நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 19 மே, 2021

பூவொன்று நின்றிருந்தது சாலையில்...

(முன்குறிப்பு :

மாவரைக்கச் சென்றிருந்தேன் மாலையில்

பூவொன்று நின்றிருந்தது சாலையில்

இப்படித் தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)

*

மாவரைக்க வேண்டும். அம்மா பணித்தாள். அந்தி மாலை நேரம். நீண்ட சாலையோரம். முதல்முறை செல்கிறேன் அங்கு.

மில்-லைத் தேடிய கடைக்கண் பார்வையை நில்லென்று சொல்லவில்லை அவள், நின்றுவிட்டது வண்டி அவளுக்குப் பக்கத்தில்.

இயல்பில் இரைச்சலான இடம்கூட அவள் இருப்பதால் அமைதி கொண்டது. வாசலில் அல்காரிதப் பாத்திரங்கள், பவா செல்லதுரையான மனிதர்கள் என இல்லாத மின்சாரம் இயல்பைக் கலைத்துப் போட்டிருந்தது.

வெளியே வருகிறோம்! என எந்தப் பிரயத்தனங்களும் செய்திருக்கவில்லை. உம்மென்ற முகம். கடந்துவந்த மேகமாய் கலைந்த ஆடை. கொண்டைக்கு கூடப்பிறந்த தங்கையென சிகை. ‘இருள்வானில் ஒளிவீசும் முழுநிலவுக்கு எதிர்ப்பதமென அஞ்சனமிலா கண்கள். இந்தக் கண்களை பார்ப்பது அரிது. அரிதென்றால் அரிதினும் அரிது. வளரிளம் குழந்தைகள் மட்டுமே பட்டா வைத்திருக்கும் இந்தக் கண்களுக்கு.

லேடி பேர்ட்-ஐ அச்சாணியாய்க் கொண்டு ஊசலாய் அலைந்தன கால்கள். கட்புலனாகாத கொலுசு செவிப்புலனானது. யாருக்கேனும் காத்திருப்பவளோ, மாவரைக்க வந்தவளோ, மாலையிலே பூத்திருக்கும் அல்லிப்பூ இவள்தானோ என்ற விவரங்கள் ஏதொன்றும் அறியமால் நிகழ்ந்தன கண் சந்திப்புகள்.

யாரென்று தெரியவில்லை, ஏதொன்றும் அறியவில்லை.ஆனாலும் அழகு. அலட்டிக்கொள்ளாத அழகு. இந்த பிரக்ஞை இருந்தால் உடனுறையும் கர்வம் வெளிப்படவேயில்லை. “இங்க யாரும் இவ்ளோ அழகா இப்படியொரு அழகைப் பார்த்ததில்லைஎன்றிருப்பேன் தைரியம் இருந்திருந்தால்.

ஊசல் கால்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. காரைக்கால் பண்பலையில் யாரிந்த முயல்குட்டி, உன் பேரென்ன முயல்குட்டி…” ஒலிப்பதாய் மனதுக்கு மட்டும் கேட்டுகொண்டது.

கண்நடத்திய பேச்சுவார்த்தைகள் மட்டும் நான்கைந்து சுற்றுகளைக் கடந்தன. இதுவே அதிகபட்சம்தான் சிறுநகரங்களில். வலித்திருக்கும் கால்கள்போல. கால்களில் கைகளை முட்டுக்கொடுத்த பாட்டியிடம் பேச வந்தாள், பேசினாள். பாட்டியுடன் மாவரைக்க வந்திருக்கிறாள் என்பது உறுதியானது. பட்சியாக இருந்திருந்தால் இது லவ் தான ஜெஸ்ஸிஎன்றிருக்கும்.

நிமிடங்களின் நிறைவில்., லேட் பேர்ட்-இல் பறந்தது றெக்கை இல்லா தேவதை. பிறகென்ன, பெங்களூரில் பணிபுரியும் உறவினரின் அறிவுரையின் பேரில் காலை போட்ட கொரோனா தடுப்பூசியால் உடல்வலியெடுக்கும் இதுவரை மருந்து மாத்திரையே அறியாத பாட்டியுடன் நட்பாகியாச்சு. (இன்னும் எத்தனை காலம்தான் நட்பாகுவது இந்த பாட்டிகளுடன்..)

நல்லா பேசினார். நிறைய பேசினார். மின்சாரம் வந்து மாவரைத்த பெரும்வாளியை கைதூக்க முடியாமல் சென்ற பாட்டியிடம் நான் வேண்டுமானால் கொண்டுவந்து தரட்டுமா என்றேன். என்னமோ தெரியவில்லை வேண்டாம்பாஎன்று விட்டார்.


 


வியாழன், 29 ஏப்ரல், 2021

கரும்பு தந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே - பாரதிதாசன் கவிதை

கரும்பு தந்த தீஞ்சாறே

கனிதந்த நறுஞ்சுளையே

கவின்செய் முல்லை

அரும்புதந்த வெண்ணகையே

அணிதந்த செந்தமிழே

அன்பே,

கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலை

ஈடழித்து

வரும்புதுமை நினைக்கையிலே

நெஞ்சு பதைக்கும் சொல்ல

வாய் பதைக்கும்

 



எடுத்துமகிழ் இளங்குழந்தாய்

இசைத்துமகிழ் நல்யாழே,

இங்குள்ளோர் வாய்

மடுத்துமகிழ் நறுந்தேனே

வரைந்துமகிழ் ஓவியமே

அன்பே,

வன்பு

தொடுத்து மகிழ் நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலைத்

தோன்றா வண்ணம்

தடுத்துவரல் நினைக்கையிலே

நெஞ்சுபதைக்கும் சாற்ற

வாய் பதைக்கும்

 

பண்டுவந்த செழும்பொருளே

பார் அடர்ந்த இருட்கடலில்

படிந்த மக்கள்

கண்டு வந்த திருவிளக்கே,

களிப்பருளும் செந்தமிழே

அன்பே,

வாழ்வில்

தொண்டுவந்த நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலைத்

துளிர்க்கா வண்ணம்

உண்டுவரல் நினைக்கையிலே

உளம் பதைக்கும் சொல்வதெனில்

வாய்பதைக்கும்

 

உடலியக்கும் நல்லுயிரே

உயிரியக்கும் நுண்கலையே

மக்கள் வாழ்வாம்

கடலியக்கும் சுவைப்பாட்டே

கண்ணான செந்தமிழே

அன்பே,

நாட்டில்

கெடல் இயக்கும் நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலைக்

கெடுக்கப் பாடு

படல்தன்னை நினைக்கையிலே

நெஞ்சுபதைக்கும் பகர

வாய்பதைக்கும்

 

வையத்தின் பழநிலவே

வாழ்வுக்கோர் புத்துணர்வே

மயிலே, மேலோர்

ஐயத்திற் கறிவொளியே

ஆடல்தரும் செந்தமிழே

அன்பே,

தீமை

செய்யத்தான் நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலைத்

தீர்க்க எண்ணும்

மெய்யைத்தான் நினைக்கையிலே

நெஞ்சுபதைக்கும் விளக்க

வாய்பதைக்கும்

- பாரதிதாசனார், தமிழியக்கம் நூலிலிருந்து

 (சந்தி சேர்க்கப்பெற்று, கவிதையின் பொருள் மாறா வண்ணம் தற்காலத்தினர் படிக்கும் இலகுவாக அரிதான மேற்படி மாற்றங்கள் செய்து பதிவேற்றப் பெற்றுள்ளது)  

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

புதுமைப்பித்தன் மின்னூல்கள் இலவசம் | அமேசான் கிண்டில்




புதுமைப்பித்தன் சிறுகதைகள்:

https://www.amazon.in/dp/B07CP58YSY/

 

உலகச் சிறுகதைகள் முழுத்தொகுப்பு:

https://www.amazon.in/dp/B07D93N2GR/

 

பிரேத மனிதன்: 

https://www.amazon.in/dp/B0924C1DKM/

 

நாரத ராமாயணம்:

https://www.amazon.in/dp/B08CCJVZPG/

 

சிற்றன்னை: 

https://www.amazon.in/dp/B086JD7RY8/

 

ஆண்மை: 

https://www.amazon.in/dp/B07H9D5GQW/

 

பளிங்குச் சிலை  மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதி: 

https://www.amazon.in/dp/B07H731LYH/

 

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்: கதை வடிவில்:

https://www.amazon.in/dp/B07DD328SK/

 

வேதாளம் சொன்ன கதை:

https://www.amazon.in/dp/B083N1G2Y1/

 

புதுமைப்பித்தன் வரலாறு:

https://www.amazon.in/dp/B088PZQS9S/

புதுமைப்பித்தன் சிறுகதைகள்:

https://www.amazon.in/dp/B07CP58YSY/

 

உலகச் சிறுகதைகள் முழுத்தொகுப்பு:

https://www.amazon.in/dp/B07D93N2GR/

 

பிரேத மனிதன்: 

https://www.amazon.in/dp/B0924C1DKM/

 

நாரத ராமாயணம்:

https://www.amazon.in/dp/B08CCJVZPG/

 

சிற்றன்னை: 

https://www.amazon.in/dp/B086JD7RY8/

 

ஆண்மை: 

https://www.amazon.in/dp/B07H9D5GQW/

 

பளிங்குச் சிலை  மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதி: 

https://www.amazon.in/dp/B07H731LYH/

 

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்: கதை வடிவில்:

https://www.amazon.in/dp/B07DD328SK/

 

வேதாளம் சொன்ன கதை:

https://www.amazon.in/dp/B083N1G2Y1/

 

புதுமைப்பித்தன் வரலாறு:

https://www.amazon.in/dp/B088PZQS9S/



வியாழன், 25 மார்ச், 2021

வந்தநிலையும் வருநிலையும்... | கல்வெட்டு | தமிழறிஞர் வ.அய்.சு எழுதிய கடிதம்

 #வந்தநிலையும்வருநிலையும்

தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றுள்ளேன் சிலமுறை. முதன்மைக் கட்டிடத்தின் அருகே செல்லும் வாய்ப்பு  கிட்டியது இன்றுதான்(25.03.2021).  

அலுவல் கட்டிடம் அது .  பெரிய கல்வெட்டு ஒன்றிருந்தது அதன்முகப்பில். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சு எழுதிய கடிதமே அந்தக் கல்வெட்டு.

அதைப் படித்ததும் (வடிவேலுவின் குரலில்) "என்னா மனுசன்யா... " என்றிருந்தது. 

கல்வெட்டில் இருந்த வ.அய்.சு அவர்களின் கடிதம், அப்படியே இதோ...


 

*****

வாழ்த்து.. 

இன்று (31.07.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து

ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன்.

பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல்

பிறர்கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில்

ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது.

இணைந்த செயற்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கின்றோம்

என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று.

இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம்பெற முடியும்.

இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த்த்

தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.

என்று ஆய்வின் தரம் குறைகிறதோ

அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்து விடும். நல்கைகள் குறையும்;

பொருள் முட்டுப்பாடு தோன்றி,

தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும்

இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும்

இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று.

இதன் வாழ்வும், வளர்ச்சியும்

ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்று அடிகள்

நமக்கு மனப்பாடம்.

‘அறநெறி’ தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி’ என்று

அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்.

தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தமிழர் அனைவரும்,

ஏன் பிற மாநிலத்தார் கூட உன்னிப்பாக்க் கவனித்து வருவர்.

அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில்

அகலவிருந்து பார்த்து

உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும்.

தளர்ச்சியிருப்பின் என்முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால்

நான் காலமான பின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத்

தஞ்சைத் தென்வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே

வளர்ந்த மரத்தடியிலும்,

காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும்  புதைத்திட

என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக.

நீங்களனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்.

-

வ.அய்.சுப்பிரமணியன்

துணைவேந்தர்

31.07.1986

*****


நிற்க,

அண்மையில், NAAC வழங்கும் புள்ளிகள் பட்டியலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் B+ நிலைக்கு இறங்கியுள்ளது.  இதனால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.  

வ.அய்.சு அவர்களின் முகம் வாடியிருக்கும்தானே!

- தக | 25.03.2021




புதன், 2 டிசம்பர், 2020

நம் சமையலறையில்...| ஒரு இலட்சம் வென்ற சிறுகதை

வணக்கம்.

குமுதம் இதழ் மற்றும் கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (ஒரு இலட்சம் உரூபா) பெறும் நம் சமையலறையில்... கதை 09.12.2020 நாளிட்ட குமுதம் இதழில் வெளியானது. கதை படித்தபின், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மகிழ்வேன். 

நன்றி : குமுதம் & கொன்றை அறக்கட்டளை





நம் சமையலறையில்…                                             

                    -த.க.தமிழ்பாரதன்

இன்னும் சில மணிநேரமே இருக்க, அவசர அவசரமென அம்மாவுக்கு அழைத்தான். இக்கட்டான பொழுதுகளிலெல்லாம் இவ்வுலகை அறிமுகப்படுத்தியவரிடமே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. நான்கைந்து முறை அழைத்தும் அம்மா எடுக்கவில்லை. கடைசி முயற்சியாய் அழைத்துப்பார்ப்போம்.  எடுத்தால் சரி, எடுக்காவிட்டால்.... அந்தப் பேச்சுக்கே இடமில்லை, எடுத்துவிடுவார். எண்ணிக்கொண்டிருக்கையில், ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்..' ஒலித்தது.

இப்பதான் நியூசு பாத்தன். இராத்திரிலருந்து ஊரடங்கு அமலுக்கு வருதாம். ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்பி வாரேன்னு சொன்னீயே? எங்க இருக்க?”

அலோஓ, அம்ம்மா இங்க ஒரே கூட்டம். ரயில்லாம் இல்ல. கார் எடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்ல தான் வந்தாகணும். இந்தக் கூட்டத்துல வர்ரதுக்கு வராம இருக்கலாம். ஆனா, சென்னையில எங்க தங்கறது? யாருமே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க, ஒன்னுமே புரியல. ஏதாச்சும் ஐடியா கொடேன்.

கன்சல்டன்சியில் பணிபுரிபவனுக்கு அம்மா ஆலோசனை தந்தாள்.

கோவிச்சிக்கலனா ஒன்னு சொல்லுவேன்!

ஏது வள்ளி வீட்டுக்குப் போகணுமா? பேசவே வேணாம் போன வை!

நிரம்பி வழியும் கோயம்பேடு, தாம்பரம் தாண்ட மறுக்கும் கார்கள், நிலையத்திலே தூங்கும் ரயில்கள் என  இயல்பைப் புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. 144 தடை உத்தரவு 48 நாட்களுக்கு அமல் என அரசு அறிவித்தவுடன் வாடகைக்குத் தங்கியுள்ள விடுதி வாட்சப் குழுவில் நிர்வாகி ஒரு பதிவிட்டார். "உணவு சமைக்க ஆள் வரமாட்டார், உணவகங்களும் இருக்காது". கண்ணில்பட்டதும் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான். மாலை வரை சுய ஊரடங்கென்று ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை. விடுதிவாசலில் நின்று ஆன்லைன் அப்டேட் செய்தவனுக்கு, கோயம்பேடு சென்றால் கொரோனா தொற்றிடுமோ எனும் பயம்.

உறவினர் வீட்டுக்குச் செல்லலாம். 48 நாள் உட்கார வைத்து சோறுபோடுமளவுக்கு நெருங்கிய உறவினர் இல்லை. நண்பர்களோடு இருக்கலாம். தனியனாய் இருந்த கடைசி நண்பனும் கடந்த மாதம் இணையராய் மாறிவிட்டான். தான் தொந்தரவாகிவிடுவோமோ என்றஞ்சி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அம்மா கூட புரிந்துகொள்ளாமல் வள்ளி வீட்டில் தங்கச் சொல்கிறாள் என்கிற எரிச்சல் வேறு.

தன்னைத் தானே நொந்துகொண்டு, விடியும் கிழக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். வள்ளியின் வீடும் வீடிருக்கும் ஊரும் கிழக்கில் எதேச்சையாக அமைந்திருக்கவில்லை. அங்கங்கு நாய்களும், கண்ணுருட்டும் ஆந்தைகளும் கூடடங்கிய பறவைகளும் தவிர விண்மீன்களும் அறிய நடந்தான், நடந்தான், நடந்தான்.... நிலையா உலகில் இயற்கை அடக்குகிறது. தற்காத்துக்கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம் வாழ்வின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

சற்றும் எதிர்பாரா நேரம், காலம், பொழுது அது. 'உனக்கே உயிரானேன், எந்நாளும் எனைநீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சந்நிதி; கண்ணே கலைமானே கன்னி மயிலென...' அழைப்பு ஓய்ந்தது. வள்ளியின் அழைப்பு. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இந்தப் பாடலை கேட்கிறான். இந்த வரிகளும் வரிகளேற்படுத்திய வசந்தமும் நினைவுகளைக் கிளறிவிட்டன.

'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ..' அழைப்பை ஏற்றான். ஏதும் பேசவில்லை.

நீ என்ட்ட பேசமாட்டேன்னு தெரியும். பேசவும் வேணாம்.  நானும் உன்ட்ட பேசிருக்க மாட்டேன்.  இராத்திரி அம்மா பேசனாங்க. கோவத்துல வச்சிட்டியாம். நட்ராத்திரில இங்கதான் சென்னைல எங்கயாவது நின்னிட்டிருப்ப, லொகேசன் அனுப்பு, நான் வந்து அழைச்சிட்டு போயிடறேன்.

பதில்களை எதிர்நோக்காமல் துண்டித்துவிட்டாள். அவன் லொகேசன் அனுப்புவதற்குள் காரினை எடுக்க அடுக்குமாடிக்குடியிருப்பின் தரைகீழ்தளம் வந்திருந்தாள். லொகேசன் பார்த்தவளுக்கு கலைந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுபோலாயிற்று. அவளது குடியிருப்பின் வெளியே நிற்கும் அவனைப் பார்த்தாள், அழைத்தாள்; நகரவில்லை. மீண்டும் அழைத்தாள்பலனில்லை. அழைத்துக்கொண்டு ஏற 18ஆம் தளம் சென்றது மின்னேணி.

*

வள்ளி. திறமையான வளமையான பெண். கணிப்பொறித்துறையில் மென்பொறியாளர். மாதச்சம்பளம் நான்கு லட்சத்தைத்தாண்டும். அதை எப்படி பதினாறாக்குவது என்பதில்தான் அவளது நோக்கமெல்லாம். பெற்றோர் இல்லை அல்லது பெற்றோர் பிரிந்துபோய்விட்டனர். பெற்றோர் இல்லை என்பதையே விரும்புவாள் வள்ளி. பள்ளி முதல் கல்லூரி வரை விடுதியே கதியாய் இருந்தவள், வேலை சேர்ந்த பின்னும் பேயிங் கெஸ்ட்டாக இருந்தாள். மாதச்சம்பளம் இலட்சத்தைத் தாண்டுகையில் ஈஎம்ஐ-யில் வாங்கியதே 18ஆம் தளத்திலிருக்கும் வீடு. அது வீடு என்று சொல்வதைவிட ஓய்வெடுக்கும் கூடு என்று சொல்லலாம். அதுதான் வள்ளிக்குப் பிடிக்கும். சிறகை விரி, பற எனும் வரிகளின்படி சமூகத்தில் பறப்பவள். தன் வாழ்வின் வெறுமைகளை பறத்தலின் வெற்றியினால் மட்டுமே ஈடுகட்ட முடியுமென நினைத்திருந்தாள். வள்ளியைப் பொறுத்தவரை வெற்றியே மகிழ்ச்சி.

அகவை கால்நூற்றாண்டைக் கடப்பதற்குள் உடலுக்கும் உள்ளத்துக்குமென ஒருவனை அடையாளங்கண்டாள். அது அவன்தான். சிறுநகரத்திலிருந்து படியேறி சென்னை வந்தவன். அம்மா உழைப்பில் படித்தவன், இலட்சங்களையே அப்போதுதான் அறுவடை செய்யத்தொடங்கியிருந்தான். ஒரே அலுவலகம், அலட்டிக்கொள்ளாத '90களின் குழந்தை முகம், முன்காதல் ஏதுமில்லை, பெண்களிடம் வழிவதுமில்லை. அவனைத் திருமணம் செய்வது சரியான முடிவு என உறுதிப்படுத்தக்கூட அவளுக்கு யாருமில்லை. முடிவெடுத்தாள். அவனிடம் சொல்லிவிட்டாள்.

*

இங்கேயே இரு…”

வீட்டிற்குள் சென்றவள், வாளியும் வெளிநாட்டுக் கிருமிநாசினியும் கொண்டுவந்தாள். பையை வாளியில் வைக்கச்சொல்லிவிட்டு கையிலிருந்த கிருமிநாசினியை அவன்மேல் தெளித்தாள். பூச்சுக்கொல்லியில் மடியும் பூச்சைப்போல அவன்முகம் பாவனை செய்தது.

இங்கேயே தூங்கிக்க?”

ஹம்ம்.

உள்நுழைந்தவன் முகப்பிலேயே படுத்துக்கொண்டான். ஏசி போட்டிருக்கும் இரண்டாம் அறையை அவளது தூக்கம் ஆக்கிரமித்தது.

*

மற்ற பெண்களைப் போலில்லை வள்ளி. சுய அறிவும் கனவும் சராசரி அளவுக்கும் அதிகமாயிருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒருவருக்கொருவர் புரிந்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபின், வழக்கமான மார்கழி இரவொன்றில்தான் இதே வீட்டுக்குள் முதல்முறை வந்தான். அரிதான நுண்கலைப்பொருட்கள், மென்காந்தள் நிறம்கொண்ட சுவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே குடிகொண்ட வீட்டில் கூடுதலாக அவன் மட்டுமே இருந்தான்.

கதைத்தான், கதைத்தாள், கதைத்தார்கள். வான்முகில்கள் வலசை போகும் வரை கதைத்தார்கள்.

சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யவா?” என்றாள்.

அதெல்லாம் வேண்டாம். ஒரு காபி குடிப்போமா? ஆர்டர் செய்ய வேண்டாம், நானே செஞ்சி தரேன்என கிச்சனுக்குள் நுழைந்தான்.

ஆச்சரியமாக இருந்தது, அதிர்ச்சியாகவும் தான். அவ்வளவு பெரிய கிச்சனுக்குள் பாத்திரங்கள் ஏதுமில்லை; பண்டங்கள் ஏதுமில்லை. குடிப்பதற்கு ஆர்ஓ வாட்டர். பழங்கள் கெடாமலிருக்க ப்ரிட்ஜ்.

ஹே! என்ன இது, உன் கிச்சன்ல ஒன்னுமே இல்ல?”

கிச்சனே இருக்கக்கூடாதுங்கறது தான் கனவே. ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கும் சமைத்தலுக்கும் எவ்வளவு நேரம் எவ்வளவு செலவு செய்றாங்க தெரியுமா? கடந்த பல தலைமுறைகளா பெண்கள்னாலே சமைக்கணும்னு இருந்திருக்கு. புருசனுக்கு அவன் குடும்பத்துக்கு அப்புறம் புள்ளைங்களுக்குசாகுற வரைக்கும் அடுப்படிதான் பெண்களுக்கு. சரி, அறிவு வளர்ந்து சமூகத்தில் பெண்கள் வளர ஆரம்பிச்ச அப்புறமாவது மாறினிச்சா இல்லயே.. ஏன்? இன்னிக்குக்கூட பெண்களுக்குக்குனு தனி இதழ்கள் நடத்துற பத்திரிக்கைகள் இலவச இணைப்பா சமையல் குறிப்புகள் தானே கொடுக்கறாங்க? சமூக இயங்கியல்ல பெண்கள்னா சமைக்கணுங்கறது ஊறிப்போயிருக்கு. அத மாத்தனும்..!

ஹே! மதியம் ஆஃபிஸ்ல சாப்டுவ., அப்ப காலையில, இராத்திருக்கு?”

ஜூஸ் காலைல, இராத்திருக்கு ஆர்டர் செஞ்சிடுவேன். இடையில தீணிக்குப் பதிலா பழங்கள்…”

ஊப்ஸ்! நாளைக்கு நான் வீட்டுக்கு வந்தாலும் இதே கதிதானா?”

கம்ப்பள் இல்ல!  ஆனால், நீயும் ஃபாளோ செய்தால் நல்லா இருக்கும். ஆண்கள் சமைக்கறதுலயும் உடன்பாடில்லை. பத்து நிமிசம் சாப்டறதுக்காக ஒரு மண்ணேரம் சமைப்பாங்களா., அந்த நேரத்தை எப்படி ப்ரடக்டிவிட்டியா பயன்படுத்தனும்னு யோசி. ஆயிரம் குடும்பம் ஒருமணிநேரம் செலவு செஞ்சு, ஒருவேளை உணவு செய்றாங்க. அதே உணவை மொத்தமா தயாரித்தால் ஆயிரம் குடும்பத்தின் ஒருமணிநேரம் அதாவது ஆயிரம் மணிநேரம் மிச்சம்தானே

*

திருமணம் முடிந்த நாளோடு தேனிலவுக்குக் கண்டம் தாண்டினார்கள். மாதமொன்று கழிந்தது, இயல்பு வாழ்க்கையும் புலர்ந்தது. திருமணமான புதிதென்பதால் அவள் பேச்சுக்கே அவன் கட்டுப்பட்டான். உணவு ஆர்டர் செய்தே சாப்பிட்டார்கள். சில மாதங்களில், அம்மா கதிரறுத்தனுப்பிய மாப்பிள்ளைச் சம்பா அரிசி மூட்டை 18ஆம் தளத்திற்கு வந்திருந்தது. இதைச் சமைக்க வேண்டாம்! வீணாக்கவும் வேணாம் திருப்பி அனுப்பிடேன்என்றாள். அம்மாவின் உழைப்பினை-தன் நிலத்து அரிசியைத் திருப்பியனுப்ப விருப்பமில்லை அவனுக்கு. பயன்படாத ஒன்று வீட்டிலிருக்க பிடிக்கவில்லை அவளுக்கு. முரண் தொடங்கியது; மூப்படைந்தது; முற்றியது. மணமுறிவிற்கே வழிகோலியது. மணமுறிவுக்கு முன்பே மனம்முறிந்தது. வக்கீல் நோட்டீஸ் வருமுன்னரே வீட்டைவிட்டு வெளியேறி பழையவிடுதிக்கே சென்றான்.

*

ஹேய்! ஏந்திரி…. எவ்வளோ நேரம் தூங்குவ

என்ன?” எனும் பாவனையில் அவனிரு புருவங்களும் விண்நோக்கின.

பசிக்கலையா? மணியப் பாரு

அவனுக்கு ப்ரட்டும் ஜாமும் எடுத்துத் தந்தாள். பல்லிளிக்கும் சூரியன். பால்கனியிலிருந்து பூமியை நோக்கினால் ஆள் நடமாட்டமின்றி மரங்களும் கட்டடங்களுமே இருந்தன. பேருந்துகள் ஓடலை, பயணிக்க வகையில்லை. தங்குவதற்கு உரிமையில்லா வீட்டில் இருக்க வேணாம். முகம் கழுவி எப்படியேனும் ஊருக்குக் கிளம்பிட முடிவெடுத்தான்.

நீ சாப்டியா?” எனும் கேள்வியை அவன் கேட்க மாட்டானா! என்றிருந்தது. கொரோனாவால் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிச்சப்பறம் இப்படித்தான். ஆளே மாறிட்டாள்! பறந்து கொண்டே இருப்பவளுக்கு இந்தக் கூடு மட்டுமே வானமானது. அதுவே தண்டனையும்.  ஊரடங்கால் சமைக்க யாரும் வரவில்லை, வைரஸ் பரவலால் யாரை நம்பியும் உணவு வாங்க முடியவில்லை. எடையிழந்த உடலின் கலையிழந்த முகத்தைப் பார்த்து,

நீ?”

அத்திபூத்தாற்போல் சொல்லொன்று உதிர்த்தான். வான்மதகுடைத்துப் பயிர் வளர்க்கும் கார்முகிலாய் அழத் தொடங்கினாள். அவளைத் தொடக்கூடத் தயக்கம். “இரு வரேன்”. தண்ணீர் கொண்டுவர கிச்சன் சென்றான். அதிர்ச்சி, ஆச்சரியமும்தான். புதுப்பாத்திரங்கள் குடிபுகுந்திருந்தன. மின்னடுப்பும் உதயமாகி அலங்கோலமாக இருந்தது. சமையலுக்குதவும் சின்னச்சின்ன தானியங்கள், பருப்புகள் இருந்தன. ப்ரிட்ஜ் முழுதும் காய்கறிகள். அப்புறம் ஓரத்தில் அரிசி மூட்டை. எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தண்ணீரெடுத்து வந்தான். தந்தான்.

போறேன்எனக் கிளம்பினான்.

சமைச்சி கொடுத்துட்டுப் போறியாஎன்றாள்.

அழுதான், அணைத்தான், சமைத்தான், சாப்பிட்டான், சாப்பிடவைத்தான். அவளும்தான். போறேன் என்றவன் ஒரு மண்டலம் அங்கேயே இருந்தான். வாட்சப் அழைப்பில் பாட்டி சமையல் கற்பித்தாள் அம்மா. உணவு அடிப்படையானது; சமையற்கூடமே கதியெனக் கிடப்பது அநாவசியமானது. அரிசி மூட்டையும் தீர்ந்தது. 48 நாட்கள் முடிந்து ஊரடங்கும் தளர்ந்தது. வள்ளிக்கோ மனம் நிறைந்து கலைகூடி எடை அதிகரித்தது. இருவர் இப்போது மூவராகியிருந்தனர். யாருக்குத் தெரியும் நால்வராகக்கூட இருக்கலாம். அம்மாவுக்கு மகிழ்ச்சி; அம்மாவாகப் போகிறவளுக்கும்தான்.

வாசல் வந்த வக்கீல் நோட்டீசை ஒன்றாகக் கிழித்தனர். மனமுறிவுக்கு வித்திட்ட சமையலறை சமையலே; அன்பையும் அன்யோன்யத்தையும் பெருக்கியது. இந்த எதார்த்தமே நம்பிக்கையானது.

அன்று வெளியான நாளேட்டின் தலைப்புச் செய்தி :

நாட்டிலிருந்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்தது ; சமூக விலகல் இனி தேவையில்லை

டாட்