கள் பலரும் சூயிங்கம் மெல்வது, ஜீன்ஸ் அணிவது, இலக்கில்லாமல் சுற்றுவது, மோட்டார் சைக்கிளில் கையில் தோல் பெல்ட், கண்ணில் ரேபான், பின்ஸீட்டில் பெண் அணிந்து டிஸ்கோக்களுக்குப் போவது, அங்கே ஸ்பைஸ் கர்ள்ஸ், மடோனா, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் போன்ற மேற்கே காலாவதியான பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவது, டமில் ஃபிலிம்ஸ் யார் பார்ப்பார்கள்? கர்னாடிக் மியூஸிக் போர் யார், சுத்திஃபை கடிச்சுஃபை, போன்ற தமிழாங்கில அசிங்கங்களைப் பயன்படுத்துவது.

இம்மாதிரியான மேம்போக்கான பழக்கங்களின் அடித்தளத்தில் சில அபாயங்கள் உள்ளன. பெற்றோரை, பெரியவர்களை மதிக்காமல் ஊர் சுற்றுவது, போதைப் பொருட்களுடன் முதல் பரிச்சயம், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது, தம் இயலாமைகளுக்குப் பெற்றோரைக் குற்றம் சொல்வது போன்ற அபாயங்கள். சுவாமி சுகபோதானந்தா நமக்கு நவரசங்களில் பயரசமும் வேண்டும் என்கிறார். ஆரோக்கியமான பயம், healthy fear… குறிப்பாக, மேல்நாட்டுப் பழக்கங்களின்மேல் வேண்டும். இவை நகர்ப்புறப் பழக்கங்கள். சிறு நகரங்களும் கிராமங்களும் அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. இருந்தும் விரைவிலேயே மேல்நாட்டுப் பழக்கங்கள் அனைத்தும் சாட்டிலைட் மூலம் கிராமப்புறங்களிலும் பரவிவிடும் அபாயம் உண்டு. இதற்குப் பயப்படுங்கள்.

இவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அந்த நாடுகளின் சமூக அமைப்பும் - கலாசாரமும் சந்தர்ப்பங்களும் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் சின்ன வயசிலேயே பெற்றோரைப் புறக்கணித்துவிடுவார்கள். சொந்தமாக சம்பாதிப்பார்கள். பதினாலு வயசுக்குள் புணர்ச்சி அனுபவம். இல்லையேல் அது அப்நார்மல். ஒரு குறிப்பிட்ட வயசு வரை திரிந்துவிட்டு சட்டென்று ஒரு நாள் காதுக் கடுக்கனை கழற்றிவிட்டு முடி வெட்டிக்கொண்டு சூட் அணிந்து கொண்டு கம்ப்யூட்டர் படிக்கப் போய்விடுவார்கள். அப்படி நம் நாட்டிலும் இருந்தால் இந்தப் பழக்க வழக்கங்களை ஒரு தற்காலிக உபத்திரவமாக சகித்துக்கொள்ளலாம். அது நம் நாட்டில் நடப்பதில்லை. பெற்றோர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்கள். அவர்கள் ஓவர் டைம் பண்ணி, பி.எஃப். லோன் எடுத்து சம்பாதித்த காசில் நீங்கள் திரிகிறீர்கள்.

அங்கே வேலைக்குப் போக கல்லூரி படிப்பு தேவையில்லை. ஓரளவு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அங்கு ஏராளம். அதனால் அந்தப் பழக்க வழக்கங்களுக்கான பொறுப்பையும் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். தாமே ஒரு கட்டத்தில் தெளிந்துவிடுகிறார்கள். நம் நாட்டில் இந்தப் பழக்க வழக்கங்கள் அப்பா அம்மா சம்பாதிக்கும் காசில் நடக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு.

இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஒரு ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறது. இளம் பெண்கள் காலேஜுக்கு கட் அடித்து விட்டு அலைவதைப் பார்க்கிறேன். மார்பு குலுங்க பனியன் போட்டுக் கொண்டு, தொடை தெரிய டிராயர் அணிந்துக்கொண்டு, உடம்பைக் காட்டும் பழக்கம் மனதை பாதிக்காமல் இருக்க நம் சமூகம் அத்தனை பக்குவம் இல்லாதது. மேலும் ஏழை, பணக்கார வேறுபாடுகள் நம்மிடம் மிக அதிகம். இதனால் ஈவ் டீசிங், பெண் பலாத்காரம் போன்ற வன்முறைகள் ஏற்படுகின்றன.

ஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம். தேவைதான், அதை வருஷத்துக்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் முரட்டு சௌகரியம் இருக்கிறது என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், லீ ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள். ரிஷிமூலம் பார்த்து விசாரித்தால் அந்த ஜீன்ஸ் பங்களாதேஷிலோ அல்லது வியட்நாமிலோ செய்யப்பட்டு அமெரிக்கா போய்விட்டு இந்தியா வந்திருக்கும்.

இனி, வெளிநாடு செல்லும் மோகம்.

பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

===================================

விகடனில் அன்புடன் பகுதியில் வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளிநாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.

நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளிநாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள்.

என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. 
 
அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்.

- சுஜாதா

Shared from fb

புதன், 15 ஜூலை, 2020

ஆசிரியரின் மரணம் – வகுப்பறைக்குள்ளும் வெளியிலும்

அறிவியல் ஆசிரியர் சாரதி சார் ஜூன் 21 மறைந்தார் என்ற செய்தி எதிர்பாராத ஒன்று. வகுப்பறைக்குள்ளும் வெளியிலும் அணுகுவதற்கு எளியவர். அவருடனான நினைவுகள்....


ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்கையில் அது மேல்நிலைப்பள்ளி. அப்போது எங்களுக்கு வகுப்பெடுத்த அனைவரும் முக்கியமானவர்கள். அவர்கள் வாயிலாகத் தான் உயர்கல்வி-மேல்நிலைப் பள்ளியைப் புரிந்துகொண்டோம்.

அப்படித்தான் சாரதி சார், ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தார். மேலும் 7 9ஆம் வகுப்பிலும் பாடமெடுத்தார். உயர்ந்த மனிதர், பருத்த உடல். வகுப்பிற்கு நேரந்தவறாமல் வந்திடுவார்.

சாரதி சாரின் வகுப்புகள் போர் அடித்ததில்லை, ஒரு போதும் நோட்ஸ் வாங்கச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியதில்லை. பாடப்புத்தகங்களை விட பயிற்சிப் புத்தகங்கள்தான் மாணவர்களை மேம்படுத்தும் என்ற பொதுப்புத்தி அப்போது நிலவியது. அறிவியல் போன்ற பாடங்களுக்கு நோட்ஸ் வைத்திருப்பது மாணவர்களிடையே சமூக அந்தஸ்தாக கருதப்பட்ட காலம் அது. அதிலும் வெற்றி நோட்ஸ்கள் தரமானவை என்ற போக்கு இருந்தது.

அந்த விலை உயர்ந்த நோட்ஸ்கள் வாங்க இயலாத மாணவர்கள் படித்த வகுப்பறை எங்களுடையது. அப்போதெல்லாம் ரோகிணி என்றொரு நோட்ஸ் வரும். 2007இல் அதன் விலை 6ரூபாய். சாணித்தாளில் பொடி எழுத்துருவில் வெளியாகும். 9ஆம் வகுப்பு வரை அதைத்தான் பயன்படுத்தினேன்/னோம். புத்தகத்திலேயே பெரும்பகுதியை முடித்துக்கொள்வோம்.


           

நான் படித்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் நுட்பாமான உள்கட்டமைப்பில் இருக்கும். 6இன் நீட்சி 7, 7இன் நீட்சி 8 என படித்தான வளர்ச்சியில் பாடங்கள் இருக்கும். இந்த நீட்சி 12ஆம் வகுப்பில் நிறைவடையும். அறிவியல் ஆசிரியர்கள் ப்ளூ ப்ரிண்ட் பார்த்து சில பாடங்களை தவிர்த்து விடுவதுண்டு. அப்படி ஆசிரியர்கள் தவிர்க்கும் பாடங்களில் முதன்மையானது உயிரியல் சார் பாடங்கள். குறிப்பாக மனித உடலமைப்பு, பாலுறுப்பு தொடர்பான பாடங்கள்.

அத்தகைய பாடங்களை நடத்துகிறேன் எனும் பெயரில் கொச்சையாகவும், முறையற்றதுமாக தவறாக மாணவர்களை வழிநடத்துபவர்களும் உண்டு. ஆனால், சாரதி சார், அப்படியில்லை. முறையாக நடத்தினார். தேவையானவற்றை தேவையான அளவு தெளிவாக நடத்தினார். மாணவர்களின் கேள்விகளை சந்தேகத்திற்கு இடமின்றி போக்குமளவுக்கு வலிமையானவர்.

அப்போதெல்லாம் வினாத்தாள் அச்சிடப்பட்டு வருகையில் ஏதேனும் பிழைகள் இருக்கும். அத்தகைய பிழைகளை பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்யச்சொல்லி ஒவ்வொரு வகுப்பாக வருவார்கள். பெரிய பள்ளிக்கூடங்களில் கடைசி அறையில் தேர்வெழுதும் மாணவருக்கு இந்தத் தகவல்சேர ஒருமணிநேரத்திற்குமேல் ஆகிவிடும். அதற்குள் அந்தத் தவறுகளைக் கண்டுபிடித்த மாணவர் தேர்வறைக் கண்காணிப்பாளரை பாடாய்படுத்திவிடுவார்.

அப்படித்தான் ஒருமுறை, கணிதத்தில் ஒரு கேள்வி தவறாக வந்துவிட்டது என்றெண்ணி, அன்றைய தேர்வறைக் கண்காணிப்பாளரான சாரதி சாரிடம் சொன்னேன். அவரோ கேள்வி சரியாகத்தான் உள்ளதுஎன்றார். இல்லை சார், பதில் வரவே இல்லை, கேள்விதான் தவறுஎன்றேன். அவர் எரிச்சலடையவோ கோவப்படவோ இல்லை. அந்தக் கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய், இவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் அதற்கான வழிமுறையைக் காட்டினார். சிலநொடிகள் தான் இருக்கும், விடைவந்துவிட்டது.

சாரதி சார் சூப்பர் ஹீரோ இல்லை. தனக்குரிய பாத்திரைத்தை செவ்வனே செய்தவர். இரசனைக்குரியவர், இரசித்துச் செயல்படுபவர். அவரிடம் சில ஹீரோயிச பண்புகள் இருக்கும். சிகை அலங்காரம், குரல் தொனி, நடை என்று. பல ஆசிரியர்களும் ஹீரோ ஹோண்டா வண்டி ஓட்டிவருகையில் இவருடைய வாகனம் மட்டும் TVS Suzuki Max 100.

ஏழாம் வகுப்பில் சிலநாள் அவருடைய வகுப்புகளில் திடீரென ஒரு வாசம் வரும். அது பாக்கு வாசம். பாக்கு சாப்பிட்டதற்கான சிறுதடயம் சிறுசலனம் சிறுசத்தம் கூட இருக்காது. ஆனால், வாசம் வரும். அப்படியொரு வாசம். பின்னாட்களில், “பேரறிஞர் அண்ணா மேடையில் முழங்கும்போது மூக்குப்பொடி போடுவார், பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்து எடுப்பார், எங்கே வைப்பார், எப்படி மூக்குக்குப் போகும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத வண்ணம் மூக்குப்பொடி போடுவார்எனும் தகவலை செவிவழி அறிந்தபோது, சாரதி சார்தான் மனதில் தோன்றுவார்.

சாரதி சாருடனான தொடர்பு பள்ளிக்கூட வகுப்பறையோடு நின்றுவிடவில்லை. பள்ளி வாழ்க்கைக்குப் பின்னும் தொடர்ந்தது. இணையம் கற்று சமூக வலைதளங்களில் களமாடியபோது, முகநூலில் சாரதி சாரைக் காணநேர்ந்தது. அவருடைய நண்பர்கள் பட்டியல் முழுமையடைந்து ஃபாளோவர்களும் பெற்றிருந்தார். புதியதொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர் என்பதால் 2013-14-15 வாக்கிலேயே அவ்வளவு நண்பர்கள் கொண்டிருந்தார். அப்போது நண்பராக இணைய முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்தே நண்பரானேன்.

தேர்ந்த கவிஞன் கவிதை வடிவத்தில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதைப்போல, புதிய புதிய முயற்சிகளை முகநூலில் செய்வார். ஒரு நாளில் நூறுபதிவுகள் பதிவேற்றுதல் போல பல பரிட்சார்த்த முயற்சிகள் செய்தார். சினிமா பற்றி எழுதுவார், அதன்வழி 80களின் சினிமாக்கள் நிறைய அறிந்துகொள்ளமுடிந்தது. அவருக்கு பிடித்த நாயகி அனுஷ்கா என்பது அவரது பதிவுகளின் வழி வெளிப்படும்.  சுஜாதா, ஓஷோ, ஆன்மா, சினிமா என்ற துறைகளில் பரந்த வாசிப்பனுபவம் அவருக்கிருந்தது.

his last fb post

காடந்தேத்தி கோயில் பற்றி  2014-15 வாக்கில் நிழற்படக் கலைஞர் சதீஷ்-உடன் நேரில் சென்று  எழுதியிருந்தேன்.  இணையத்தில் அதுகுறித்துத் தேடியபோது கட்டுரையாளர் பெயரை பார்த்து  அந்த மகிழ்ச்சியை அப்படியே பதிவிட்டிருந்தார் சாரதி சார். காலம் கடந்தும் எழுத்து நிலைக்கும். யாரோ ஒருவரின் தேடலுக்கு முன்பு இட்ட உழைப்பு பலன்தரும் என்பதை உணர்ந்த நாள் அன்று (அந்த பதிவு : https://www.facebook.com/photo.php?fbid=1226105337556653&set=a.103340696499795&type=3&theater)

பிறகு, “திருவாரூர் (Thiruvarur)” என்ற முகநூல் குழுவை நண்பர்களுடன் நடுநிலையோடு வளப்படுத்தி வந்தார். இன்று அந்த குழு 60 ஆயிரம் நபர்களுக்கு மேல் இணையப்பெற்று வலுவான குழுவாக உள்ளது. உள்ளூர்/வெளியூர்/வெளிமாநிலம்/வெளிநாடுகளில் வசிக்கும் திருவாரூர் மக்களை இணைக்கும் பாலமாக அந்தக்குழு விளங்கிவருகிறது. ஆக்கப்பூர்வமாக பல செயல்பாடுகளுக்கும் இக்குழு வாய்ப்பு தந்தது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த தவறான புரிதல் புரளிகள் திருவாரூர் மக்களிடையே ஏராளம். இதனால், திருவாரூரில் பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தகுதி இருந்தும் அங்கு விண்ணப்பிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பத்தேதி முடிந்தபின், “எனக்குத் தெரியாம போயிடுச்சேஎன ஆதங்கப்படும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். எல்லா விவரமும் தெரிந்தும் இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் பிள்ளை வீணாப் போயிடும்னு கவைக்குதவாத பொதுப்புத்தியிலிருந்து அணுகும் படித்த(!) அறிவார்ந்த பெற்றோர்கள் 2020லும் இருக்கிறார்கள்.

சாரதி சாரிடம் இதுகுறித்து சொன்னபோது, திருவாரூர் முகநூல் குழுவில் நேரலைக்கு ஒத்துழைப்பு நல்கினார். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் ஓரளவுக்கு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த புரிதலையும், கமெண்டுகளில் வந்த கேள்விகளுக்குப் பதிலையும் நல்கினேன். (அக்காணொளி:https://www.facebook.com/butterbharathan/videos/2601596456725555/) அதன் தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்வது குறித்த விளக்கக் காணொளியை (https://youtu.be/hwxK991InYI) நண்பர்கள் குபசி, அபர்ணா உதவியுடன் செய்து முடித்தோம். இக்காணொளி பார்த்தவர்களில் ஒருவர் சேர்ந்தால் கூட அது சாரதி என்ற ஆசிரியருக்குக் கிடைத்த வெகுமதியாகக் கொள்வேன். 

ஆரூர் நெட்ஸ் என்ற வாட்சப் குழுவை 02.12.2015 இல் தொடங்கினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவர் உருவாக்கிய குழு இயங்கி வருகிறது. அந்த வாட்சப் குழுவிலும் பல மாறுபட்ட முயற்சிகளைக் கொண்டுவந்தார். அதில் ஒன்று நேர்காணல். குழுவில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேர்காணல் செய்யலாம். தினம் ஒருவர். யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அதில் என்னையும் பொருட்டாக எண்ணி நேர்காணல் செய்தனர். அன்றைய வாட்சப் பேட்டி மாறுபட்ட அனுபவமாக இருந்தது.


தற்போது ஓடிவரும் திருவாரூர் தேர் புதியது. 2015க்குப் பின் தான் செயல்பாட்டுக்கு வந்தது. 2016 நிகழ்ந்த முதல் தேரோட்டத்திற்கு ஆரூர் நெட்ஸ் குழு சார்பில் ஒரு புகைப்பட போட்டி அறிவித்திருந்தனர். திருவாரூர் தேர்த்திருவிழா அன்று எடுக்கப்படும் படங்களைப் போட்டிக்கு அனுப்பலாம். வெல்பவர்களுக்குப் பணப்பரிசளிக்கப்படும். என் சார்பில் ஒரு படம் அனுப்பியிருந்தேன். அது முதல் பரிசை வென்றது. அதன்பின், திடீரென ஒருநாள் சாரதி சாரின் ஃபோன் வந்தது. இந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யலாம்ல என்றார். 100ரூ. மதிப்பில் என் பேசிக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்தது. அன்றைய நாள் எனக்கு அது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.

பின்னாட்களில், நூற்றுக்கணக்கில் செலவு செய்து தூக்கம் தொலைத்து பயணம் செய்து, மாநில அளவிலான போட்டிகளில் ஆயிரக் கணக்கில்(8000+) பரிசு வென்றிருந்தாலும் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து இன்றுவரை தராமல் இருக்கும் போட்டி நடத்திய அமைப்பினரைக் கண்டபின். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னால் உதவ முடிந்தும்(!) உதவுவதற்கான கடமை இருந்தும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களை நம்பி கைக்காசை ஆயிரக்கணக்கில்(31,000+) செலவு செய்து இன்றுவரை இத்தொகையைத் தராமல் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டபின். அன்றொருநாள் ஏதோ ஒரு பெட்டிக்கடையில் தன்னிடம் படித்த மாணவனிடம் கேட்டு அவனுக்கு எந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யவேண்டும் என்று கேட்ட சாரதி சார் இன்றளவும் வியப்பிற்குரியவராகத் தெரிகிறார்.

அவரது அதீத சமூகவலைதளப் பயன்பாடு பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தியது என்று அறிகிறேன் அல்லது அவரது தனிமைப்படுத்தல் சமூகவலைதளங்களில் அதீதமாகச் செயல்படவைத்திருக்கலாம்.  தனிமனிதரின் சமூக வலைதளப் பயன்படுத்தலுக்குப் பின் பல்வேறு உளவியல் காரணிகள் இருக்கும். டிக் டாக் செயலி வந்தபோது, பங்கெடுத்தார். தனியாகவும் சக டிக்டாக் வாசிகளுடனும் வீடியோ எடுத்து பொதுவில் வெளியிடுவார். முகநூல் வாட்சப் ஸ்டேடசில் வைப்பார். இதில் பெண்களுடன் பாட்டுப்பாடி நடித்திருக்கும் வீடியோக்களும் அடங்கும். பெரும்பாலும் அவை பிறமொழி/80களின் பாடலாக இருந்திருக்கும். சாரதி சார் இறப்பதற்கு முதல்நாள் கூட ஒரு மலையாளப் பாடலை ஒரு பெண்ணோடு இணைந்து பாடி பதிவேற்றியிருந்தார். இந்தச் சமூகம் தனிமனிதர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுள் சில ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் டிக் டாக் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், அவருடைய உரிமை. சாரதி சார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்வகையில்தான் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டேன்.


சாரதி சார், கவிஞர். கவிதைப் போட்டிகளுக்கு அவர் நடுவராக இருந்திருக்கிறார். மாணவர்களை கவிதை எழுதச் சொல்லித் தயார்ப்படுத்துவார். 2007ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள்புத்தகத்தை அளித்து, அதில் இரண்டு கவிதைகளை மனனம் செய்யச் சொல்லியிருந்தார். 2007 ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பாரதிதாசன் கவிதையை முதல்முறையாக மாணவர்கள் முன்னிலையில் கூறினேன். நிகழ்வு முடிந்து புத்தகத்தைத் திரும்பத்தரச் சென்றபோது, நீயே வைத்துக்கொள் என்றார். இன்றுவரை என்னிடம் இருக்கும் ஒரே ஒரு பாரதிதாசன் கவிதைகள் புத்தகம் சாரதி சார் அளித்தது. ஒன்று சொல்லட்டுமா, இதே பாரதிதாசன் கவிதைகள்ஒப்பித்தல் போட்டியில்தான் 2016இல் எம் பள்ளியின் மேனாள் மாணவரும் மேனாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியிடம் மாநில அளவில் பரிசு பெற்றேன்.

விதை சாரதி சார் போட்டது.

தக | 15.07.2020


வெள்ளி, 10 ஜூலை, 2020

உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி !

             ரௌடி விகாஸ்துபே என்கவுண்டர் இன்று நிகழ்ந்திருக்கிறது. இது தேசிய அளவில்  முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகக் கருதப்படுகிறது. கடந்த ஜூலை 2ஆம் நாள் கான்பூர் மாவட்டம் பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ்துபே-ஐ கைதுசெய்ய 8 காவலர்கள் (DSP-1, SI-3, Constable-4) சென்றுள்ளனர். அவர்களை சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார் விகாஸ் துபே. அதன்பின், அவரது தலைக்கு உபி அரசாங்கம் 2.5 இலட்சம் தொகை நிர்ணயித்தது. அது, 5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜூலை9 ஆம் நாள் மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூர் கொண்டுவரும் வழியில்  தப்ப முயன்றிருக்கிறார். இதனால் என்கவுண்டர் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது உத்திரப் பிரதேச கான்பூர் மாவட்டத்தின் SSP ஆக  தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி தினேஷ்குமார் பணியாற்றிவருகிறார். அவருக்கு உபி அரசு 2019 குடியரசு தினவிழாவில் விருதளித்தது. இதையொட்டி விகடன் ஆர்டிகலுக்காகப் பேட்டி எடுத்திருந்தேன். அது சில காரணங்களால் வெளியாகவில்லை. அதனை இப்போது  எடிட் செய்யாது வெளியிடுகிறேன்.

-தக | 10.07.2020


உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசு தின விழாவில் சமூகத்திற்கு நன்மை செய்த பல்துறையைச் சேர்ந்த ஆளுமைகள் அரசாங்கத்தினால் பாராட்டப்படுவது நாம் அறிந்ததே. நேற்று (26.01.2019) நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்தமைக்காக விருது கொடுத்து பாராட்டப்பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமார்.


விருது பெற்றதன் பின்னணி

2018 அக்டோபர் 2 இரவு. உத்திரப்பிரதேசத்தின் மேற்கில் உள்ள ஷாம்லியின் ஜின்ஜனா காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் காவலர்கள் மீது பாய்ந்தனர். ஒரு காவலரைச் சுட்டுவிட்டு, மற்றொருவரைத் தாக்கினர். காவலர்களின் 303 மற்றும் இன்சாஸ் இயந்திர நவீனத் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அவர்களைக் கண்டுபிடிக்க ஷாம்லி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் நான்கு குழுக்கள் அமைத்தார். உபி.யின் மேற்குப் பகுதிகள்  மற்றும் எல்லைப் பகுதிகளில் அவர்கள் தொடர்ச்சியான தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் துப்பு கிடைத்தது. அதனடிப்படையில், ஹரியானாவின் எல்லைப் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கிகளை அபகரித்துச் சென்றவர்களில் மூவரை மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தின் போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

குற்றவாளிகளிடம் அக்.02 ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்களிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகள் மட்டுமல்லாது சீனக் கைத்துப்பாக்கியும் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டு, விசாரைணை நடைபெற்றது. விசாரணையில் அவர்கள் காலீஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அக்.07 ஆம் தேதி  பஞ்சாப் பாட்டியாலாவில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

 இந்திய சுதந்திரத்தின் பின், பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சில அமைப்புகள் ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர். சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள்எனப்படுகின்றனர். அக்கூட்டத்தில் மேனாள் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான சுக்பீர்சிங் பாதல் கலந்து கொள்ள இருந்தனர். இவர்களிருவரும் தனிநாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லாதவர்கள்.

இந்தத் தீவிரவாதிகளின் குறி, சுக்பீர்சிங் பாதல் மீதே இருந்துள்ளது, தெரியவந்துள்ளது. உபியிலிருந்து, ஹரியானா வழியாக, பஞ்சாப் செல்வது அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால், அவர்களைப் பிடித்ததால் அசம்பாவிதச் சம்பவம் முறியடிக்கப்பட்டது. 

இது போன்ற தீவிரவாத வழக்குகளை மத்தியப் புலனாய்வு அமைப்புகளான ஐபி அல்லது ஐஎன்ஏ போன்றவையே விசாரணை செய்யும். ஆனால், காவல்துறையினர் கண்டுபிடித்தது சமீபகாலத்தில் பெருமைக்குரிய செயல் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

       ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் இந்தத் துரிதச் செயலைப் பாராட்டி, அவருக்கு உத்திரப்பிரதேச மாநிலம், சஹரான்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உபி.யின் ஆயுர்வேதத்துறை அமைச்சர் தரம்பால் சிங் செய்னி DGP Commendation Desk’s silver விருது வழங்கி சிறப்பித்தார்.

தற்போதுசஹரான்பூர் மாவட்ட எஸ்எஸ்பியாகப் பணியாற்றி வரும் தினேஷ்குமார் அவர்களிடம் பேசினோம்

மேட்டூரின் சின்னதண்டா கிராமத்தைச் சேர்ந்த நான் விவாசயத்தைப் பின்புலமாகக் கொண்டவன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து 2009இல் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தேன். கடந்த காலத்தில் பல்வேறு சவாலான வழக்குகளைச் சந்தித்திருந்தாலும், இது முதன்மையான ஒன்று. உரிய நேரத்தில், உரிய வேகத்தில் செயல்பட்டமையால் அவர்களைப் பிடிக்க முடிந்தது. இச்செயலுக்காக உபி மாநில அரசு விருது கொடுத்துப் பாராட்டியிருப்பது பெருமைக்குரியது. தீவிரவாதிகளைப் பிடிக்க இணைந்து பணியாற்றிய அனைத்துக் காவலர்களுக்கும் சென்று சேரும்”. என்றார்.

இதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி டூன்கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் இல்லத்தில்  50இலட்சத்திற்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 18 நாள் விசாரணைக்குப் பின், 40இலட்சத்திற்கும் மேல் மீட்டுக் கொடுத்துள்ளார் இவர். சஹரன்பூரில் கொள்ளையடிக்கப்பட்டதில் அதிகபட்ச தொகை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

உ.பி. தமிழருக்கு ஒரு சல்யூட்! 

- தக | 27.01.2019