நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 28 ஜூலை, 2020

உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் இருந்து பின்வாங்க மறுக்கும் சீனா

28.07.2020

உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் இருந்து பின்வாங்க மறுக்கும் சீனா

(சீன விவகாரங்களுக்கான மூலோபாய ஆய்வாளர் டாக்டர். ரூபா நாரயண தாஸ் அவர்கள் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/101895

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சீன உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் (எல்.ஏ.சி) பின்வாங்கும் நடைமுறை தொடர்பாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ராஜீய, ராணுவ ரீதியில் சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் ரோந்து முனை 14, 15 மற்றும் 17 ஏ ஆகியவற்றிலிருந்து, சீனப்படைகள் முழுமையாக பின்வாங்கப்பட்டுள்ளன. எல்லை விவகாரங்கள் தொடர்பான செயல்முறை  ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பின் கீழ்,  கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்திற்குப் பேச்சு வார்த்தை  நடைபெற்றது.

இருப்பினும், பாங்காங் த்சோ ஏரியை ஒட்டிய ஃபிங்கர்  5 முதல் ஃபிங்கர் 8 வரையுள்ள பகுதியிலிருந்து இன்னும் சீனப்படைகள் விலகவில்லை. இந்தியா தனது  நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,  சீனாவுடனான எல்லைக்கோட்டைக் கடைப்பிடிக்கவும் மதிக்கவும் இந்தியா முழுக்க உறுதிபூண்டுள்ளது என்பதையும், எல்லையில் நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளைத் தாம் ஏற்க மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (எம்.இ.ஏ) ஓர் அறிக்கையில், “இருதரப்புப் படைப்பிரிவு கோர்கமாண்டர்களின் மற்றொரு கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவாக, முழுமையான பின்வாங்கலை  உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறைச் அமைச்சக அறிக்கையில் இருதரப்பு உறவுகளுக்கான நெறிமுறைகளுக்கு இணங்க, இந்திய-சீன எல்லைப் பகுதிகளிலிருந்து, படைகள் விரைவில்  முழுமையாக விலகி, அமைதியை நிலைநாட்டுவது  அவசியம் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது, ஜூலை 5, 2020 அன்று தொலைபேசி உரையாடல்களின் மூலம், இருதரப்பின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையே ஏற்பட்ட  உடன்படிக்கைக்கு இணங்க உள்ளதாகவும், மூத்த ராணுவத் தளபதிகளிடையே இன்றுவரை எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை  இரு தரப்பினரும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

மறுபுறம், ஊடகங்கள் சீன ஆதாரங்களை மேற்கோள்காட்டி, “களத்தின் நிலைமையைத் தணிக்கவும் எளிதாக்கவும் இரு நாடுகளின் முன்னணி எல்லைப் பாதுகாப்புப் படைகளால் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. இந்திய-சீனா உறவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, சீனாவுடனான வர்த்தகம் முன்பு போலவே இருக்காது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. எல்லைப் பகுதியிலிருந்து, படைகளை முழுமையாகப் பின்வாங்கி, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க சீனா செயல்படும்வரை, சீனாவுடனான வர்த்தகம் முன்பு போலவே இருக்காது என்பதை இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

வளர்ச்சிக்கான காலகட்டத்தில், எல்லை விரிவாக்க சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்பு கூறியதைக் கவனத்தில் கொள்ளலாம். குறிப்பிடத்தக்க வகையில், எந்த நாட்டினருடனான வர்த்தகப் போரையும் இந்தியா நம்பவில்லை. இருப்பினும், சில சீன செயலிகளுக்கான தடை, இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும்.

இரு நாடுகளுக்காகவும், இருநாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே  எல்லைக் கோட்டின் நிலைமை விரைவில் மீட்டெடுக்கப்படும். சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான போக்கு நிலவும் இந்நேரத்தில், பிளவுகளை சரிசெய்வதும், இருதரப்பு நலனுக்காக இரு நாடுகளுக்கும் அவர்களது மக்களுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை சரிசெய்வதும் சீனாவின் தரப்பில் விவேகமானதாக இருக்கும்.

இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகளாக இருக்கின்றன என்பது ஒரு வாழ்வியல் உண்மை. நிரந்தரக் கவலை மற்றும் பதற்றத்தை விட நிம்மதியாக வாழ்வது எப்போதும் புத்திசாலித்தனம். இந்த ஆண்டு, இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில், இந்தியா-சீனா எல்லையில்  அமைதியை மீட்டெடுப்பது, விரும்பிய திசையில் செல்வதற்கான பெரும் வளர்ச்சிப்படியாக இருக்கும்.

இந்திய சீன எல்லையில் நிலவும் தொடர்ச்சியான பாதுகாப்புத் தொடர்பான குழப்பம், மிக விரைவில் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்று, படைப்பிரிவு கமாண்டர்களின் கூட்டத்தில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக