நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 3 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 3

காத்திருப்புக்கு பதில் சொல்லியது மார்ச் 19 நேர்காணல் என வந்த அறிவிப்பு.  நான், நண்பன் சத்தி, அண்ணன் மணிகண்டஹ உட்பட மூவர் சியுடிஎன்-னிலிருந்து தேர்வாகிருந்தோம். இதில் மணிகண்டஹ ஜேஎன்யுவை நிராகரித்ததால் மீதமிருவர் மட்டும் செல்லயிருந்தோம்.  சில நாட்களே இருந்த சூழலில் ஆய்வுச்சுருக்கத்தை முறையாகத் தயாரித்துக் கொண்டுசெல்ல வேண்டும்.

மேலும், இந்திய மாணவர் போராட்டக்களத்தின் ஆதார சுருதியாக விளங்கக்கூடிய ஜேஎன்யுவின் நேர்காணலுக்குச் செல்ல  நன்னடத்தைச் சான்று அவசியமானதாகும். செயற்பாட்டாளர்களாக உருவெடுக்கும் மாணவர்களை முன்பே கணிக்க இது  அவசியமானதென நிர்வாகம் கருதுகிறது போலும்.

தமிழகத்தில் உள்ள கல்லூரி/பல்கலைக்கழகங்களில் என்ன ஆய்வுச்சுருக்கம் கொடுத்துத் தேர்வாகுகிறோமோ., அதையே ஆய்வாகச் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால், ஜேஎன்யுவில் நேர்காணலில் தேர்வாவதற்கான அடிப்படைத் தரவாக மட்டுமே சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கம் அமையும். ஜேஎன்யுவில் சேர்ந்து Coursework முடியும் தருவாயில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கமே முதன்மை.

ஆதலால், நேர்காணலுக்காகத் தற்காலிக ஆய்வுச்சுருக்கம் தயாரிக்க முனைந்தோம். ஜேஎன்யு பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு ஒப்பிலக்கிய ஆய்வையே பெரிதும் மேற்கொண்டு வருவதலால் அதனை முன்னிறுத்தும் சுருக்கத்தைத் தயாரிக்க இருந்தோம். பல்கலை. பாடங்கள்/ முதுகலை, முனைவர் பட்ட ஆய்வுகள் என பல்வேறு வேலைகளுக்கிடையே ஆய்வுச்சுருக்கம் எழுத உதவினார்  நண்பர் ஜவகர்.  இதைப்படி, அதைப்படி என எப்போதும் கூறினாலும் நாட்கள் செல்லச்செல்ல ஆய்வுச்சுருக்கத்தைத் தயாரித்து முடியவில்லை. தன்செலவில் மயிலை-சென்னை,  சென்னை-தில்லி என பயணத்தை உறுதிசெய்துகொடுத்தார். பயணம் உறுதியானாலும் ஆய்வுச்சுருக்கம் இறுதியாகவில்லை.

நாளை சென்னை கிளம்பியாக வேண்டும் எனும் நிலையில் இன்றிரவு நண்பர் ஜவகர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். புத்தகங்களுக்கிடையே வீடு கட்டப்பட்டிருந்தது. அதனுள் மூலப்புத்தகத்தைத் தேடி எடுக்க வேண்டும். நண்பர் சத்திக்கு உடன் கிடைத்த வேலையில், முக்கால் மணிநேர போராட்டத்துக்குப்பின் பெரும் புத்தகங்களுக்குள் அடங்கிக்கிடந்த தாவோதேஜிங் சிறுநூலை அடையாளங்காண முடிந்தது. தாவோதேஜிங் முழுதும் படித்துமுடிக்க 00.00 தாண்டியிருந்தது.

//பொதுமறை அல்ல
பொதுமுறை என்பதே பொருத்தம்...
திருக்குறள்
மந்திரமும் அல்ல
தந்திரமும் அல்ல.
சொல்லப்போனால் அது
சுதந்திரம்.
"மறை"வாக இருக்கும் எதுவும்
பொதுவாக இருக்காது.
"பொது" வான எதுவும்
"மறை"யாக இருக்காது//
என ஆர்.பாலகிருஷ்ணன் இஆப திருக்குறள் பற்றி விதந்தோதியிருப்பார். ஏற்கெனவே திருக்குறள் நாடாளுமன்றம் வரை அழைத்துச் சென்றிருந்ததும் இளம்வயது முதல் உடன்வரும் திருக்குறளைத் தவிர வேறேதும் இலகுவாக இல்லாத சூழலில் தமிழின் திருக்குறளையும் சீனத்தின் தாவோதேஜிங்கும் ஒப்பீடு செய்ய வாய்ப்பாக அமைந்தது.

தாவோதேஜிங்-கை ஒருமுறை ரோபோ ரீடிங் செய்த நண்பர் ஜவகர் உடன் உதித்த ஒப்பீட்டுத் திருக்குறள்களை அடையாளப்படுத்தினார். //பதினோரு பேரு ரெடி, மேட்ச் ஸ்டார்ட்// என்பதைப்போல ஆய்வுச்சுருக்கத்தின் அச்சாரம் கிடைத்த நிலையில் புத்தக மனிதர்கள் குடியிருந்த வீட்டினுள் பின்னிரவு துயில்கொண்டோம். மறுநாள்  தற்காலிக ஆய்வுச்சுருக்கம் விரைவிலேயே நண்பர் சத்திக்கும் தயாராகிவிட்டது.

மயிலை-சென்னை, சென்னை-புதுதில்லி என பயணங்களின் தொடர்ச்சியில் ஹர்சத் நிசாமுதீன்  வந்திருந்தோம். அங்குதான் மொழிப்பிரச்சினை தொடங்கியது. ஓலாவில் ஜேஎன்யு பயணத்தை உறுதிசெய்தும் ஓட்டுநர் மொழி புரியாமல் தவித்தோம். கேட்1, கேட்2 என குழப்பம் வேறு. பிறகு, ஆங்கே இருந்த Ola booking பிரிவில் பதிவு செய்து அவர்களே வழியனுப்ப ஜேஎன்யு பெரியார் விடுதி வந்தோம்.

இங்கு, பெரியார் என்றதும் உங்களுக்குத் தோன்றுவதைப்போல எங்களுக்கும் வினா எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. வட இந்தியாவில் அமைந்துள்ள  இந்தியாவின் மாபெரும் பல்கலை. யின் விடுதிக்கு பெரியார் பெயர் வைத்துள்ளது வியப்பின் உச்சம். ஆனால், ஜேஎன்யுவின் விடுதிகள் அனைத்தும் இந்திய நதிகளின் பெயர்களால் விளிக்கப்படுவதை அறிந்துகொண்ட பின்னர், முல்லைப் பெரியாறு என்பதன் விளியே பெரியார் விடுதி என்பதைத் தெளிவுபடுத்தினர் சீனியர்கள்.

அச்சமயம் மதியம். ஆய்வு தேடி வந்தவர்கள் உணவுதேடி சென்றோம் தமிழ்ப்பிரிவிற்கு. பத்துநாள் பயிலரங்கின் எட்டாவது நாள். தமிழறிஞர்களின் உரைகளுக்கிடையே உணவும் ஈயப்பட்டது. மாலைக்கு மேல் பெரியாரில் விசய் அசண் அறையில் ஓய்வெடுத்தோம். அன்றிரவு சட்லஜ் விடுதியின் விடுதிநாள் என்றுநினைவு. நன்றாக உண்டுவிட்டு டிஜே ஆடிக்கொண்டிருந்தனர்.  பின்னிரவு தூங்க, அடுத்தநாளும் பத்தாம்நாள் பயிலரங்கில் கழிந்தது. பாரதிபுத்திரன், கோ.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்களின் உரைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. அதிலும் மாமல்லபுரம் சிற்பங்களை இலக்கியத்துடன் ஒப்பிட்டு உரைநிகழ்த்திய பாரதிபுத்திரன் இங்கு நினைவுகூறற்குரியவர்.

அன்றைய மாலை மார்ச் 18, நிறைவு விழாவில் அங்குள்ள மாணவ/பேராசிரியர்களின் மேடை உரை வெளிப்படையானதாக  இருந்தது,  புகழுரைகளில் தத்தளிக்கும் தமிழகத்திலிருந்து வந்த எங்களுக்கு வியப்பாக இருந்தது.

அன்றிரவு ஜீலம் விடுதியின் மூன்றாம் மாடியில் தனபால் அறையில் அருண் பிழைதிருத்த பெரும்பான்மையானோர் கூடியிருந்தனர். பின்னிரவு முடிந்த தற்காலிக ஆய்வுச்சுருக்கத்தின் ஒழுங்கமைப்புப் பணியால் தூங்க நேரமானது.

காலை மார்ச் 19,  இரண்டு இடங்களுக்கான நேர்காணலுக்கு ஐவர் வந்திருந்தோம். தமிழ்ப்பிரிவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில்(2) இடங்கள் இருந்தன. இதே Philosophy துறையில் 16க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.

நான்காவதாக நேர்காணலுக்கு சென்றிருந்தேன். சான்றிதழ் கிடங்கிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ஓரிலக்க சான்றிதழ்களை  மட்டும் காட்சிப்படுத்தினேன். விளம்பரமாக அவை தோன்றியிருக்கலாம். சொல்லப்போனால், கடந்தகாலத்தின் நிகழ்கால விளம்பரங்கள் தான் அவை. இது ஆய்வுக்கெப்படி உதவும் என்றெல்லாம் தோன்றவில்லை. அடையாளப்படுத்தலுக்கு வேண்டுமெனில் உதவுமெனத் தோன்றியது.

எதிர்பார்த்தது போலவே, இயற்பியல் பிறகு செவ்வியல் தமிழ், இப்போது சீனம் "என்ன சம்பந்தமில்லாமலே இருக்கே" என்றார்கள். "செவ்வியல் ஆய்வு தான் செய்வீர்களா? நவீன ஆய்வுகள் தான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்விக்கு "நவீன இலக்கியங்களில் ஆய்வு செய்யமாட்டேன் என்றெல்லாம் இல்லை, ஆனால், செவ்வியலில் சிறப்பாகச் செய்வேன்" எனச் சொல்லுமளவு முதிர்வு அப்போது இல்லை.

2ஆம்வேற்றுமை(உருபு)த் தொடர் ஒன்று சொல்லச் சொன்னார்கள். "உணவைச் சாப்பிட்டான்" என்றேன். அதைத் தொகைப்படுத்தச் சொன்னார்கள். தொகைப்படுத்த என்ற சொல்லுக்கு மிகச்சரியான புரிதல் சட்டென்று வராத சூழலில், சான்று ஒன்றை  கேள்விகேட்டோர் பகர உடன் "உணவு சாப்பிட்டான்"என்றேன்.

குலுக்கல் முறையில் ஒரு தலைப்பு வந்தது தொல்காப்பியம். நேர்காணலில் கேள்விகேட்போரில் துறைசாராத மூன்றாம் நபர் தமிழ் தெரியாதவராக இருந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் தொல்காப்பியம் பற்றி விளம்பினேன். அங்கிருந்த தேநீர்க்கோப்பையைச் சுட்டி இதில் என்னவிசை செயல்படுகின்றதென ஒருகேள்வி வைக்கப்பட்டது. இரண்டாண்டுகட்கு முன்பு நினைவின் செல்லரித்துப்போன இயற்பியலை தூசுதட்டி துரிதமாய் தந்த மூளையை இன்னும் எண்ணி வியக்கிறேன். ஆனால், //இதனுள் இது செயல்படுகிறதென காரல் மார்க்ஸ் இதில் குறிப்பிட்டுள்ளார்// என கொடுக்கப்பட்ட விளக்கங்கள் எதிர்பாராதவை.

உடல் ஒத்துழைக்குமா? இத்தனை சான்றிதழ்களை பார்த்தால் UPSC தேர்வுக்கு தயாராகுபவர் போல் இருக்கிறதே? போன்ற கேள்விகளை பதிலளித்து முடிக்க இருபது நிமிடங்களைக் கடந்துவிட்டது. 24 நிமிடங்களுக்குப்பின் நன்றி சொல்லிவிட்டு வெளிவர தமிழ்தெரியாத மூன்றாம் நபருக்கு தன்யவார் சொல்லி வெளிவந்திருந்தேன்.

மதியம் வரை காத்திருக்க வேண்டாம், இல்லம் செல்லுங்கள் முடிவுகள் உரிய பொழுதில் இணையத்தில் அறிவிக்கப்படும் என்று கூற கலைந்தோம். மதிய உணவுண்டு மாலை புதுதில்லிக்கு விடைகொடுக்க இந்திராகாந்தி விமானநிலையத்தில் பயணம் உறுதியானது. அடுத்தநாள் மாலை சியுடிஎன் இல் நிகழவுள்ள ஆரம்ப்பா-18 நிகழ்விற்காக பறக்கத் தயாராயிருந்தேன். மொக்கைக் கவிதைகள் எழுதி முன்னிரவில் சென்னை மீனம்பாக்கம் வர, சாலையில் குடந்தை நோக்கிவந்த விரைவுப் பேருந்திலேறி கண்ணயர விடிந்திருந்தது.

-தக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக