நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 30 மே, 2017

டங்கல் ஒரு மைல்கல்

டங்கல் ஒரு மைல்கல்

ஒரு திரைக்கதையைப் பார்க்கையில் இத்தனை முறை அழுதது இந்தியனுக்குப் பிறகு அன்று தான்., முதல்பாதியும் கண்ணிலிருந்து நீரையும் மூக்கின் முன்பகுதியில் துன்பக் கதவுகளின் இன்பச் சாவியையும் திறந்து வைத்த வசனங்களும் காட்சி அமைப்பும் தந்தை மகள் உணர்வுகளுக்கும், போட்டியில் கலந்து கொள்ளும் ஆயத்தமும் தமிழின் வசனங்களும் மிகச்சிறப்பானவை. அப்படிக் கண்களில் பலமுறை தாரை வார்த்த கதையாகிய டங்கல் பற்றியதே இக்கட்டுரை.


இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் பாகுபலியைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடி மகிழ்ந்திருந்த தருணம், முற்போக்கு சிந்தனையாளர்கள் சிலரே அதன் மறுகோணத்தை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்திருந்தார்கள், எனக்கென்னவோ பாகுபலி 2 அந்தளவுக்கு மனதில் ஒட்டவில்லை. 

பிரம்மாண்டத்தையும் வீரனின் வீரத்தை முன்னிறுத்தலையும் தாண்டி வெறெதுவும் காட்சிக்குள் ஒட்டவில்லை என்றே தோன்றியது.

பாகுபலியின் தேவசேனாவும் ராஜமாதேவியும் மகிழ்மதியின் நினைவுகளும் மனதிலிருந்து ஒரு சில தினங்களுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருந்த நேரம் அது.  விடுமுறையை ஒருவகையிலாவது விறுவிறுப்பாகக் கழிப்பதற்கு நண்பர்களிடமிருந்து ஏற்றி வைத்திருந்த திரைப்படங்கள் சில தன்னைக் கவனிக்க என்னை அழைத்தன.  நீண்ட ஆலோசனை ஆய்வுக்கு பின்னர் 19.05.2017 அன்று தேர்வாகிய படம் டங்கல்.

நன்றாக இருக்கிறது எனப் பலராலும் வெகுவாகப்பாராட்டப்பெற்ற படம் என்ற நினைவு படத்தை சற்றே நிதானமாகக் காணத் தொடங்கச் செய்தது. ஒலிம்பிக் போட்டியில் ஆரம்பாகிறது படம், தொலைக்காட்சியில் ஒலிபரப்பாக அதன் வெளிப்படையான் அசரீரி அலுவலகத்தில் நிகழும் மல்யுத்தப் போட்டிக்கு பொருந்துகிறது. 

ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் பிறந்து ஏதேனும் நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என எண்ணுகிற ஆண்மகனின் கனவுகள் பொருளாதாரச் சூழலால் எப்படிச் சிதைகிறது, அதன் வெளிப்பாடு தான் ஒட்டுமொத்த கதை. ஆமாம், தன்னால் நிறைவேறாததை தன் அடுத்தத் தலைமுறையைக் கொண்டு சாதிக்க நினைத்த ஒரு சராசரி இந்தியன் மஹாவீர் சிங் போகாட்-டின் சாதனைக் கதை தான் டங்கல்.

படம் துவங்கியதிலிருந்து ஒவ்வொரு காட்சியும் அசாதாரணமாக செல்கிறது. இயல்பான குடும்பத்தின் இறுக்கமான சூழல்களை அதன் வலியோடு பொருத்தி காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வப்போது அண்ணன் தங்கை செய்யும் குறும்புகளும் படத்தின் வேகத்தின் நகைச்சுவைக்குரிய முக்கியத்துவத்தைத் தருகிறது. வேகம் விவேகம் என கதை மிகுந்த சுவையாக திரைக்கதையாக மாறியிருக்கிறது.

ஒரு சராசரி மனிதனின் எண்ண ஏக்கங்கள் எவ்வாறு சமூகத்தில் வெளிப்படுகின்றன. முன்னேறும் சாதனையாளர்கள் அன்றாடம் சந்திக்கும் வீதிக்கு வீதியிலான வகுப்புக்குள்ளான வீட்டுக்கு வெளியிலான சவால்களை நையாண்டிகளை அழகாக அழுத்திச் சொல்லியிருக்கிறது. உண்மையில் புறத்தோற்றத்தில் அதிகம் கண்காணிப்பு கொள்ள வேண்டியிருப்பதால் நம் அக வளர்ச்சி என்பது அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறது. இதன் காரணமாக நம் அழகியல் வெளியில் அதிகம் தெரிகிறதே ஒழிய, உள்ளார்ந்த அக ரீதியிலான வளர்ச்சி என்பது இல்லை. 

பேன் பிடிக்கிறது என்பதை காரணம் காட்டி முடி வெட்டச் சொல்லுகிறார் அப்பா., ஆம், இன்றைக்கு வளர்ந்து வரும் இளைஞர்கள் தங்கள் முடிகளை டங்கல் பாணியில் வெட்டினால் தினசரி 30 நிமிடங்கள் மிச்சமாகும்.  சிக்கன் பெற வேண்டும் என்பதற்காக மாதச் சம்பளத்தை எதிர்நோக்கும் ஒரு குடும்பத் தலைவன் எப்படி சிக்கன் விற்பவரிடம் பேசுகிறார் என்பது இந்தியர்களின் பேச்சுத் திறமைக்கான சாதுர்யமாகும்.
அந்த வீராங்கனை இந்தியாவிற்காக விளையாடும் வரை ஒவ்வொரு வெற்றிப் படிநிலைகளையும் அந்த சிக்கன் கடை உரிமையாளரே அழகுற வெளிப்படுத்துகிறார்.

இரு பெண்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் என்பதால் அக்காள், தங்கை எனும் பந்தம் தாண்டி அவர்களுக்கு இடையேயான உறவு மேலும் பலப்பட்டு நிற்கிறது. தங்களுடன் படித்த பெண் வீட்டில் நிகழும் விழா ஒன்றில் தங்கள் தோழியருடன் கீதா சிங் போகாட், பபிதா பேசும் காட்சிகள் எதார்த்தமானவை. வாழ்க்கையைப் பாருங்கள், யாருக்கு எப்போது என்ன கிடைக்கும் என்பதை சிந்திக்கக்கூட விடுவதில்லை. அந்தத் தோழி உணர்த்திய உணர்ச்சிவசப்பட்ட உழைப்பின் மகத்துவம் தான் மல்யுத்தம் மீதான ஆர்வத்தை கீதாவிற்கும், பபிதாவிற்கும் ஊட்டுகிறது.

அது முதல் உள்ளூர் போட்டி தொடங்கி, தேசியப் போட்டி வரை அடுத்தடுத்த முன்னேற்றங்கள். அதிசயித்து பெற்ற ஐம்பது ரூபாய் நோட்டு முதல் எல்லாவற்றையும் பொக்கிஷமாகப் பேணிக்காக்கும் தந்தையின் பயிற்சியில் எல்லாம் நிகழ்கிறது.  ஒரு கட்டத்தில் இந்தியாவின் சாம்பியன் எனும் பட்டத்தை சூடி தன் கிராமத்திற்குத் திரும்பும் கீதாவை ஊரே வரவேற்கிறது.  வீட்டிற்கு வந்ததும் தந்தை மஹாவீர் போகாட் மகளுக்கு உரைக்கும் வசனம் நெஞ்சில் முள் தைத்தவை


  தேசத்தின் சாம்பியன் ஆவது பெரியதல்ல, நீ இந்த ஆண்டு வாங்கவில்லையென்றால் வேறு யாராவது அந்த இடத்திற்கு தகுதியானவராக இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் யாரோ ஒருவர் இந்தியாவின் சாம்பியன் பட்டத்தை சூடுவார்கள். ஆனால், தேசத்திற்காக சாம்பியன் பட்டத்தை சூட வேண்டும். 

வெற்றி என்பது உனக்கானதாக இருக்கக் கூடாது, உன் தேசத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய பின்பு, தேசிய விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி பட்டியாலாவில் இணைந்து கொள்கிறார் கீதா சிங் போகாட். 

அந்த இடத்தில் புதிய கோச், புதிய டெக்நிக்குகள் அதைத் தாண்டி அவரது இளமைக்கும் இதுவரை அடைந்து வந்து அப்பாவின் அதீத கோட்பாட்டு அணுகுமுறைக்குமான வடிகால் கிடைத்தது, அழகிற்கும் அத்தியாவசியப் பொழுதுபோக்கிற்குமென தன்னைத் தயாராக்கிக் கொள்கிறாள். விளைவு சர்வதேச போட்டிகளில் தோல்வி.

அதன் பிறகு தங்கை பபிதாவும் தேசிய சாம்பியனாகி பாட்டியாலா அகாடமி செல்ல அக்காவிற்கு உபதேசம் செய்கிறாள்.  அப்போது தான் தந்தை மீது தாம் தவறான பார்வை கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து திருந்தி மீண்டும் தகப்பன் சுவாமியைத் தன் ஆஸ்தான குருவாக ரீபிளேஸ் செய்கிறார்.  பின் காமன்வெல்த் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கீதா சிங் போகாட் இப்போது அப்பாவின் உதவியை நாடுகிறார்.

கிராமத்திலிருந்து வந்து பாட்டியாலாவில் வீடு எடுத்து தியேட்டரில் ரிபிளே முறையில் கவனம் செலுத்தி அப்பா மகளுக்கு செல்போன் வழியே பாடம் நடத்துகிறார். விளைவு ஒவ்வொரு சுற்றாக முன்னேறி முன்னேறி இறுதிச்  சுற்றில் இருக்கிறார். முதல் நாள் இரவு தந்தை தன் மகளுக்கு சொல்லும் அறிவுரைகள் இந்த சமூகத்தின் கூறுகளை சாட்டையால் அடிக்கும் சக்கைகள்.  ஒவ்வொரு பெண்மணியும் தன்னையும் தன் சுற்றத்தையும் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.  


நாளை நீ வெற்றி அடைந்தால் அது இந்த தேசத்திற்கானதாக இருக்கும் என்று தீர்க்கமான ஆறுதல் சொல்லி தன் வீட்டிற்குத் திரும்புகிறார்.  அடுத்த நாள் போட்டி துவங்குகிறது. எப்போதும் களத்திலிருந்து அறிவுரை பகரும் அப்பா அப்போது இல்லை, அப்போது ஒரு பிளாஸ் பேக் "எல்லா நேரத்திலும் நான் உன்னுடனே இருக்கப்போவதில்லை. நீயே உன்னைத் தீர்மானிக்கிறாய்”. பயிற்சியாளர் செய்யும் சூழ்ச்சியால் அப்போது தந்தை தனியாக பூட்டி வைக்கப்படுகிறார். மகளின் போட்டியைக் காண முடியாமல் தவிக்கிறார்.


இறுதியில் நாட்டின் தேசிய கீதம் ஒலிப்பதன் 20 டெசிபலுக்கு அதிகமான ஒலியின் தன்மையால் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் தந்தை மஹாவீர் சிங் போகாட் டின் மகிழ்ச்சியை அமீர்கான் வாயிலாகக் கண்டதை நினைக்கும் போது 

இப்போதும் படம் பார்த்து பத்து நாள் ஆன பின்னரும் கண்கள் பூரிக்கின்றன. மயிர்க்கால்கள் கூச்சிடுகின்றன.  தேசிய கீதத்தின் ஈற்றில் பாரத் மாதா கி ஜே எனும் குழந்தை உச்சரிக்கும் வாசகம் இன்னும் நினைவில் பூத்துக் குலுங்குகிறது.

இறுதியாக தந்தையின் வாயிலிருந்து அண்ணன், தங்கை, அக்கா மூவரும் எதிர்பார்த்த கோல்டன் வார்த்தை சபாஷ் எனும் வார்த்தை மேலும் கண்ணில் நீரை வார்க்கிறது.  அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் கான்.


நான் போட்டிகளுக்குச் செல்லும் போது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாகவும் அதன் ஏற்பாட்டின் மீது சமூகம் புறக்கணித்த கணிப்புகளை மீண்டும் சரி செய்ய நான் அவ்வப்போது கொய்த வெற்றிக் கனிகள் தான் மிகுந்த வீரியத்துடன் பேசியவர்கள் வாய்களை அடைத்தது.


- த.க.தமிழ் பாரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக