நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 30 செப்டம்பர், 2023

மொழிபெயர்ப்பு ஆளர் ! ஆன கதை

மொழிபெயர்ப்பு ஆளர் ! - தமிழ்பாரதன்

ஜேஎன்யுவில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தபோது (2018) மாதம் 5,000 ₹ ரூபாய் உதவித்தொகை. தில்லி வாழ்வை அதனுள் நகர்த்த வேண்டிய சூழல். செலவு போக ஆயிரம் ₹ சேமிப்பில் இருக்கும்.
முதலாண்டு முழுமையும் ஆய்வு நெறிமுறைகளுக்கான வகுப்புகள்-ஒப்படைவுகள் இதிலேயே போயிற்று. இரண்டாமாண்டு வகுப்பறையிலிருந்து விடுபட்டேன். வாய்ப்புகளை எதிர்நோக்கினேன். அப்போதுதான் மொழிபெயர்ப்பைச் சந்தித்தேன்.
புதுதில்லி அகில இந்திய வானொலியில் Casual Translator cum Announcer பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். மொழிபெயர்ப்பாளருக்கான எழுத்துத் தேர்வு முதலில் நடைபெற்றது. அறையில் இருந்த அனைவரும் AIRஇல் முன்அனுபவம் உள்ளவர்கள். பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள். நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் (மொழிபெயர்ப்புப்) பணியில் இருப்பவர்கள். 2 மணிநேர எழுத்துத் தேர்வை ஒரு மணிநேரத்தில் எழுதி முடித்துக் கிளம்பிவிட்டனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நான் பொடியன். அத்தேர்வு என் மொழி வளமைக்கு அறைகூவல் விடுத்தது. அன்றுதான் முதல்முறையாக எதன் துணையின்றியும் மொழிபெயர்த்தேன். முதல் வெற்றி.
அடுத்ததாக, குரல்தேர்வு & நேர்காணலுக்கு அழைத்தனர். பொது அறிவு & குரல்வளத்தால் இரண்டாம் வெற்றி உறுதியானது. பழம்பெருமை வாய்ந்த புதுதில்லி அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் இணைந்தேன். முதல் நாள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டும். அது AIR தளத்தில் வெளியாகும். அடுத்த நாள் அதை அறிவிப்பின் இடையே வாசிக்க வேண்டும். இது கொரோனா காலம் வரை தொடர்ந்தது. பிறகு, கொரோனா காலத்தில் அறிவிப்பாளர் பணி இல்லை. மொழிபெயர்ப்பாளர் பணி மட்டும் தொடர்ந்தது. வெளியுறவு, உள்துறை, பன்னாட்டு அரசியல் தொடர்பான கட்டுரைகள் வாயிலாகத் தமிழில் பல சொற்களின் பயன்பாடுகளை அறிந்துகொண்டேன். சான்றாக : மூலோபாயம், உச்சிமாநாடு. இந்த மொழிபெயர்ப்பு மற்றும் அறிவிப்புப் பயிற்சி நேரத்தோடு நேரடித் தொடர்புடையது. ஆதலின், பிற்காலத்தில் பல செயல்களில் துணிவாற்ற! எனக்கு நன்குதவியது. (ஒரு முறை பணிக்கான மதிப்பூதியம் 1800₹)
கொரோனா காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு சார்ந்து வெவ்வேறு வகைமைகளில் மேற்கொள்ளத் தொடங்கினேன். குறிப்பாக, பாடங்களை மொழிபெயர்த்தல் வேறுபட்ட களமாக இருந்தது. ஐஐடி மெட்ராஸ் ஒருங்கிணைப்பில் NPTEL பாடங்களை மொழியாக்கும் பணியைச் செய்தேன். மென்நுட்பங்கள் பலவற்றை அங்குக் கற்கலானேன். பத்து மணிநேரப் பாடங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். தமிழ் மாணவராக இருப்பதால் 70%தான் எனக்கே சரியெனப்பட்டது. பல ஐயங்கள். எனக்குத் தரப்படுத்தநராக நியமிக்கப்பட்டவரிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கிறது. தேவையற்ற குழப்பங்கள்' வேண்டாம் என்றார். என்னளவில் நிறைவளிக்காத மொழிபெயர்ப்பு அது. (மதிப்பூதியம் ஒரு மணிநேரப் பாட மொழிபெயர்ப்புக்கு 2000 ₹)
NCERTஇல் தமிழுக்கான கருத்தாளராக அழைத்தனர். தமிழைப் பிறமொழி மாணவர்களுக்குப் பழக்கப்படுத்தும் / அறிமுகப்படுத்தும் 108 அடிப்படைச் சொற்றொடர்களை உருவாக்கும் பணி. தமிழ்ச் சொற்றொடர் - ஆங்கில மொழிபெயர்ப்பு – இந்தி மொழிபெயர்ப்பு - ரோமன் ஒலிபெயர்ப்பு – தேவநாகரி ஒலிபெயர்ப்பு எனும் அமைப்பில் இருக்கும். பலரது இடையீடும் இருந்தது. இந்தப் பணி கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முன் தொடங்கி, கொரோனாவுக்குப் பின் நிறைவடைந்தது. அச்சு, இணையம், ஒலி-ஒளி, செய்கை மொழி ஆகிய வடிவங்களில் இது வெளியாகியுள்ளது. (மதிப்பூதியம் ஒரு நாளுக்கு 2500₹)
மொழிபெயர்க்கத் தொடங்கிய ஓராண்டுக்குப் பிறகு தெளிவு பிறக்கத் தொடங்கியது. செய்திக் கட்டுரைகள், பாடங்களைத் தாண்டி புதியன முயன்றேன். அக்காலத்தில் மொழிபெயர்ப்புக்கான தொகையை ஒரு சொல்லுக்கு 1 ₹ ரூபாய் எனும் அளவிற்கு உயர்த்தினேன். கொரோனா காலத்தில் Bynge செயலி தமிழ் இலக்கிய உலகில் சக்க போடு போட்டது. இது Notion Press நிறுவனத்தது. இந்த இரண்டு தளங்களையும்(website&app) தமிழாக்கும் பொறுப்பை என்னை நம்பி M Priyadharshini அவர்கள் வழங்கினார். இதோடு, பயனர் பயன்பாடு, எழுத்தாளருக்கான ஒப்பந்தங்கள் முதலானவற்றையும் செய்தளித்தேன். என்னளவில் செவ்வனே செய்த பணிகளுள் அதுவும் ஒன்று. (மதிப்பூதியம் ஒரு சொல்லுக்கு 1₹)
அன்பு, நட்பு, மரியாதையின் அடிப்படையில் சிலருக்கு மொழிபெயர்ப்பு செய்தளித்துள்ளேன். கடிதம் எழுதுதல், கண்டனம் தெரிவித்தல், சிறு பேச்சைத் தமிழில் தருதல், கட்டுரை வனைதல் எனவாறு இவை நீளும். இந்த B to C (business to customer) மொழிபெயர்ப்பு கடும் அயர்ச்சியைத் தந்தது. தனிமனிதர்களுக்காக மொழிபெயர்ப்பது மலைப்பான செயல். ஒவ்வொருவரிடமும் விளக்கமளித்தும் திருப்திப்படுத்தியும் நிறைவு செய்ய வேண்டியிருந்தது. தொகையைப் பெறுவதிலும் சங்கடங்கள் இருந்தன.
“கூகுள்ல போட்டா வரப்போகுது அதற்கு எதற்கு இவ்வளவு தொகை” என்பார்கள். “அன்பிற்கினிய ஐயா, அதைத் தாங்களே செய்துகொள்ளுங்களேன்” என்று கூறத்தோன்றும். ஒரு சொல்லுக்கு 1 ₹ ரூபாய் அளிப்பது பலருக்கு உவப்பாக இல்லை. எல்லாம் பேசிவிட்டு, தொகையில் குறைப்பார்கள். சிலர் மொழிபெயர்ப்பு செய்தளித்த பின்னும் தரமாட்டார்கள். இரண்டு முறைக்குமேல் நினைவூட்ட விருப்பம் இருந்ததில்லை. தெளிந்து முடிவு எடுத்தனன்: இனி மேல் B to B மட்டுமே.
2022இல் கடும் பணிச்சூழல். முனைவர் பட்ட ஆய்வு , தில்லி பல்கலை.யில் கௌரவ விரிவுரைப்பணி எனக் காலம் கால்களைக் கட்டங்களுக்குள் பழக்கியது. மொழிபெயர்ப்புப் பணிகளை ஏற்பதில்லை என முடிவெடுத்தேன். அப்போது ‘லின்க்டு இன்’ வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டார். தமிழ்நாடு அரசுக்காக மொழிபெயர்ப்பு செய்யும் பணி. மாதிரி கோப்பு அனுப்புங்கள் என்றேன். அது இயல்பான மொழிபெயர்ப்பன்று. கடினமாக இருந்தது. எனக்குக் காலமும் இல்லை. என்னால் இயலாது என்றேன். (வேறு சிலருக்குப் பரிந்துரைத்தேன். தன்மை கருதி அவர்களும் ஏற்கவில்லை.) பிறகு, நான் தொகை உயர்த்திக் கேட்டேன். அப்போது என்னை விட்டுவிடுவார்கள் என்று எண்ணினேன். பரிசீலனைக்குப் பிறகு கேட்ட தொகையை ஏற்றுக்கொண்டனர்.
அரசு நிறுவனங்களில் பணி ஆணை அல்லது ஒப்பந்தமின்றிப் பணியில் ஈடுபடமாட்டேன். முன்அனுபவம் அப்படி. ஆதலால், அவரிடம் கேட்டேன். அந்தத் துறையின் நிர்வாக இயக்குநர் அதாவது IAS அவர்களிடமிருந்து நான்கு பக்க ஒப்பந்தப் பணிஆணை கிடைக்கப்பெற்றேன். ஓராண்டு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டேன். வருவாய் : லட்ச ரூபாய்க்குச் சில ஆயிரங்கள் குறைவு.
எனினும், தொழில்துறைசார் கலைச்சொற்களை-எழுத்து விரிவுகளைப் பட்டியலிட இயன்றது. புதிதாகச் சிலவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. திரு ஹரிஷ்தா என்பவர் பொறுமையோடு செயலடிப்படையில் பலவற்றை விளக்கித் தமிழ்ப்படுத்த உதவினார். எனது மொழிபெயர்ப்பில் உருவான கையேடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் வெளியிட்டிருந்தார்கள். தமிழ் மக்களுக்குப் பெரும்பயன் நல்கும் என்ற நிறைவு அந்தக் கையேடுகள் வாயிலாகக் கிட்டியது. (மதிப்பூதியம் ஒரு சொல்லுக்கு 3.5 ₹. பிறரது பணியை நான் தரப்படுத்துகையில் ஒரு சொல்லுக்கு 1 ₹)
புதுதில்லியில் உள்ள தூதரகங்களில் Interpreterஆக (உரைபெயர்ப்பு) இருந்துள்ளேன். இலங்கைத் தமிழர்கள் சில அயல்நாடுகளில் வேலைக்குச் செல்ல, இங்குள்ள தூதரகங்களில் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருப்பர். ஆங்கிலம் அறியாதவர்களுக்கு உதவுவதற்காக இப்பணி. தூதரக அதிகாரி ஆங்கிலத்தில் கூறுவதைத் இலங்கைத் தமிழருக்குத் தமிழிலும் - இலங்கைத் தமிழர் கூறுவதை ஆங்கிலத்திலும் உரைபெயர்த்து உடனடியாகச் சொல்லவேண்டும். எழுத்துநிலை மொழிபெயர்ப்பைத் தொழில்நுட்பம், கூகுள்-அகராதி உதவியுடன் மேம்படுத்திச் செய்யலாம். இங்கு அப்படியில்லை. கையில் எந்த மின்சாதனப் பொருட்களும் கொண்டுபோக முடியாது. மேலும், வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளின் ஆங்கில ஒலிப்பைப் புரிந்து செயலாற்ற வேண்டும்.
ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் பணி இது. முதல் முறை சென்றபோது அங்குள்ள சூழலை உள்வாங்கிக்கொண்டேன். அடுத்தடுத்த முறை இயல்பாகிப் போனது. வெவ்வேறு நாடுகளின் விசா நடைமுறை அங்குக் கேட்கும் கேள்விகள், எதையெல்லாம் கேட்கின்றனர், எதையெல்லாம் குறிப்பு எடுக்கின்றனர் என்பதைக் கொண்டே நாடுகளின் தன்மையை அறிந்துகொள்ளவியலும். அங்கு நடப்பது எதுவும் வெளியே சொல்லக்கூடாது என்பதால் மேற்கொண்டு இங்கு விவரம் பகிரவில்லை.
மொழித்திறனை மிகுந்து சோதிக்கும் பணி இது. ஆர்வமுடன் தொடர்ந்து பங்களிக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால், எனது interpretation பணிக்கான தொகையை விசாவிற்காக வரும் இலங்கைத் தமிழர்தான் தரவேண்டும் எனத் தெரிந்தபோது தயக்கம் வந்தது. விசா - கேள்வி பதிலூடாக அவர்களது வாழ்க்கைச் சூழலை அறியும்போது அனுதாபம் ஏற்பட்டதுண்டு. பொருளாதார நெருக்கடியினால் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் அவரிடம் நானும் தொகை பெற்றுக்கொள்வது எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வேறு சிலரை அறிமுகம் செய்துவிட்டு, அதிலிருந்து விலகிக்கொண்டேன். (ஒரு முறைக்கான உரைபெயர்ப்பு மதிப்பூதியம் 3,000 ₹ ரூபாய்)
மொழிபெயர்ப்பில் உருவான முதல்நூல், அரிஸ்டாட்டிலின் இயற்பியல். முதல் முயற்சி. பெருநேரத்தை உறிஞ்சியது. தனியே செய்ய ஐயங்கொண்டு துணைக்கு நண்பர் ஜெயபாரதியுடன் நிறைவு செய்தேன். ஆனால் வரிக்கு வரியின்றி கருத்துநிலையில் உருப்பெற்றது. அஃது அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் எனும் அச்சு நூலாக 2023 சூலை 28 அன்று இத்தாலியின் வெனிசு நகரத்தில் வெளியிடப்பெற்றது. (மதிப்பூதியம் அறிவுத்தேடல், முதல்முயற்சி என்பதால் அயர்ச்சி).
இன்னும் சில நூல்கள் வெளியீட்டுக்கு அணியமாகி வருகின்றன.
‘லின்க்டு இன்’ தளம் வாயிலாக அவ்வப்போது மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் வரும்போது, தேர்ந்தெடுத்துச் செயலாற்றுவதுண்டு. அண்மையில் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முன்பு மொழிபெயர்ப்புக்காக அணுகியவர்கள் இப்போது தரப்படுத்தத்துக்காக அணுகியுள்ளனர். இம்முறை புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகமாகும் என நம்புகிறேன். NonDisclosure Aggrementஇல் ஒப்பமிட்டிருப்பதால் மேற்கொண்டு எதுவும் பகிர இயலாது. (மதிப்பூதியம் ஒரு மணிநேரத்துக்கு 30 அமெரிக்க டாலர்கள்)
முதன்மைக்குரிய சில மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட முடிந்தது. சான்றாக, பேரா. அண்ணாமலை அவர்களுடன் ஆங்கிலத்தில் சிகாகோ பல்கலை. பேரா. நகாசிஸ் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நிகழ்ந்த நேர்காணல் அது. மேலும், சிலவற்றில் தன்னார்வமாகப் பங்களித்தது காலம் தந்த வாய்ப்பு. UNESCO அமைப்பிற்கும் இன்ன சில மருத்துவ நிறுவனங்களுக்கும் கொரோனா காலத்தில் விழிப்புணர்வு அறிவிப்புகள், அறிக்கைகள் செய்தமை, மக்கள் நலனை முன்னிறுத்தி அரசு நிறுவனங்கள் சிலவற்றில் அவசர அவசரமாகக் கேட்கப்படுவனவற்றுக்கு உதவியமை தமிழ்-மக்களுக்கானவை. (மதிப்பூதியம் : மனநிறைவு)
தொடக்கத்தில் எனக்கு மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லை. விபத்தாகத்தான் மொழிபெயர்ப்பைச் சந்தித்தேன். மொழியும் கைகூடியது. மொழிபெயர்ப்பாளர் என அடையாளம் பெற்றிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். மொழிபெயர்ப்பின் வெவ்வேறு களங்களான மேற்சொன்னவற்றில் ஈடுபட்டதை நான் சொல்லவில்லையென்றால் யாருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. தமிழ்ச்சூழலில் மொழிபெயர்ப்பு என்றாலே நூலாக்கம் எனும் பொதுமனநிலையே இருந்து வருகிறது. அடையாளம் தரும் வகையில் எந்த (நூலாக்க) மொழிபெயர்ப்பிலும் ஈடுபடவில்லை. கொரோனா காலத்தில் சில இதழ்களில் நல்ல மதிப்பூதியத்தில் மொழிபெயர்ப்புத் தொடர் எழுதக் கேட்டனர். 300-600 சொற்கள் = 500 ₹ ரூபாய் வரை பேசிப் பார்த்தனர். புத்தகமாக ஆக்கி அளிக்கிறோம் என்றனர். எனினும், அவற்றில் ஈடுபடவில்லை. (புத்தகம்-னு சொன்னா மட்டும் சூனா பனா மயங்கிடுவானா?)
காசே குறி எனல் கூடாது என்று சிலர் சொல்லக் கேட்டுள்ளேன். அவர்களிடம் அருள்கூர்ந்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத் தாருங்கள் என்று கூறிவிடுவதுண்டு. மொழிபெயர்ப்பானது சேவைத்துறையில் இடம்பெறும். அது இலவசமன்று. குறிப்பு : நான் மொழிபெயர்ப்பாளன் அல்லன். மொழிபெயர்ப்பாளனாகவும் இயங்க முடியாது. இப்போது எனது நேரத்தின் மதிப்பு மிகுந்துவிட்டது. ஒரு சொல்லுக்கு 5 ₹ ரூபாய். இதற்குக் குறைந்து பணியாற்றுவதில்லை. இது பணிகளை வடிகட்ட வைத்துள்ள எல்லைக்கோடு.


*
செய்த அனைத்தையும் இங்குக் குறிப்பிடவில்லை. விடுபட்டவை உண்டு. இந்த நான்காண்டு காலத்தில் எனது மொழி வளம் மேம்பட்டுள்ளதை அறிவேன். ஆங்கில அறிவு இன்னும் பன்மடங்கு வேண்டும். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பினும் தரப்படுத்தப் பணிகளே அதிகம் வருகின்றன. தேர்ந்து செயலாற்றுகிறேன். அரசு நிறுவனங்கள் மரியாதையுடன் அழைக்கின்றன. தனியார் நிறுவனங்கள் மரியாதையுடன் நல்ல தொகையும் அளித்து அழைக்கின்றன. மொழிபெயர்ப்பு வாழ்வில் பொடியன் இப்போது சிறுவன் ஆகிவிட்டான். அதாவது இரண்டாம் எட்டு. இன்னும் ஆறு எட்டுகள் உள்ளன. அப்போது மேம்பட்ட நூலாக்கங்களை எதிர்நோக்கலாம்.
இப்போது பொருளாதாரம் போதுமென்ற அளவு கிட்டுகிறது. நல்ல உதவித்தொகையும். ஆய்வு, இலக்கியம், இலக்கணம் எனத் தொடவேண்டியவை மொழிபெயர்ப்பில் ஏராளம் உள்ளன. தக்கன செய்ய ஆவன செய்க காலமே.
உலக மொழிபெயர்ப்பு நாள் வாழ்த்துகள்
தக | புதுதில்லி | 30.09.2023

புதன், 20 செப்டம்பர், 2023

கிரேக்கத் தோழியின் கடிதம் -

தலைவியைக் கண்டடையச் சொல்லித் தலைமகனுக்குத் தோழி கூறியது!

After a long time received a letter in venice!



 

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பெரும்பாணன் !

பெரும்பாணன்!

2015
திருவாரூர் தெற்கு வீதியில் இலக்கிய வளர்ச்சிக் கழகக் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் (இனி இங்குத் தமப எனக் கொள்க) சேர்ந்த ஊடகவியல் பேரா. ஆதி ராமானுஜம் பேசிக் கொண்டிருந்தார். நிறைவுற்றதும் அவரது எண்ணைப் பெற்றுக் கொண்டேன்.
அக்காலத்தில் தமப-வில் தமிழ்நாட்டு மாணக்கர் சேர்க்கை குறைவாக இருந்தது (இன்றும் இதே நிலைதான்) என்று தெரிந்தோர் வருத்தப்படுவதை அறிந்தேன். அக்காலத்தில் விகடன் மாணவப் பத்திரிக்கையாளராகவும் இருந்தேன். தமப குறித்து விகடனுக்காகக் கட்டுரை எழுதலாம் என்று புகைப்பட கலைஞர் சதீஷ்குமார் உடன்வர தமப சென்றோம்.
பேரா. ஆதி ராமானுஜம் உதவினார். அப்போது துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த Thangappa Sengadir செங்கதிர் அவர்களிடம் அழைத்துச் சென்றார். சிறிதுநேர உரையாடலின் வழி அனுமதி பெற்றோம். பல்கலைக்கழக மகிழுந்திலேயே எல்லாத் துறைகளுக்கும் இடங்களுக்கும் அழைத்துச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் உரையாடவைத்து, இஃது எப்படிப்பட்ட கல்வி நிறுவனம் என்பதை அறியச் செய்தார் பேரா. ஆதி இராமனுஜம்.
எங்களுக்கு நான்கு மாணவர்களது பேட்டி தேவைப்பட்டது. தேடிப்பிடித்து நான்கு பேரிடமும் எடுத்து விட்டோம். ஆனால், எடுத்த பிறகு தமிழ்நாட்டு மாணவி ஒருவர் வேண்டாம் எனது பேட்டியை நீக்கி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனால் மீண்டுமொரு தமிழ்நாட்டு மாணவரைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்டவர்தான் அருண்குமார்.
அதுதான் அவருடனான முதல் சந்திப்பு. அவர் முன்னமே விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்துள்ளார், ஆதலின் உவப்புடன் ஒப்புதல் நல்கினார். இளங்கலை இதழியல் சென்னையில் படித்துவிட்டுத் திருவாரூரில் முதுகலை செவ்வியல் தமிழ் படிக்கிறார்(அதாவது cross major). இந்தப் போக்கே வியப்பளித்தது. அவரிடம் எண் பெற்றுக்கொண்டேன். பேட்டி : https://www.vikatan.com/government-and.../politics/46059
அவர் பேட்டியின் போது, ‘இதை முடிச்சுட்டுத் தில்லியில் மேற்கொண்டு படிக்கப் போவேன்’ என்றார். சொன்ன மாதிரியே முதுகலைக்குப் பிறகு அவர் தில்லி ஜேஎன்யு-வில் ஆய்வு மாணவராக இணைந்தார். ஓஓ! இங்க தமிழ்ப் படித்தால், தில்லிக்குப் போகலாம் என்பது எளிய சூத்திரமாக மனதில் நிலைபெற்றது. (அப்போதெல்லாம், ஜேஎன்யு பற்றி எள்ளளவும் எனக்குத் தெரியாது.)
2016.
என் இளநிலை இயற்பியல் படிப்பு நிறைவடைந்தது. முதுநிலை இயற்பியல் சென்னையில்தான் படிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். அம்மாவின் கட்டாயத்தினால் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அஃதொரு பெருங்கதை. அதை 2017இல் பதிவாக எழுதியிருந்தேன். இணைப்பு : https://tamilbharathan.blogspot.com/2017/06/blog-post.html (அக்காலத்திலேயே இதை வாசித்துவிட்டு நடை நன்றாக இருந்தது என்றாரவர்)
மாணவர் சேர்க்கை நிகழும் நாளுக்கு முன்னதாக அருண்குமாருக்கு அழைத்தேன். கிட்டத்தட்ட 22 நிமிடங்களுக்கு மேல் ஆற்றுப்படுத்தினார். ‘பேராசியரியப் பணியையோ அரசுப் பணியையோ பற்றுக்கோடாகக் கொண்டிராதே, அப்படிப் பணிவாய்ப்பை எதிர்நோக்கி cross major படித்தால் ஒவ்வோர் அடியும் கடினமாக இருக்கும்’ என உள்வாங்கிக் கொண்டேன். அப்போது முகநூலில் இட்ட பதிவில் cross major வேண்டாம் என்றே பலரும் எச்சரித்தனர். ஆனால், அருண்குமார் தேர்ந்த நம்பிக்கையை அளித்தார். அதற்கு சாட்சியாக அவருமே இருந்தார்.
ஒரு வழியாக முதுகலை செவ்வியல் தமிழ் சேர்ந்தேன். சென்னையில் இயற்பியல் படிக்க எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களால் நழுவிப் போயின. மாதங்கள் கடந்தன. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை செவ்வியல் தமிழ் நிறைவு செய்ய ஒரு பருவம் மீதமிருந்தது. ஜேஎன்யு-வில் ஒருங்கிணைந்த முனைவர் பட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன்.
2017 இறுதி என்று நினைவு. மீண்டும் அழைப்பு. அதே அருண்குமார். அதே 22+ நிமிட ஆற்றுப்படுத்தல். நுழைவுத் தேர்வு சென்னை ஐஐடியில் எழுதினேன். முடிவுகள் நேர்மறையாய் வந்தன. நேர்காணல் தில்லியில் நடந்தது.
2018
தில்லி வந்தாயிற்று. ஜேஎன்யுவில் நுழைந்தாயிற்று. அருண்குமார் அறையில்தான் முதல் வாசம். அடுத்தநாள் முனைவர் பட்ட ஆய்வுக்கான நேர்காணல். அந்த இரவில் மீண்டும் அவரது ஆற்றுப்படுத்தம். நேர்காணல் நிறைவுற்றது. தமிழ்நாடு திரும்பியாயிற்று. நான்கு மாதங்களாக முடிவுகளே வெளியிடப்படவில்லை.
2018 சூலை. மதுரையில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் பங்கேற்றிருந்தேன். முடிவுகள் வெளியாகின. சேர்க்கை உறுதியானது. தில்லி வந்தேன். சேர்க்கை முடிந்தது. JNUite ஆனேன்.
அன்றைய ஜேஎன்யுவில் எனக்கு நன்கறிமுகமான நபர் அருண்குமார் தான். (இணையத்திலும்) பரபரப்பாக இருக்கும் அவரது ஓய்வு நேரத்தை அவ்வப்போது இடையூறு செய்திருக்கிறேன். எண்ணற்ற ஐயங்கள், சந்தேகங்கள், பயங்கள் முதுகலை முடித்தவனுக்கு. தில்லியில் பலவற்றை அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் அவர் வாயிலாகத்தான் பலரது அறிமுகமும் கிடைத்தது. உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்களின் இருப்புகளை அறியத்தந்தார். தில்லியில் முதல்முறை திரையரங்குக்குச்(96 படம்) சென்றது அவருடன்தான். தில்லித் திரைப்பட விழாவுக்குச் சென்றதும் அவருடன்தான். சாகித்திய அகாடமிக்கு விருது விழாவுக்குச் சென்றதும் அவருடன்தான்.
அப்போதெல்லாம் அன்றாடம் பூப்பந்து விளையாடுவதுண்டு. பலருடன் கூட்டணி அமைத்த நான், அவருடன் ஓரணி என்றால் அவ்வளவு தான். திடீர் வெற்றிகளும் திடுக்கிடும் தோல்விகளும் இருக்கும். களத்தில் இருவருக்கும் ஒத்த மனப்பாங்கு குறைவு. அதனால் முட்டிக்கொண்டதுண்டு. அவரது விலையுயர்ந்த பேட்மிட்டன் ராக்கெட்டை ஒருநாள் உடைத்துவிட்டேன். இன்றளவும் வாங்கித்தரவில்லை.
பெரியார் பிறந்தநாள், எம்எஸ்எஸ் பாண்டியன் நினைவு உரையரங்குகளை அவரும் நண்பர்களும் இணைந்து Tamil Conscience எனும் பெயரில் ஜேஎன்யு பல்கலை.யில் ஒருங்கிணைத்து வந்தனர். தமிழ்நாட்டிலிருந்தும் பல்வேறு ஆளுமைகள் அவற்றில் உரையாற்றியுள்ளனர். 2018 நவம்பரில் கஜா புயல். Tamil Conscience ஒருங்கிணைத்த நிகழ்வொன்றில் கஜா புயலுக்கு நிவாரணநிதி சேகரிக்க முனைந்தேன். அனுமதி நல்கினர். அவர்கள் நிகழ்வுக்குச் சேர்த்த தொகையிலும் கணிசமான அளவு அளித்தனர்.
தில்லித் தமிழ் மாணவர்கள் படிப்பு வட்டம்(DTSSC) என்ற பெயரில் அவர்கள் விவாதங்கள் நிகழ்த்தி வந்தனர். அவ்வப்போது நிகழும் அதன் கூடுகைகளில் எப்போதாவது தலைகாட்டியதுண்டு. சமூகம்-அரசியல் குறித்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்துவந்து விரிவாக விவாதிப்பர். இதுபோன்றவற்றைக் கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தாமல் தன்னெழுச்சியாக நடத்துவது சவாலானது. அதை நிகழ்த்திக் காட்டினர்.
ஜேஎன்யு விடுதிகளில் தமிழ் மாணவர்கள் எப்போதேனும் புலால் உணவு சமைப்பர். இருவர் உறையும் அறையில் பத்து+பேர் கூடி உண்பர். அப்போதெல்லாம் என்னைத் தவறாது அழைத்து, புலால் தவிர்த்த உணவை வழங்கியுள்ளனர். அந்நாட்களில் இரவு தூங்க விடிந்துவிடும். அதுவரையில் சீட்டுகட்டு-கதையாடல்-விவாதங்கள் என நீளும். ஓதற்பொருட்டு நிலப்பரப்பு கடந்து தனிமையில் தவித்த தொடக்ககால என் ஜேஎன்யு வாழ்வில் அவையெல்லாம் ஆதுரங்கள்.
அரசுப் பள்ளியில் படித்திருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் அவருக்கு நன்கு வரும். தமிழுணர்வுள்ள தமிழ் மாணவர். 2019 வாக்கில் தஞ்சாவூர் பெரியகோயிலைப் படம்பிடித்து ‘பிரகதீஸ்வரா டெம்பிள்’ என்ற கூகுள் லோகேசனுடன் பதிவேற்றியிருந்தேன் இன்சுடாகிராமில். அதெப்படி வடமொழிப் பெயரை இடலாம் என்று கேட்டார். பிறகு, கூகுள் மேப்சில் அதன் பெயரைத் திருத்தமிட்டுத் தமிழில் பெயர் இடப் பரிந்துரைத்தேன். (ஆனால், கூகுளில் இன்றளவும் ‘Brihadeeswara Temple’ என்றுதான் உள்ளது தனிக்கதை) இப்படிப் வெவ்வேறு வேளைகளில் பல கேள்விகளைக் போகிற போக்கில் எழுப்பியுள்ளார். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கிய பிறகுதான் “அட ஆமால்ல...” என்ற விழிப்பு கிட்டியுள்ளது. பிழையற்ற தமிழில் எழுதுவதோடு சிறந்த editing திறனும் கொண்டவர். (இந்தப் பதிவிலேயும் சிலவற்றை உரிய திருத்தமென்று அவர் சுட்டக்கூடும். பொறுத்துக்கங்க).
எனது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுச் சுருக்கத்தின்போது அரிஸ்டாட்டில் கருத்துகளைத் தமிழாக்கம் செய்து அளிக்க வேண்டியிருந்தது. அவர் ஆங்கிலம்<->தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்தமையால், அவருதவியை நாடினேன். எனக்கு அதுதான் முதல் மொழிபெயர்ப்பு. ஏதுசெய்வதென்றறியாத காலத்தில் அவர் தொடங்கி வைத்த மொழிபெயர்ப்புதான் 2023இல் இத்தாலியின் வெனீசில் வெளியிடப்பெற்ற அரிஸ்டாட்டில் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் நூல்.
இன்னும் ஏராளம்....
எனது அவசியத் தேவைகளான அறிவுரைகள் ஆற்றுப்படுத்தல்கள் பலவும் அவரிடத்திருந்தன. அவருடைய தேவைகள் ஏதும் என்னிடம் இருந்ததில்லை. எனினும், அவர் அணுகுதற்கு எளிய இயல்புடனே பழகிவந்தார்.
இப்படியெல்லாம் இருந்தாலும் தொடர்ந்து நல்லுறவு இருந்ததில்லை. அவ்வப்போது முரணிய காலங்கள் வாய்த்தன. யார் திட்டினாலும் செவிப்பறைக்குள்ளே செல்ல நான் அனுமதித்ததில்லை. அதைத் தாண்டிய ஒரே திட்டு அவருடையதுதான். போலவே, என் எழுத்துக்கோ, செயலுக்கோ எப்போதாவது அவர் வழங்கும் பாராட்டுகளும் மனதை நிறைவு செய்துள்ளன.
மூத்த பிள்ளை என்பதோடு பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் இருந்துள்ளமையால் பொது நிகழ்வுகளில் முடிவெடுத்தலோ செயலாற்றலோ எனக்குச் சிக்கலாக இருந்ததில்லை. எனினும், கொரோனா காலத்தில் தனிவாழ்வில் சில முடிவுகள் எடுக்கத் தடுமாறினேன். சிக்கல்கள் வந்தன. அவரிடம் பேசினால் ஏதும் தெளிவு கிடைக்கும் என்றிருந்தது. பேசவில்லை. விளைவு இடர்கள் மாதக் கணக்கில் நீடித்தன. நீர் வழிப் படூஉம் புணைபோல்’ முடிவெடுக்கலானேன். ஓரளவு சமாளித்தேன்.
கடந்த நான்காண்டுகளாக அருண்குமாருடன் பெரிதளவில் தொடர்பில் இல்லை. இருந்திருந்தால் தமிழ் கடந்து கூடுதலாகப் பலவற்றை அறிந்திருக்க முடியும். தனிவாழ்வில் இன்று நானிருக்கும் நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குச் சென்றிருக்க முடியும் என எப்போதாவது தோன்றும். அந்தளவு நம்பிக்கையை விதைத்தவர். என் வாழ்வில் Trail and Errorஇல் முட்டி மோதி ஒவ்வொன்றாகத் தெளிவு பெறுவதில் பேரனுபவம் ஈவு காலவிரயம் மீதி.
அறிவுரைத்தனமும் ஆசிரியத்தனமும் நட்புத்தனமும் இல்லாத ஒருவரிடம் ஆற்றுப்படுதல் அருண்குமாரிடம் எனக்கு வாய்த்தது. இடைக் காலங்களில் அவரை அண்ணா என்று அழைத்ததில்லை. ஜேஎன்யு பண்பாடு காரணியாக இருக்கலாம். எனினும், அவர் அவ்விளிக்குரியவர்.
எடுக்கும் முடிவுகளைச் சரிப்படுத்த வேண்டிய கட்டாயமுள்ள நடுத்தர வாழ்க்கை எனது. தமிழைப் படிப்பது என்னால் முடியுமா? முடியாதா? அதில் ஆய்வாளாராக வர-நிலைக்க இயலுமா என்பதையெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால், அங்கே ஒருவர் உள்ளார், அவரைக் கைக்காட்டிவிட்டு முன்னே நகரலாம் என்று துணிந்து தொடங்கியதுதான் தமிழில் பட்டப் பயணம்.
ஒருவேளை அருண்குமாரைப் பார்த்திராவிட்டால் இந்நேரம் குடிமைப்பணித் தேர்வில் வென்று அரசு அதிகாரியாகவோ, ஊடக நபராகவோ நானாகியிருக்கக்கூடும். என்செய்வது! இப்போது முன்மண்டை முடிகள் கொட்ட முனைவர் பட்டத்தை நிறைவு செய்ய உள்ளேன்.
என் முனைவர் பட்ட ஆய்வையொட்டி அண்மையில் இத்தாலி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டடைய இயன்றது. (அதன் மொழி லமூலிக் அன்று, தமூலிக் என்று ஆய்வாளர் ஒருவர் வழி எடுத்துக்காட்டினார்). ஓலைச்சுவடி கண்டறிந்ததை அங்கீகரித்து ஜேஎன்யு பல்கலை. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தது. அந்த ஓலைச்சுவடி செய்தி அண்மையில் UPSC பயிற்சி மையங்களின் தளங்களிலெல்லாம் வெளியானது. செய்தி : https://youtu.be/HP59Z175ZgI
இவை போன்றே தமிழைப் பட்டமாகப் படித்ததால் நானடையும் அத்தனை வளர்ச்சியிலும் முதற்படி அருண்குமாருடையது. தமிழைப் பட்டமாகப் பயில ஆற்றுப்படுத்தியதோடு புதிய திறப்புகளையும் அறிமுகப்படுத்திய அருண்குமார் செய்யாறு அவர்களுக்கு... அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் நூல் உரித்து.
அவரை அறிமுகப்படுத்திய பேரா. ஆதி இராமானுஜம் அவர்களுக்கும் அதற்குக் காரணமாய் அமைந்த விகடன் குழும மாணவப் பத்திரிக்கையாளத் திட்டத்திற்கும் இலக்கிய வளர்ச்சிக் கழகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தக | 05.09.2023 | தில்லி

பெரும்பாணனுடன் சிறுபாணன்



செவ்வாய், 6 ஜூன், 2023

கருத்தியல் பின்னணியில் தொல்காப்பியர் அரிஸ்டாட்டில் : ஓர் ஒப்பீடு

கருத்தியல் பின்னணியில்

தொல்காப்பியர்அரிஸ்டாட்டில் : ஓர் ஒப்பீடு

         உலகை உய்ய அதனை விளங்கிக்கொள்ளல் முதன்மையாகிறது. அறிதலின் வழிப்பட்டது அறிவு எனப்பட்டது. விளங்கியதனை விளக்குதலின் வழி அறிவு கடத்தப்பட்டது. அறிவின் வழிப்பட்ட சிந்தனைசெயல்வடிவமானதன்வழி மனித ஆக்கங்கள் தோன்றின. இதையடுத்துப் பொருள்கள் மீதான சிந்தனைகளும் வெளிப்பட்டன. 'பொருள்களை உற்பத்தி செய்யும்போதுமனிதன் தன் சுற்றுச்சூழலின் மீது செயலாற்றிஅதைத் தன் உணர்வுப் பூர்வமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருகிறான். இவ்வாறு தன் வாழ்வுக்கான தேவைகளை உற்பத்திசெய்து கொள்கிறான். முதலில்மனிதன் இயற்கைமீது அதாவது வினைபுரிபவன்(subject), பொருளின்மீது(object) ஆரம்பச் செயல்பாடு புரிகிறான். இதைத்தொடர்ந்தி பிரதிபலிப்புச் செயற்பாடாக இயற்கையானது மனிதன்மீதுஅதாவது பொருள்வினைபுரிபவன்மீது வினையாற்றுகிறது.'[1] எனும் ஜார்ஜ் தாம்சன் கருத்து நோக்கத்தக்கது.

            உலக இயக்கத்தின் மூலமாகத் தொடக்கத்தில் இயற்கையைக் கண்ட மனிதர்கள்அதனை விளங்க முற்பட்டனர். அதையொட்டியே சிந்தனைகளை வெளிப்படுத்தினர். அது காலப்போக்கில் நீட்சியடைந்து வளர்ச்சியுற்றது. பிறகுஇயற்கை அறிவை வாழ்வின் மீதும் செலுத்தத்தொடங்கினர். இதற்கடுத்தே கருத்துப்பொருள்கள் மீதான கருத்துகளின் உருவாக்கம் தொடங்கியது. மனிதன்தன் அறிதல் அனுபவங்களை (cognitive experiences) முறைப்படுத்தி ஆயும் பிரிவு அறிவியல்தன் உணர்தல் அனுபவங்களை (affective experiences) முறைப்படுத்தி ஆயும் பிரிவு கலை. சிந்தனைக்கும் உணர்தலுக்கும் இடையிலான வேறுபாட்டையே அறிதலும் உணர்தலும் தெளிவாக்குகிறது[2] எனும் கருத்து இங்கு முதன்மையாகிறது. இதனடிப்படையில் அறிதல் அனுபவங்களையும் உணர்தல் அனுபவங்களையும் ஆவணப்படுத்தியோரில் தமிழில் தொல்காப்பியரும் கிரேக்கத்தில் அரிஸ்டாட்டிலும் முன்னோடிகள் ஆவர்.        

கருத்தியல்

கருதப்படுவது கருத்து. வெளிப்பாட்டின் ஒரு முறைமையாவது கருத்து. கருத்தானது சமூகம்அரசியல்,மெய்யியல் போலானவற்றின் வழியாகத் தொடரப்படுகையில் அது கருத்தியலாக உருவாகிறது. ஆங்கிலத்தில் இதனை ஐடியாலஜி என்பர். 1796ஆம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவியலாளர் டெஸ்டுட் டி ட்ரேசி(1754-1836) என்பவரால் ஐடியாலஜி என்ற சொல் "கருத்துகளின் ஆய்வு அல்லது அறிவியல்" எனும் பொருண்மையில் உருவாக்கப்பட்டது. “கருத்துகளின் அறிவியல்” எனப்படும் இது முதலில் “உணர்வுகளிலிருந்து அறிவுத்திறனைப் பெறும் அறிவின் தத்துவம்” (மெட்டாபிசிக்ஸ்க்கு மாறாக) எனப்பட்டது. ஐடியா + லாஜி எனும் இரு கிரேக்கச் சொற்களுக்கிடையே கிரேக்க உயிரெழுத்தான ஓ இணைத்து ஐடியாலஜி என்ற சொல்லை ட்ரேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.[3]  

அவர் கருத்தியலை தாராளவாத தத்துவமாகக் கருதினார்இது தனிநபர் சுதந்திரம்சொத்துசுதந்திர சந்தைகள் மற்றும் அரச அதிகாரத்தின் மீதான அரசியலமைப்பு வரம்புகளை எதிர்கொள்வதாய் அமைந்தது. இவற்றின் அடிப்படையில்கருத்தியல் என்பது மிகவும் பொதுச்சொல் என்று எண்ணுதற்கு, கருத்தியலானது அவற்றின் வெளிப்பாடுகளையும் ஊகித்தறிதல் பற்றிய ஆய்வையும் கொண்டுள்ளது.

உலகை விளக்குவதற்கான முறையான கருத்துக்கள்கோட்பாடுகள்” என்பதாக 1907ஆம் ஆண்டளவில் ஆங்கிலத்தில் பயன்பாட்டில் இருந்த இச்சொல்சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் எழுத்துகளில்வர்க்கத்தைக் குறித்தது. 1918இல் இருந்து அது சோசலிசம் மற்றும் கம்யூனிசத்துடன் (ஏன் பாசிசத்துடன் கூட) பயன்படுத்தப்பட்டதுதற்காலத்தில் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகப் பகுத்தறிவுவாதத்தால் ஆதரிக்கப்படாத பரிந்துரைக்கப்பட்ட கோட்பாடு என்றும் கருத்தியல் பொருள் கொள்ளப்படுகிறது.[4]

கருத்துகளின் தன்மைவரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை அவை எழுந்த தத்துவஅரசியல் மற்றும் உலகச் சூழல்களின் அடிப்படையில் விவரிக்கிறது கருத்தியல். இது, ‘குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள்குறிப்பாக அரசியல் அமைப்புகட்சி அல்லது அமைப்பை அடிப்படையாகக் கொண்டது[5]என்கிறது கேம்பிரிட்ஜ் அகராதி. கருத்தியல் என்பதற்கான விளக்கங்களாக மேரியம் வெப்ஸ்டர் அகராதி[6]அளிக்கும் விளக்கங்கள் வருமாறு:

·      ஒரு தனி நபர்குழு அல்லது பண்பாட்டுச் சிந்தனையின் தன்மை அல்லது உள்ளடக்கம்.

·      ஒரு சமூக அரசியல் திட்டத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த துணிவுரைகள் (integrated assertions),கோட்பாடுகள் மற்றும் நோக்கங்கள்.

·      குறிப்பாக மனித வாழ்க்கை அல்லது பண்பாடு பற்றிய முறையான கருத்துக்கள்.

இவற்றிலிருந்துஉலகத்தை விளக்கவும் மாற்றவும் விரும்பும் சிந்தனை அமைப்பு எனும் பின்னணியில் தொல்காப்பியர்அரிஸ்டாட்டிலை அவர்கள்தம் ஆக்கங்கள்வழி அறிதல் முதன்மையாகும்.

அறிவியல்-கலையியல்

மனிதச் சிந்தனையின் முதன்மை இரு வடிவங்கள் அறிவியலும் கலையும். இவ்விரண்டும் பருப்பொருட்கள் மீதும் கருத்துப்பொருட்கள் மீதும் செயலாற்றுகின்றன. இரண்டனுள் பருப்பொருட்கள் சார்ந்தே அறிவியல் முதன்மை பெறுகிறது. அறிவியலை விளக்க கருத்துநிலைய எண்களும் எழுத்துகளும் அடிப்படையாகின்றன. இவை மனித ஆக்கங்கள். கலையும் மனித ஆக்கமே. இரண்டுமே, உலகை விளக்குவதற்கான முறையான கருத்துகளைக்(கருத்தியல்) கொண்டுள்ளன. உலகளவில் மனிதச் சிந்தனையின் தொடக்க வடிவமாக அறிவியலும் காலப்போக்கிலமைந்த சிந்தனையின் வடிவமாகக் கலையும் இருந்துள்ளன.

பண்பாடு வளமடைந்த சமூகங்கள் அறிவியலிலும் கலையியலிலும் முன்னேறியிருந்தன. அறிவியல் ஒரு உற்பத்திச் சாதனமாக ஆன பின்னால்கலையும் ஒரு வாணிபப் பொருளாகிறது. கலையும் நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால்அது ஏனைய வாணிபப் பொருள்களிலிருந்து சில விஷயங்களில் வேறுபடுகிறது.[7]அறிவியலை புறச்செயல்பாடுகளுக்கும் கலையை அகச்செயல்பாடுகளுக்குமாய் அணுகினர். வாழ்தலுக்கான அடிப்படையாக அறிவியலும் வாழ்தலுக்கான இலக்காகக் கலையும் கொள்ளப்பட்டுள்ளன.

 

அறிவியலாளர்-கலையியலாளர் : தொல்காப்பியர்

தொல்காப்பியத்தின் முதலிரண்டு அதிகாரங்கள் பேசுவது எழுத்துசொல் கட்டமைப்புகளாகும். இது மொழியைத் தர்க்கப்பூர்வமாக அணுகும் அளவையியல்(அறிவியல்) வழியது. பொருளதிகாரம் பேசுவது இலக்கியப் பொருளாகும். இலக்கியம் எடுத்துக்கொண்ட பொருள் (subject), அது படிப்பவர்களுக்குத் தரும் பொருள் (meaning) என்னும் இரண்டுமே இலக்கியப் பொருளில் அடங்கும்அதனால் இரண்டும் பொருளதிகாரத்தில் அடங்கும்.  இலக்கியப் பொருளே வாழ்க்கை என்னும்போது அதன் எண்ணிலடங்காத அம்சங்களை வகுத்துத் தொகுத்து அளிப்பது இலக்கியத்தின் இலக்கணத்தை-கொள்கையை-எழுதுபவரின் தலையாய பணி.[8] இலக்கிய அம்சங்களை வகுத்தும் தொகுத்தும் அளித்தல் இயலும் தன்மையது. ஏனெனில்அது மனித ஆக்கம். மனித ஆக்கம் அல்லனவற்றையும் வகுத்தும் தொகுத்தும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். 

தொல்காப்பியத்தில் நேரடியாக அறிவியலைப் பேசும் பதிவுகள் காணக்கிடைக்கவில்லை. ஆனால்,அறிவியற்றொழிலை உடைய செயல்களின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அறிஅறிதல், அறிவன்... என அறி எனும் வேர்ச்சொல்லைக் கொண்ட 34 சொற்கள்[9] இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பெரும்பான்மை அறிதல் பொருண்மையைக் கொண்டவை. எனினும்அறிவுவயப்பட்ட பதிவுகளும் தொல்காப்பியத்தில் உள்ளன. 

மக்க டாமே யாறறி வுயிரே                                     (தொல். மரபு. 33.1)

என்பதோடுஆறறிவு என்பதற்கான வரையறையும் அளிக்கிறது தொல்காப்பியம்.

ஆறறி வதுவே யவற்றொடு மனனே                      (தொல். மரபு. 27.6)

எனும் அடிக்கு, ‘உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும் . நாவினாற் கைப்புகாழ்ப்பு,துவர்ப்புஉவர்ப்புபுளிப்புமதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மைசெம்மைபொன்மைபசுமைகருமைநெடுமைகுறுமைபருமைநேர்மைவட்டம்,கோணம்சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும்சொற்படும் பொருளும் அறியும். மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும். இது செயல் வேண்டுமெனவும்இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறிதலாயின.’ என்றுரைக்கிறார் இளம்பூரணர். அனுமானித்தல் மனிதரின் இயற்கைப் பண்புநலன்களுள் ஒன்றாக இளம்பூரணர் குறிப்பிடுவது முதன்மையானது. உயிரின வகைப்பாட்டுக் கொள்கையில் புலனுணர்வு அடிப்படையில் உலகுயிர்களை வகைப்படுத்தும் பாங்கு நோக்கற்குரியது. 

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியி னாற்றிய வறிவன் றேயமும்                      (தொல். புறத். 20)

எனும் அடிகளுக்கு “‘காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கமும்’ என்று நச்சினார்க்கினியர் உரையளிப்பது அறிவனைத் துறவி என்கிறது. குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் என்று இளம்பூரணர் சுட்டுவது இல்வாழ்வில் உள்ள கணியன் என்கிறது.[10] அனுமானித்தலும் அறிந்ததை மீளாய்வு செய்து செயலாற்றலும் மனிதத்தன்மையவை. 

மேற்காணும்மரபியல்புறத்திணையியல் அடிகளுக்கான இளம்பூரணரின் உரை ஆறறிவுஅறிவன் குறித்தான ஒருங்கமைவைத் தெளிவுபடுத்துகிறது. இதுதொல்காப்பியத் தேட்டத்தைக் குறிப்பதாகவே நோக்கவேண்டியுள்ளது. பொருளதிகாரத்தில் மரபியலில் இயற்கையில் விளைந்தவற்றின் வகைப்பாட்டைச் சொல்லுமிடத்தும் அறிவியலாளராகவும் செய்யுளில் கொள்ளத்தக்கனவற்றைச் சுட்டும் ஏனைய இயல்களில் கோட்பாட்டாளராகவும் தொல்காப்பியர் பரிணமிப்பதாகக் கொள்ளவியலும். இந்தக் கோட்பாடுகள் இலக்கியத்தின் வழிப்பட்டமைவதால் அதன் மூலம் கலை என்பதனுழி கலையியலாளராகவும் கூறவியலும்.

 

அறிவியலாளர் – கலையியலாளர் அரிஸ்டாட்டில்

“அனைத்து அறிவியலும் நடைமுறையானதுகவித்துவமானது அல்லது கோட்பாட்டுத்துவமானது”[11]எனும் அரிஸ்டாட்டிலின் கருத்து நோக்கற்குரியது. அரிஸ்டாட்டிலைப் பொறுத்தமட்டில்நடைமுறை அறிவியலானது அறவியலையும் அரசியலையும் உள்ளடக்கியது. கவித்துவ அறிவியலானது கவிதை உள்ளிட்ட கலைகளை உள்ளடக்கியது. கோட்பாட்டுத்துவ அறிவியலானது இயற்பியல்கணிதம்மெட்டா இயற்பியலை உள்ளடக்கியது.  இதனுழிதொடக்கக் காலத்தில் மெய்யியலின் ஓர் அங்கமாகவே அறிவியல் கருதப்பட்டுள்ளமை தெளிவாகிறது. 

            கோட்பாடுகள்காரணங்கள் மற்றும் கூறுகளைக் கொண்ட எந்தவொரு விசயத்திலும்அறிவியல் அறிவும் புரிதலும் இவற்றின் பிடியில் இருந்து உருவாகின்றன. செயலொன்றின் காரணங்களையும் கொள்கைகளையும் முதலில் புரிந்துகொண்டுஅதன் சிறப்பம்சங்களைக் கண்டறிந்தால் மட்டுமே பொருண்மை தெரியும் என எண்ணுகிறோம். இயற்கையைப் பற்றிய அறிவியல் அறிவைப் பெறமுதலில் அதன் கொள்கைகளைப் பற்றி முடிவு செய்ய முயற்சிக்க வேண்டும். 184ஏ10 எனும் அரிஸ்டாட்டிலின் கருத்து உலகை விளங்க முயன்றமைக்கான சான்றாக விளங்குகிறது. 

கொள்கைகோட்பாடுஅறிவியல் குறித்த வரையறைகளைக் கொண்டிருந்த அரிஸ்டாட்டில்,இயற்பியலில் உலகம்இயக்கம்கருத்துப்பொருளான காலம் மீதும் கருத்தளித்துள்ளார். மெட்டாஇயற்பியலில் காட்சிப்புலனாகும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகை அடையாளங்காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவை அவரை அறிவியலாளராகச் சுட்டும் காரணிகளாகின்றன. நடைமுறைகவித்துவ அறிவியல் எனும் பாகுபாட்டினுள் இடம்பெறலாகும் அரிஸ்டாட்டிலது பனுவல்கள் வாழ்விய நோக்கைக் கொண்டதாக அமையும். கவிதையின் சாயல்ஒருங்கிணைவு மற்றும் இசைமை ஆகியவை இன்பத்திற்காக உருவாக்கப்பட்டவை என்று வாழ்விய நோக்கில் கருத்தளித்தமை அவரைக் கலையியலாளராகக் கருத இடமளிக்கின்றது. 

ஒப்பீடு

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்கள் இலக்கணம்மொழியியல்கவிதையியல்,நாடகவியல்உயிரியல்காலநிலையியல்மெய்யியல்தர்க்கவியல் ஆகியவற்றின் பின்னணியில் வைத்துக் நோக்கத்தக்கன. தொல்காப்பியத்துள் பிறதுறைசார் கூறுகளும் இடம்பெற்றுள்ளனஇது தொல்காப்பியரைப் பல்துறை புலமை உடையவராகக் கருத இடமளிக்கிறதுகருத்து மூலங்களின் அடிப்படையில் இவற்றைக் அறிவியல் கலையியல் என்றே வகைப்படுத்தவியலும்.  தர்க்கவியல்இயற்கையியல்உடலுயிரியல்,மீமெய்யியல்அறவியல்அரசியல்அணியியல்கவிதையியல் எனும் தலைப்புகளின் கீழ் அரிஸ்டாட்டிலின் ஆக்கங்கள் அமைகின்றனஇதனை அரிஸ்டாட்டிலே கருத்துநிலை அடிப்படையில் முந்நிலைப்பட்டதாகப் பகுத்திருப்பினும் கருத்து மூலங்கள் அடிப்படையில் அறிவியல், கலையியல் என்றே வகைப்படுத்தவியலும்.

பருப்பொருட்கள் மீதற்ற கருத்துநிலைக் கூறுகள் மனிதர் உருவாக்குவது. அதனை,வகைப்படுத்துதலோதொகைப்படுத்துதலோ இயலும் தன்மையது. மொழிக்கான இலக்கணத்தை, கலை வடிவத்தை வரையறைக்குட்படுத்தி வகை தொகைப்படுத்துதல் ஒப்பீட்டளவில் எளிது. ஆனால்மனித உருவாக்கமல்லாதஇயற்கையில் விளைந்தவற்றை அடையாளங்கண்டு வகை தொகைப்படுத்தும் பாங்கு அறிவியற்வயப்பட்டதாகும்.  

உலகத்தை விளக்க விரும்பும் சிந்தனை அமைப்பு எனும் நிலையில் உயிரின வகைப்பாட்டை முன்வைக்கிறார் தொல்காப்பியர். இதே பாங்குபண்படிப்படையில் உயிரின வகைப்பாட்டை முன்வைக்கும் அரிஸ்டாட்டிலிடத்தும் உண்டு. உலக உயிர்களை முன்வைக்கும் இவர்களிருவரும் உலகின் அடிப்படைக் கூறுகளைப் பண்புநிலையில் நிலம்தீநீர்வளிவிசும்பு தொகுத்தும் (தொல். மரபு. 91 மற்றும் மெட்டாஇயற்பியல்  6) சுட்டியுள்ளனர். இத்தகு உலகின் அடிப்படை குறித்த இத்தகு தொகையாக்கம் என்பதுஅறிவியற்வழிப்பட்டது. கலைவழியன்று. 

            முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த அமைப்பு(Settings)’[12] என்றே கொள்ளவியலும். இது அமைப்புநிலையில் வகுத்துக் கொள்ளப்பட்டது. பயன்பாட்டு அடிப்படையிலானது. அறிவு நிலையில் கருத்தாக வைத்திருப்பது கொள்கை’ அந்தக் கொள்கையை வரன்முறையானசிந்தனை நெறிக்கைமைய வகுத்தமைத்துக் கொள்ளும் முறைமையே கோட்பாடு’’[13]  எனும் சிவத்தம்பியின் கருத்தை இங்குப் பொருத்திப் பார்க்கவியலும். 

இதனை அறிவியற் பின்னணியில் கருதும் வாய்ப்பற்ற அதேவேளையில்நிலம்-பொழுது எனும் கருத்தாக்கத்தை நிலம் முதலாகவும் விசும்பு ஈறாகவும் கொண்டு கலந்த  மயக்கம் உலகமாதலின் என உரைக்குமிடத்து அறிவிய நோக்கைப் பெறுகிறது. மேலும்உயிரின வகைப்பாடும்எழுத்தொலிகளின் பிறப்புகளை அறிவிக்கும் பிறப்பியலும் இயல்புகளைத் தொகைப்படுத்தும் அறிவியல் தன்மையவை. இதோடுஎண்ணுப்பெயர்கள் முதலான மொழியமைப்பின் அளவையியல் சிந்தனைகளும் அறிவியல் தன்மையவை. இவை உலகை விளக்க முனையும் சிந்தனை அமைப்பை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

இத்தகு வருவித்து நோக்கும் செய்கை அரிஸ்டாட்டிலிகத்திற்குத் தேவையில்லை. அது நேரடியாகப் பொருண்மையைப் பேசுவதால் தர்க்கவியல்இயற்கையியல்உடலுயிரியல்மீமெய்யியல் தலைப்புகளின் கீழமைந்த பனுவல்கள் உலகத்தை/இயற்கையை விளங்கிக் கொள்ள அறிவியல் வயப்பட்டவை என்றும் அறவியல்அரசியல்அணியியல்கவிதையியல் எனும் தலைப்புகளின் கீழமைந்த பனுவல்கள் மனித வாழ்வுக்காக மனித ஆக்கத்தால் விளைந்தவை என்பதால் கலைவழிப்பட்டவை என்றும் கொள்ளவியலும். 

நிறைவுரை

தனி நபர்குழு அல்லது பண்பாட்டுச் சிந்தனையின் உள்ளடக்கமாகவும்சமூக அரசியல் திட்டத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த துணிவுரைகளாகவும் (integrated assertions)கோட்பாடுகளாகவும்மனித வாழ்க்கை அல்லது பண்பாடு பற்றிய முறையான கருத்துகளாகவும் தொல்காப்பியர்அரிஸ்டாட்டிலது பனுவல்களை நோக்கவியலும். உலகத்தை விளக்கும் சிந்தனை அமைப்பில் இவை அமைந்துள்ளன.

தொல்காப்பியம் தனிமனித அறிவின் தேட்டமில்லைதமிழறிவு மரபின் நீட்சியிலும் தன் சமகால அறிதல்களிலுமிருந்தே தொல்காப்பியம் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறதுதொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளஎன்மனார் புலவர்(75முறை), ‘என்ப’(145 முறை), ‘மொழிப’ (87முறை), ‘மொழிமனார்’ (3முறை), ‘அறிந்திசினோரே’(2 முறை), ‘சிறந்திசினோரே’(1முறை) முதலான சொற்கள் தொல்காப்பியருக்கு முன்பிருந்த அறிவு மரபினரைக் குறிப்பதாகவே அமைகின்றனஇதனுழி முந்தையோரின் கருத்துகளை அறிந்து அதைவழிமொழிந்து, தன் கருத்துகளை வெளிப்படுத்தியமையும் நோக்கற்குரியன. முந்தையோரின் குறிப்புகள்,பனுவல்கள் கிடைக்காமையால் தொல்காப்பியக் கருத்துகளைத் தொல்காப்பியரின் கருத்துகளாக மட்டும் கொள்ளுதல் கடினமாகும். அதிலிருந்து உருவாகும் தமிழறிவு மரபின் அறிவுத்தேட்டக் கருத்தியலாகக் கொள்ளுதல் இயலும். புறனடைகளைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் மறுப்புகளைச் சுட்டாமை அவர்தம் தனித்தன்மையை விளங்க வாய்ப்பிலாதாக்கியது. தொல்காப்பியர் கருத்தியல் அனைத்தும் தொல்காப்பியக் கருத்தியல் எனலாம்ஆனால், தொல்காப்பியக் கருத்தியல் அனைத்தும் தொல்காப்பியர் ஆக்கிய கருத்தியல் ஆகாது. மேலும், ‘வேண்டும்’ (39) முதலான உறுதிக்கூற்று இடம்பெறும் நூற்பாக்கள் தொல்காப்பியரின் கருத்துகளாக வெளிப்பட்டுள்ளதாகக் கருதவியலும். இயற்கைக் கூறுகள் குறித்த மரபியல் 91ஆவது (கலந்த மயக்கம் உலகமாதலின்) நூற்பாவை தொல்காப்பியரது கருத்தியலாகக் கொள்ளவியலும். இது பிற்காலத்திய தமிழறிவு மரபால் சுட்டப்பெறாத ஒன்றாகும். ஒலி அடிப்படையில் இலக்கணம் சுட்டுமிடங்களிலும் உலகம் குறித்த கருத்துகளைக் வகை தொகைப்படுத்தி அளிக்குமிடங்களிலும் பொருள்முதல்வாதியாகப் பரிணமிக்கும் தொல்காப்பியர் ஏனைய இடங்களில் `கருத்துமுதல்வாதியாகக் கருத்துகளை மொழிகிறார் எனலாம். 

கிரேக்கத்தில்அரிஸ்டாட்டிலின் கிடைக்கலாகும் பனுவல்கள் விவாதத் தன்மையைக் கொண்டவை. அதில் முன்னோர்சமகாலத்தோரின் கருத்துகள் சுட்டப்பெற்று உரியவற்றில் விமர்சனம் வைத்துஅதிலிருந்து தாம் வேறுபடும் விதத்தைக் காட்டியிருப்பதால் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை அடையாளங்காணுதல் எளிது. பிற்காலத்தில்அவை அரிஸ்டாட்டிலிய மரபாக அது தொடர்ந்தமையும் நோக்கற்குரியது. நடைமுறை,கவித்துவ அறிவியல் பனுவல்களினால் கருத்துமுதல் வாதியாகவும் கோட்பாட்டுத்துவ அறிவியல் பனுவல்களினால் காட்சிப்பொருள் உண்மைவாதியாகவும் அரிஸ்டாட்டிலை அடைளாப்படுத்தவியலும். 

துணையன்கள்

                        சிவத்தம்பிகா. (1982). இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம். 

                வேங்கடராமையாகே. எம்.சுப்பிரமணியன்ச.வே. & நாகராசன்ப. வெ. (1996). தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு. திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.

                ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்). (2002). மனித சமூக சாரம். சென்னைநியு செஞ்சுரி புத்தக நிலையம்.

                Jonathan Barnes. (ed.). (1984). The Complete works of Aristotle The revised oxford translation - volume one. New Jersey: Princten University Press.

                Jonathan Barnes. (ed.). (1984). The Complete works of Aristotle The revised oxford translation - volume two. New Jersey: Princten University Press.

https://www.etymonline.com

https://dictionary.cambridge.org

https://www.merriam-webster.com

https://www.tamilvu.org

https://www.vallamai.com

 

 

 

 



[1] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 13.

[2] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 22.

[3] (02.06.2023). Online Etymological Dictionary. https://www.etymonline.com/word/ideology

[4] Raphael, Problems of Political Philosophy. P.69

[5] (02.06.2023). Cambridge Dictionary. https://dictionary.cambridge.org/dictionary/english/ideology

[6] (02.06.2023). Merriam Webster Dictionary. https://www.merriam-webster.com/dictionary/ideology

[7] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 160.

[8] அண்ணாமலைஇ., (2020) செவ்விலக்கியப் பொருள்: அகம்புறமாஅறம்பொருள்இன்பம்வீடா?. க.

[9] அறி (34)அறிதல் (11)அறிதலும் (1)அறிதற்கு (1)அறிந்த (4)அறிந்திசினோரே (2)அறிந்து (2)அறிந்தோர்க்கே (1)அறிந்தோரே (1)அறிந்தோள் (1)அறிநரும் (1)அறிய (11)அறியல் (1)அறியா (2)அறியாது (1)அறியாமை (1)அறியாமையே (1)அறியும் (6)அறிவது (1)அறிவதுவே (6)அறிவர் (3)அறிவர்க்கும் (1)அறிவன் (1)அறிவின் (2)அறிவினவே (5)அறிவினள் (1)அறிவு (6)அறிவும் (2)அறிவுறினும் (1)அறிவுறீஇ (1)அறிவுறுத்து (1)அறிவுறுதல் (1)அறிவே (1).

[10] (02.06.2023). தமிழ் இணையக் கல்விக்கழகம். https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=153

[11] "All science (dianoia) is either practical, poetical or theoretical" (Metaphysics 1025b25).

[12] சுந்தராம்பாள்கோ. (29.07.2022). தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும். (03.06.2023) https://www.vallamai.com/?p=107582

[13] சிவத்தம்பிகா. இலக்கியமும் கருத்துநிலையும். ப. 15