நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

முகநூல் வேந்தர் எனும் தமிழ் பாரதன்

எனக்கு கணினி அறிமுகப் படுத்தப்பட்டதே என்னுடைய பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான். 2௦௦4 சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டில் முதன் முதலில் கணினி வாங்க வேண்டும் என கடைக்கால் இட்டு 2௦1௦க்கு பின்னால் அது முழுமையடைந்தது. ஆனால், அதன் பயன்பாடு எனக்கு முழுவதும் தெரிவதற்கு மூன்றாண்டுகளுக்கும் மேலானது. பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் விடுமுறைக்கு சென்னையில் சித்தப்பா தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தான் கணினியை விட இணையம் பரிச்சயமானது.
அந்த நாட்களில் நான் கற்றுக் கொண்ட பாடம் தான் இந்நாள் வரை வேகமாக இயங்க வைக்கிறது. எனக்கு கணினி பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும், இணையத்தை இரண்டு முறை 1௦ ரூபாய்க்கு அரசு நூலகத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். படம் பார்ப்பதற்கு கணினி என்று நிலை மாறி, இன்றைக்கு நான் எடுக்கும் குறும்படம் முழுமையும் என்னால் தொகுக்கப்பட்டு(editing) வெளியிட முடியும் எனும் அளவிற்கு பயன்படுத்த தகுதிப் படுத்திக் கொண்டேன். இணையத்தில் முதன்முதலில் எனக்கு முகநூலை தான் அறிமுகம் செய்தார்கள்.
சித்தப்பா Ravindran தான் எனக்கு மின்னஞ்சல் துவக்கி, முகநூலை துவக்கி தந்தார்கள். முகநூலின் வீச்சை அன்றைக்கு நான் உணர்ந்ததில்லை. எப்போதும் எனக்கொரு பழக்கமுண்டு. “ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதன் பின் விளைவுகளையும்., அதன் தொலைநோக்கு அம்சங்களையும் எடுத்து சீராய்ந்து மனதிற்கு பட்டத்தை செய்வது”. அந்த வகையில் முகநூலை ஆரம்பித்தவுடன் எனக்காக ஒன்றும் பிறருக்காக ஒன்றும் ஆரம்பித்தேன்.
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது சுதந்திர தின, குடியரசு தின உரைகள் நிகழும், அதை மொழிபெயர்ப்பு செய்து வானொலியில் வெளியிடுவார்கள். “ஓஹோ! வானொலியில் பேசினால் ஒரே நேரத்தில் நாம் சொல்லும் நற்கருத்து, இந்தியா முழுவதும் பரவும்., அத்தகு செயலை செய்வதற்கு நாம் குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தழைத்து ஓங்கியது”. அதற்கான முன்னோட்டமாக அறிவியல் தொழில்நுட்பம் முகநூல் என் கருத்தை உலகெங்கும் அளித்து நவீனப்படுத்தியது.
குடியரசு தலைவர், பிரதமர் எனும் பதவிக்கான முன்னோட்டமாக கூட இதை கையில் எடுத்தேன். எப்போதும் செய்யும் செயல்களை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகும் போது, வெற்றி பெறத் துவங்குகிறோம். பேஸ்புக் கணக்கு துவங்கி ஐந்து மாத காலம், முன்னோட்டம் என்று சொல்லலாம். முதன் பதிவாக 04.08.2013ம் தேதி நண்பர்கள் தினத்தைப் பற்றி பதிவேற்றினேன். அதற்குப் பின் மனதில் பட்டதில் சிறந்தவற்றை பதிவேற்றியது உண்டு., பதிவேற்றியவுடன் நீக்கியதும் உண்டு.
நான் பதிவேற்றிய படங்கள், காணொளிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,https://www.facebook.com/butterbharathan1/videos/vb.100006256782775/1458293267722552/?type=3&theater மேற்கண்ட காதலர் தின காணொளி தான். எனக்கான ஒரு அடையாளத்தை தந்தது., அந்த காலத்தில் கிட்டத்தட்ட 5௦௦க்கும் மேற்பட்ட நட்பு கோரிக்கைகள் வந்திருந்தது. ஆனால், follower பற்றியெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த காணொளி பதிவிற்கு பின்னால் தான், மேலும் நடையை மாற்ற வேண்டியதாயிற்று. அது முதல் இது வரை முகநூலில் மூன்றிக்கும் மேற்பட்ட பக்கங்களை நிர்வகித்து வருகிறேன் சிறப்பாக (!) .
லைக்குகள், கமெண்டுகள் இவற்றை வைத்து எந்த வித பணமும் சம்பாதிக்க இயலாது என்பது தெரிந்த ஒன்று. ஆனால், நான் கூறக் கூடிய செய்தி ஏதேனும் ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் சிறு சிந்தனைத் துளியையாவது விதைத்திருக்கும் என்கிற காரணத்தால் பல மணி நேரம் என் கருத்தை சொல்வதைப் போல பிறர் கருத்தையும் அறிவதற்கு செலவிட நேர்ந்தது. பல வீடுகளில் சாற்றப்படும் கூற்றுகளைப் போன்ற திட்டுகளும் என்னை வந்து சேரும். மாதம் 7௦௦ ரூபாய்க்கும் மேலாக இணையத்திற்காக பணம் கட்டும் போது தான் தேவையில்லாமல் செலவு செய்கிறோமோ? எனும் எண்ணம் வரும். ஆனால், அவற்றிற்கெல்லாம் விடையாக “நான் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது, (Facebook King Award) முகநூல் வேந்தர் விருது”.
சமூகத்தின் நான் யார் என்பதற்கான அடையாளத்தை முகம் தெரியாத நண்பர்களுக்கு அளித்தது இந்த முகநூல். அதே போல் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர்களை இணைக்கும் பாலமாக இருப்பதும் இதுவே. உலகின் முதன் முயற்சியாக தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய முகநூல் பயன்பாட்டாளர்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்திருக்கிற காஞ்சி முத்தமிழ்சங்கம்த்திற்கு பாராட்டுகள்.
நான் திருவாரூர் பகுதி மற்றும் தமிழகத்தின் பல போராளிகள் முகநூல் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்கிறார்கள் என்பதையே முதலில் தெரிவித்தேன். இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்படும் என்று கூறிய சூ.லாரன்ஸ் பொதுக் செயலாளர், காஞ்சி முத்தமிழ் சங்கம் அவர்களுக்கு நன்றி. விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் இருந்ததால் சாலச்சிறந்ததாக கடந்த ஓராண்டாக எப்பதிவும் நான் செய்யவில்லை என்கிற மனத் தோற்றம் எனக்குண்டு. இருந்தாலும் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
26.௦7.2௦15 அன்று முகநூல் வேந்தர் விருதை பெறும் நாள். விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் நிறைவு விழா முடிந்து மதியம் வேக வேகமாக தி.நகரில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் நின்றே பயணித்து, காஞ்சிபுரத்தில் இருந்து திரும்புகையில் திண்டிவனம் வரை உட்கார இடம் கிடைக்காமல் வழக்கத்தை விட மாறுபட்ட நாளாக அமைந்தது.
எதிர்கால இலக்குகளுக்கும் எனது இயல்பான வாழ்க்கைக்கும் இடையேயான பயணத்தை கடந்து செல்லும் இந்தப் பாதையில் கிடைத்திருக்கும் முகநூல் வேந்தர் விருதினை Ravindran Kalyanasundaramஅவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
படத்தில் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்
த.க.தமிழ் பாரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக