நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 15 ஜூலை, 2020

ஆசிரியரின் மரணம் – வகுப்பறைக்குள்ளும் வெளியிலும்

அறிவியல் ஆசிரியர் சாரதி சார் ஜூன் 21 மறைந்தார் என்ற செய்தி எதிர்பாராத ஒன்று. வகுப்பறைக்குள்ளும் வெளியிலும் அணுகுவதற்கு எளியவர். அவருடனான நினைவுகள்....


ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்கையில் அது மேல்நிலைப்பள்ளி. அப்போது எங்களுக்கு வகுப்பெடுத்த அனைவரும் முக்கியமானவர்கள். அவர்கள் வாயிலாகத் தான் உயர்கல்வி-மேல்நிலைப் பள்ளியைப் புரிந்துகொண்டோம்.

அப்படித்தான் சாரதி சார், ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தார். மேலும் 7 9ஆம் வகுப்பிலும் பாடமெடுத்தார். உயர்ந்த மனிதர், பருத்த உடல். வகுப்பிற்கு நேரந்தவறாமல் வந்திடுவார்.

சாரதி சாரின் வகுப்புகள் போர் அடித்ததில்லை, ஒரு போதும் நோட்ஸ் வாங்கச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியதில்லை. பாடப்புத்தகங்களை விட பயிற்சிப் புத்தகங்கள்தான் மாணவர்களை மேம்படுத்தும் என்ற பொதுப்புத்தி அப்போது நிலவியது. அறிவியல் போன்ற பாடங்களுக்கு நோட்ஸ் வைத்திருப்பது மாணவர்களிடையே சமூக அந்தஸ்தாக கருதப்பட்ட காலம் அது. அதிலும் வெற்றி நோட்ஸ்கள் தரமானவை என்ற போக்கு இருந்தது.

அந்த விலை உயர்ந்த நோட்ஸ்கள் வாங்க இயலாத மாணவர்கள் படித்த வகுப்பறை எங்களுடையது. அப்போதெல்லாம் ரோகிணி என்றொரு நோட்ஸ் வரும். 2007இல் அதன் விலை 6ரூபாய். சாணித்தாளில் பொடி எழுத்துருவில் வெளியாகும். 9ஆம் வகுப்பு வரை அதைத்தான் பயன்படுத்தினேன்/னோம். புத்தகத்திலேயே பெரும்பகுதியை முடித்துக்கொள்வோம்.


           

நான் படித்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் நுட்பாமான உள்கட்டமைப்பில் இருக்கும். 6இன் நீட்சி 7, 7இன் நீட்சி 8 என படித்தான வளர்ச்சியில் பாடங்கள் இருக்கும். இந்த நீட்சி 12ஆம் வகுப்பில் நிறைவடையும். அறிவியல் ஆசிரியர்கள் ப்ளூ ப்ரிண்ட் பார்த்து சில பாடங்களை தவிர்த்து விடுவதுண்டு. அப்படி ஆசிரியர்கள் தவிர்க்கும் பாடங்களில் முதன்மையானது உயிரியல் சார் பாடங்கள். குறிப்பாக மனித உடலமைப்பு, பாலுறுப்பு தொடர்பான பாடங்கள்.

அத்தகைய பாடங்களை நடத்துகிறேன் எனும் பெயரில் கொச்சையாகவும், முறையற்றதுமாக தவறாக மாணவர்களை வழிநடத்துபவர்களும் உண்டு. ஆனால், சாரதி சார், அப்படியில்லை. முறையாக நடத்தினார். தேவையானவற்றை தேவையான அளவு தெளிவாக நடத்தினார். மாணவர்களின் கேள்விகளை சந்தேகத்திற்கு இடமின்றி போக்குமளவுக்கு வலிமையானவர்.

அப்போதெல்லாம் வினாத்தாள் அச்சிடப்பட்டு வருகையில் ஏதேனும் பிழைகள் இருக்கும். அத்தகைய பிழைகளை பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்யச்சொல்லி ஒவ்வொரு வகுப்பாக வருவார்கள். பெரிய பள்ளிக்கூடங்களில் கடைசி அறையில் தேர்வெழுதும் மாணவருக்கு இந்தத் தகவல்சேர ஒருமணிநேரத்திற்குமேல் ஆகிவிடும். அதற்குள் அந்தத் தவறுகளைக் கண்டுபிடித்த மாணவர் தேர்வறைக் கண்காணிப்பாளரை பாடாய்படுத்திவிடுவார்.

அப்படித்தான் ஒருமுறை, கணிதத்தில் ஒரு கேள்வி தவறாக வந்துவிட்டது என்றெண்ணி, அன்றைய தேர்வறைக் கண்காணிப்பாளரான சாரதி சாரிடம் சொன்னேன். அவரோ கேள்வி சரியாகத்தான் உள்ளதுஎன்றார். இல்லை சார், பதில் வரவே இல்லை, கேள்விதான் தவறுஎன்றேன். அவர் எரிச்சலடையவோ கோவப்படவோ இல்லை. அந்தக் கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய், இவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் அதற்கான வழிமுறையைக் காட்டினார். சிலநொடிகள் தான் இருக்கும், விடைவந்துவிட்டது.

சாரதி சார் சூப்பர் ஹீரோ இல்லை. தனக்குரிய பாத்திரைத்தை செவ்வனே செய்தவர். இரசனைக்குரியவர், இரசித்துச் செயல்படுபவர். அவரிடம் சில ஹீரோயிச பண்புகள் இருக்கும். சிகை அலங்காரம், குரல் தொனி, நடை என்று. பல ஆசிரியர்களும் ஹீரோ ஹோண்டா வண்டி ஓட்டிவருகையில் இவருடைய வாகனம் மட்டும் TVS Suzuki Max 100.

ஏழாம் வகுப்பில் சிலநாள் அவருடைய வகுப்புகளில் திடீரென ஒரு வாசம் வரும். அது பாக்கு வாசம். பாக்கு சாப்பிட்டதற்கான சிறுதடயம் சிறுசலனம் சிறுசத்தம் கூட இருக்காது. ஆனால், வாசம் வரும். அப்படியொரு வாசம். பின்னாட்களில், “பேரறிஞர் அண்ணா மேடையில் முழங்கும்போது மூக்குப்பொடி போடுவார், பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்து எடுப்பார், எங்கே வைப்பார், எப்படி மூக்குக்குப் போகும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத வண்ணம் மூக்குப்பொடி போடுவார்எனும் தகவலை செவிவழி அறிந்தபோது, சாரதி சார்தான் மனதில் தோன்றுவார்.

சாரதி சாருடனான தொடர்பு பள்ளிக்கூட வகுப்பறையோடு நின்றுவிடவில்லை. பள்ளி வாழ்க்கைக்குப் பின்னும் தொடர்ந்தது. இணையம் கற்று சமூக வலைதளங்களில் களமாடியபோது, முகநூலில் சாரதி சாரைக் காணநேர்ந்தது. அவருடைய நண்பர்கள் பட்டியல் முழுமையடைந்து ஃபாளோவர்களும் பெற்றிருந்தார். புதியதொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர் என்பதால் 2013-14-15 வாக்கிலேயே அவ்வளவு நண்பர்கள் கொண்டிருந்தார். அப்போது நண்பராக இணைய முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்தே நண்பரானேன்.

தேர்ந்த கவிஞன் கவிதை வடிவத்தில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதைப்போல, புதிய புதிய முயற்சிகளை முகநூலில் செய்வார். ஒரு நாளில் நூறுபதிவுகள் பதிவேற்றுதல் போல பல பரிட்சார்த்த முயற்சிகள் செய்தார். சினிமா பற்றி எழுதுவார், அதன்வழி 80களின் சினிமாக்கள் நிறைய அறிந்துகொள்ளமுடிந்தது. அவருக்கு பிடித்த நாயகி அனுஷ்கா என்பது அவரது பதிவுகளின் வழி வெளிப்படும்.  சுஜாதா, ஓஷோ, ஆன்மா, சினிமா என்ற துறைகளில் பரந்த வாசிப்பனுபவம் அவருக்கிருந்தது.

his last fb post

காடந்தேத்தி கோயில் பற்றி  2014-15 வாக்கில் நிழற்படக் கலைஞர் சதீஷ்-உடன் நேரில் சென்று  எழுதியிருந்தேன்.  இணையத்தில் அதுகுறித்துத் தேடியபோது கட்டுரையாளர் பெயரை பார்த்து  அந்த மகிழ்ச்சியை அப்படியே பதிவிட்டிருந்தார் சாரதி சார். காலம் கடந்தும் எழுத்து நிலைக்கும். யாரோ ஒருவரின் தேடலுக்கு முன்பு இட்ட உழைப்பு பலன்தரும் என்பதை உணர்ந்த நாள் அன்று (அந்த பதிவு : https://www.facebook.com/photo.php?fbid=1226105337556653&set=a.103340696499795&type=3&theater)

பிறகு, “திருவாரூர் (Thiruvarur)” என்ற முகநூல் குழுவை நண்பர்களுடன் நடுநிலையோடு வளப்படுத்தி வந்தார். இன்று அந்த குழு 60 ஆயிரம் நபர்களுக்கு மேல் இணையப்பெற்று வலுவான குழுவாக உள்ளது. உள்ளூர்/வெளியூர்/வெளிமாநிலம்/வெளிநாடுகளில் வசிக்கும் திருவாரூர் மக்களை இணைக்கும் பாலமாக அந்தக்குழு விளங்கிவருகிறது. ஆக்கப்பூர்வமாக பல செயல்பாடுகளுக்கும் இக்குழு வாய்ப்பு தந்தது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த தவறான புரிதல் புரளிகள் திருவாரூர் மக்களிடையே ஏராளம். இதனால், திருவாரூரில் பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தகுதி இருந்தும் அங்கு விண்ணப்பிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பத்தேதி முடிந்தபின், “எனக்குத் தெரியாம போயிடுச்சேஎன ஆதங்கப்படும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். எல்லா விவரமும் தெரிந்தும் இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் பிள்ளை வீணாப் போயிடும்னு கவைக்குதவாத பொதுப்புத்தியிலிருந்து அணுகும் படித்த(!) அறிவார்ந்த பெற்றோர்கள் 2020லும் இருக்கிறார்கள்.

சாரதி சாரிடம் இதுகுறித்து சொன்னபோது, திருவாரூர் முகநூல் குழுவில் நேரலைக்கு ஒத்துழைப்பு நல்கினார். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் ஓரளவுக்கு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த புரிதலையும், கமெண்டுகளில் வந்த கேள்விகளுக்குப் பதிலையும் நல்கினேன். (அக்காணொளி:https://www.facebook.com/butterbharathan/videos/2601596456725555/) அதன் தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்வது குறித்த விளக்கக் காணொளியை (https://youtu.be/hwxK991InYI) நண்பர்கள் குபசி, அபர்ணா உதவியுடன் செய்து முடித்தோம். இக்காணொளி பார்த்தவர்களில் ஒருவர் சேர்ந்தால் கூட அது சாரதி என்ற ஆசிரியருக்குக் கிடைத்த வெகுமதியாகக் கொள்வேன். 

ஆரூர் நெட்ஸ் என்ற வாட்சப் குழுவை 02.12.2015 இல் தொடங்கினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவர் உருவாக்கிய குழு இயங்கி வருகிறது. அந்த வாட்சப் குழுவிலும் பல மாறுபட்ட முயற்சிகளைக் கொண்டுவந்தார். அதில் ஒன்று நேர்காணல். குழுவில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேர்காணல் செய்யலாம். தினம் ஒருவர். யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அதில் என்னையும் பொருட்டாக எண்ணி நேர்காணல் செய்தனர். அன்றைய வாட்சப் பேட்டி மாறுபட்ட அனுபவமாக இருந்தது.


தற்போது ஓடிவரும் திருவாரூர் தேர் புதியது. 2015க்குப் பின் தான் செயல்பாட்டுக்கு வந்தது. 2016 நிகழ்ந்த முதல் தேரோட்டத்திற்கு ஆரூர் நெட்ஸ் குழு சார்பில் ஒரு புகைப்பட போட்டி அறிவித்திருந்தனர். திருவாரூர் தேர்த்திருவிழா அன்று எடுக்கப்படும் படங்களைப் போட்டிக்கு அனுப்பலாம். வெல்பவர்களுக்குப் பணப்பரிசளிக்கப்படும். என் சார்பில் ஒரு படம் அனுப்பியிருந்தேன். அது முதல் பரிசை வென்றது. அதன்பின், திடீரென ஒருநாள் சாரதி சாரின் ஃபோன் வந்தது. இந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யலாம்ல என்றார். 100ரூ. மதிப்பில் என் பேசிக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்தது. அன்றைய நாள் எனக்கு அது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.

பின்னாட்களில், நூற்றுக்கணக்கில் செலவு செய்து தூக்கம் தொலைத்து பயணம் செய்து, மாநில அளவிலான போட்டிகளில் ஆயிரக் கணக்கில்(8000+) பரிசு வென்றிருந்தாலும் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து இன்றுவரை தராமல் இருக்கும் போட்டி நடத்திய அமைப்பினரைக் கண்டபின். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னால் உதவ முடிந்தும்(!) உதவுவதற்கான கடமை இருந்தும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களை நம்பி கைக்காசை ஆயிரக்கணக்கில்(31,000+) செலவு செய்து இன்றுவரை இத்தொகையைத் தராமல் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டபின். அன்றொருநாள் ஏதோ ஒரு பெட்டிக்கடையில் தன்னிடம் படித்த மாணவனிடம் கேட்டு அவனுக்கு எந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யவேண்டும் என்று கேட்ட சாரதி சார் இன்றளவும் வியப்பிற்குரியவராகத் தெரிகிறார்.

அவரது அதீத சமூகவலைதளப் பயன்பாடு பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தியது என்று அறிகிறேன் அல்லது அவரது தனிமைப்படுத்தல் சமூகவலைதளங்களில் அதீதமாகச் செயல்படவைத்திருக்கலாம்.  தனிமனிதரின் சமூக வலைதளப் பயன்படுத்தலுக்குப் பின் பல்வேறு உளவியல் காரணிகள் இருக்கும். டிக் டாக் செயலி வந்தபோது, பங்கெடுத்தார். தனியாகவும் சக டிக்டாக் வாசிகளுடனும் வீடியோ எடுத்து பொதுவில் வெளியிடுவார். முகநூல் வாட்சப் ஸ்டேடசில் வைப்பார். இதில் பெண்களுடன் பாட்டுப்பாடி நடித்திருக்கும் வீடியோக்களும் அடங்கும். பெரும்பாலும் அவை பிறமொழி/80களின் பாடலாக இருந்திருக்கும். சாரதி சார் இறப்பதற்கு முதல்நாள் கூட ஒரு மலையாளப் பாடலை ஒரு பெண்ணோடு இணைந்து பாடி பதிவேற்றியிருந்தார். இந்தச் சமூகம் தனிமனிதர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுள் சில ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் டிக் டாக் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், அவருடைய உரிமை. சாரதி சார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்வகையில்தான் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டேன்.


சாரதி சார், கவிஞர். கவிதைப் போட்டிகளுக்கு அவர் நடுவராக இருந்திருக்கிறார். மாணவர்களை கவிதை எழுதச் சொல்லித் தயார்ப்படுத்துவார். 2007ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள்புத்தகத்தை அளித்து, அதில் இரண்டு கவிதைகளை மனனம் செய்யச் சொல்லியிருந்தார். 2007 ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பாரதிதாசன் கவிதையை முதல்முறையாக மாணவர்கள் முன்னிலையில் கூறினேன். நிகழ்வு முடிந்து புத்தகத்தைத் திரும்பத்தரச் சென்றபோது, நீயே வைத்துக்கொள் என்றார். இன்றுவரை என்னிடம் இருக்கும் ஒரே ஒரு பாரதிதாசன் கவிதைகள் புத்தகம் சாரதி சார் அளித்தது. ஒன்று சொல்லட்டுமா, இதே பாரதிதாசன் கவிதைகள்ஒப்பித்தல் போட்டியில்தான் 2016இல் எம் பள்ளியின் மேனாள் மாணவரும் மேனாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியிடம் மாநில அளவில் பரிசு பெற்றேன்.

விதை சாரதி சார் போட்டது.

தக | 15.07.2020


2 கருத்துகள்: