நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 11 டிசம்பர், 2017

மீன் உண்ணா மீனவ நண்பன் !

நேற்றைய முன் தினம் காரைக்கால் பண்பலை 100.03 இல் சூரியன் தின்று மீதமிருந்த பிற்பகலில் மீனவ நண்பனின் நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


  • எப்படி மீன் பிடிப்பார்கள் ?
  • என்னென்ன கருவிகள் கொண்டு செல்வார்கள் ?
  • மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன ?
  • மீன்பிடிப்பில் கையாளும் தொழில்நுட்பம் என்ன ?
  • மீன்களை எப்படி சந்தைப்படுத்துவது ?
  • அதன் பொருளாதார மீட்டுருவாக்கம் எப்படி ?
  • திமிங்கலம் கிடைக்குமா ?
  • அரிய வகை உயிரினங்களை என்ன செய்வீர்கள் ?


என மீனவ நண்பனின் அன்றாடப் பணிகளை வானொலி நிலையத்தார் கேட்க, ஒவ்வொன்றையும் கண் முன் விரியும் கடல்பரப்பில் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தான் அந்த மீனவ நண்பன்.

கேட்கப்பட்ட கேள்விகளினூடே ஒரு கேள்வி சற்றே நிதானித்தது..

நீங்கள் விரும்பி உண்ணும் மீன்வகை எது என வினா எழுப்பினார் நேர்காணல் செய்தவர்.

“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ, எங்க அப்பா, அம்மா எனக்கு சோறு போட்டாங்க, என்னுடைய சாமிங்க அவங்க.

நான் வளர்ந்து தொழிலுக்கு வந்ததுக்கு அப்புறம், இந்த மீனு தான் எனக்கு சோறு போடுது, என்னுடைய சாமிங்க அது”.

என்று பதிலளித்து அடுத்த கேள்விக்கு ஆயத்தமானான் செய்யும் தொழிலை தெய்வம்  என்றெண்ணிய அம்மீனவ நண்பன்.

இதைப் பதிவேற்ற இணையம் திறக்கையிலே,  கடலில் மேற்பரப்பில் படகின்றி மிதந்து கொண்டிருந்தான் மீனவ நண்பன் 😭😓😓😓


- த.க.தமிழ்பாரதன்
11.12.2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக