நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

காற்று வெளியிடைக் கண்ணம்மா...




காற்று வெளியிடை வந்த புதிது எல்லாரும் தூக்கிக் கொண்டாடினார்கள். வரும் முன்னரே பலரும் சிலாகித்திருந்தார்கள். அப்படித்தான் எல்லாரின் கவனக்குவியலுக்கேற்ப படத்தை ஒரு முறை பார்த்திட வேண்டுமென்று ஒரு பின்னரவில் படம் பார்க்கத் தொடங்கினேன். அரை மணி நேரம் உள்ளாகவே ஐந்தாறு முறை கண்ணின் கதவுகளை தாழிட்டுச் சென்றது உறக்கம்.  அதற்குப் பின் காற்று வெளியிடைக்கு இடைவெளி விட்டுவிட்டேன்.

இது புதிதல்ல இரவு 11 மணிக்கு மேல் பார்க்கத் தொடங்கிய நான் அறியாத மலையாள மொழிப் படமான பிரேமம் முதல் 45 நிமிடத்தில் தூக்கத்தின் விலாசத்துக்கு அழையா விருந்தாளியாய் அழைத்துச் சென்றாலும், அதுக்கப்புறம் வந்த சில காட்சிகளின் வீரியத்தால் மழையிடைப் பருகிய தேநீராய் உயிர்ப்பித்துச் சென்றது. அந்த இரவைத் தூக்கமின்றி வைத்தது வேறுகதை. அடுத்த பல மாதங்களுக்குக் தூக்கத்தில் காலிங்பெல் அடித்த காட்சிகள் பிரேமத்தினுடையது.  தூக்கத்தை  வரவைத்த படத்தை மீண்டும் பார்ப்பது கடினம்.

படத்தின் உயர்தர ஒளிப்பேழை கையில் கிடைத்து கிட்டத்தட்ட முப்பது நாட்கள் ஆகிய பின்னரும் அந்தப் படம் பார்க்கப்படாமலே இருந்தது.  ஏனோ, நெருக்கடியாக ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு ஊரில் இருந்திட வீட்டில் இருப்பதே அருகிப் போய்விட்டது. இன்னொரு முக்கியமான விசயம் திறன் பேசியில் பார்ப்பதற்கு வகை இயலாத காரணத்தால் கணினியில் தான் பார்க்க வேண்டிய சூழல் நிலவியது.

இந்நிலையில், காற்று வெளியிடை பற்றிய பேச்சுகள் ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் மீண்டும் காற்று வெளியிடையை சமூகவலைதளங்களில் உயர்த்திப் பிடிக்கத் துவங்கியிருந்தனர் இரு சக்திகள்.  தனா சக்தி & சக்தி நற்பவி. இவர்களிருவர் பதிவிட்டதின் தொடர்ச்சியில் இன்று தான் படம் பார்த்தேன்.
தற்போது படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவிற்கெல்லாம் மனம் இல்லையென்பதால் சுருக்கமாகவே கூறுகிறேன். காற்று வெளியிடை படம் பார்த்தேன்., படம் ஓகே, அலைபாயுதே, ரோஜா அளவிற்கு என்னில் இஃது இல்லையென்றாலும் – சிறப்பு. கால வெள்ளத்தில் கரைந்து போகாத தமிழ் நிலத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத தொலை தூரத்து வேற்று நிலப்பரப்பில் நிகழும் உயர் நவீன காதலை ஸ்கிரீனிங் செய்திருக்கிறார். அசால்ட்டான காதல் வசனங்களும் அருமையான ஒளிப்பதிவும் சிறப்பு.
கூட்டத்தில் பெண்ணை பேச வைத்து அதன் மூலம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் பாணி அலைபாயுதே டெக்னிக். ஆனால், அதே இடத்தில் பேசிய பெண்ணைஅடக்கி ஆளும் தன்மையை கதாநாயகனிடத்தில்  கொடுத்து நோஸ்கட்டிங் பண்ணுபவர் மணிரத்னம் ஜி. எனக்குத் தெரிந்து பேச்சாளர்கள் சில இடங்களில் பேசும் போது,  நிறைய நேரம் இருக்கையில் தாங்கள் ஏற்கெனவே பேசிப் பேசி ஃபில்டரில் தங்கி இருக்கும் காபிதூள் போல வடிந்து வடிந்து இன்னும் சுவை குன்றாதிருக்கும் சில தகவல்களை மீட்டுருவாக்கிக் கூறுவர். அதே தான் இந்தப் படத்திலும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளுக்காக வருடக் கணக்கில் அனுபவிக்கும் துன்பங்களையும்  இயல்புலகிலிருந்து டேக் ஆப் ஆகி அந்நிய உலகில் லேண்டிங் செய்யப்பட்ட விமானம் போல காட்சிப்படுத்தியிருப்பது உலகசினிமாவின் நீட்சி. அது காதலியை தவிக்கவிட்ட தவிப்பிற்காகத் தான் தவிப்பது என்பது நம் சராசரி உளவியலின் வே ஆப் ஆங்கில் படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாகும்.  
முதல் காட்சியில் மிகத்துல்லியமாக அமைந்த இராணுவக் காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. அவதார் படத்திற்கு பின் ஒரு எச்டி படம் இப்படித் தன்னை என்னுள் நிலைநிறுத்தி இருக்கிறது. கடைசியில் அவ்வளவு துல்லியமாக இராணுவக் காட்சிகளையும் வான்வெளிக்காட்சிகளையும் பதிவு செய்துள்ளவர்., ஒரு குற்றவாளியாக பாவிக்கப்படுபவன் செல்லும் வண்டியின் சக்கரத்தில் தோட்டாவைத் தொடுத்து வண்டியின் இதயத்தை நிறுத்தும் சிங்கம் 1 பட டெக்நிக்கை மறந்தது தான் சோகமாக இருக்கிறது.
படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி வசனம், கடைசியில் அந்தக் குழந்தை உன்ன எங்கேயோ ? பார்த்திருக்கேன்னு வருனைப் பார்த்து சொல்றப்போ, உங்கள என தாய்க்காரி லீலா கூறுவது உச்சம். வசனத்தின் வீரியத்திலும் – உளவியலின் தாக்கத்திலும் – இன்றைய தமிழ்ச் சமூக சூழலிலும் சரி இந்த ஒரு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனெனில், தமிழ்ப் பேராசிரியர்களின் பெரும்பிள்ளைகளுக்குத் தற்போது தமிழ் என்பது தன்வாய்க்குள் வர காலம் – சூழல் – பொருளாதாரம் – உலகமயம் என பல டோல்கேட்டுகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.  தில்லி தமிழ்ப் பேராசிரியராகக் காட்சிப்படுத்தப்பட்ட  பாட்டியின் பெரும் பிள்ளை தமிழ் பேசுவதை மருத்துவம் படித்த தாய்க்காரி திருத்துவது தான் உச்சம்.




சரி, படத்தின்  தலைப்பு பற்றிய விவாத்ததிற்கு பச்சை விளக்குக் காட்டுகிறேன்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று

சரி.. இதில் உள்ள காற்று வெளியிடைக்கு என்ன அர்த்தம்?
கவிஞர் மகுடேசுவரன், இப்போது முகநூல் விளக்கத்தை இங்கே அளிக்கிறேன். 
எடுத்த எடுப்பில் இத்தொடருக்குப் பொருள்காண முயன்றால் காற்று வெளி இடுப்புஎன்று கொள்ள நேரும். ஆனால், இது முற்றுத் தொடரன்று.
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்கின்றார் பாரதியார். இடை என்பது இங்கே இடுப்பு இல்லை. இடையில் (நடுவில்) என்னும் பொருளிலும் பயிலவில்லை. ஏனென்றால் வெளியிடைக் கண்ணம்மாஎன்று பாரதியார் வலிமிகுவித்து எழுதியிருக்கிறார். அவ்வாறு வலிமிகுவித்து எழுதியமையால் இடைஎன்பது இங்கே ஏழாம் வேற்றுமை உருபு எனக்கொள்ளல் வேண்டும். ஏழாம் வேற்றுமை உருபென்று கண் என்பதை மட்டுமே கருதியிருக்கிறோம். ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள் உள்ளன. அவற்றுள் இடை என்பதும் ஒன்று.

இங்கே இடை என்பதற்குக் கண்என்ற உருபின் பொருளையே கருதலாம். காற்றுவெளிக்கண் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கண்ணம்மா என்றே பாரதியார் பாடியதன் பொருளை உணரலாம். கண்ணம்மாவின் காதலை எண்ணியபடி காற்றுவெளியில் மிதப்பதுபோன்ற எடையறு நிலையை, மெய்ம்மறந்த நிலையை அடைந்து மகிழ்கின்றேன். இங்கே காற்றுவெளி என்பது தரையில் கால்படாத மிதப்பு நிலையைக் குறிக்கிறது. வான்வெளி எனலாம். அதனால் காற்று வெளியிடைஎன்னும் தொடர்க்கு வானத்திலேஎன்று பொருள் கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு : இன்னும் இயக்குநர் மணிரத்னத்தின் கடல், ஓகே கண்மணி போன்ற படங்களை பார்க்கவில்லை., அதை பார்ப்பதற்கான ஆவலை யாராவது பதிவுகள் இட்டுத் தூண்டுவீர்களாக.
-த.க.தமிழ்பாரதன்
15.08.2017
(முகநூலில் மீண்டும் தென்றலாக பரவிய காற்றுவெளியிடை படத்தின் வீச்சை உணரவேண்டி மதியம் படம் பார்த்து மாலையில் எழுதிய பதிவு )


1 கருத்து:

  1. 'கவனக்குவிப்பு', 'மழையிடைப் பருகிய தேநீர்' போன்ற சொல்லாடல்கள் அற்புதம்! சக்தியின் பதிவுகளினூடே இப்படம் பார்க்க வேண்டும் எனத் தோன்றிய அவாவை உங்கள் வலைப்பூ பதிவு அதிகப்படுத்தியிருக்கிறது. ஓரிரு வரிகள் பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. நன்று!

    பதிலளிநீக்கு