நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2015ஆம் ஆண்டுப்பெட்டகம்

2015 ஆம் ஆண்டு என் வாழ்வில் பல திருப்பங்களை கொடுத்தது.
“இது என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக அமையட்டும்.
வருகின்ற 2015 புத்தாண்டு இதை விட சிறப்பாக அமையட்டும்”
என்று இயம்பிய சென்ற ஆண்டு இது. எழுத்துகள் சிறப்பாகவே என் பயணத்தை நிலைநிறுத்தியது.

என் வாழ்வின் பல சறுக்கல்கள் சந்திக்கப்பட்டும், நிந்திக்கப்பட்டும் இருந்தது இந்த ஆண்டில். இதை விரும்பியே ஏற்றேன். அதில் பாடங்களும் கற்றேன்., அதனுழி படங்களும் எடுத்தேன்.

என் வாழ்க்கையின் மாபெரும் முன்னேற்றங்களை அள்ளித் தெளித்த ஆண்டு. பல புதிய அனுபவங்களைக் கொடுத்த ஆண்டு. எல்லாருக்கும் கிடைத்திடாத பலவற்றை களித்திட்ட ஆண்டு.

கால வரிசைப்படி :
ஏப்ரல் :
முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்திருந்தேன்.
இரவீந்திரன் சித்தப்பாவை சென்னையிலிருந்து புதுதில்லிவரை அழைத்துச்செல்லும் பொறுப்பு அது. இரண்டரை மணிநேரம் பூமிக்கும் எனக்கும் தொடர்பில்லா வான்வெளியில் பயணித்தது என்றும் நினைவிற்கொள்ளத்தக்கது.
நாடாளுமன்றத்திற்கு முதல்முறை சென்றது. மக்களவை, மாநிலங்களவை, நிதிமசோதா தாக்கல் செய்யும் அவை என நாடாளுமன்றத்தின் மூன்று அவைகளையும் சுற்றிப்பார்த்தேன். காரணம் அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழவில்லை. இதனால், அவைப்பகுதிகளுக்குள்ளேயே சென்று பார்வையிட முடிந்தது.

இரவீந்திரன் சித்தப்பா ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் சுற்றுலாப் பயணத்தால் தில்லியின் லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட், காந்தியடிகள் நினைவிடம், குதுப்பினார்,  போன்ற இடங்களுக்குச் செல்ல முடிந்தது. அதில் மிகவும் அதிசயித்தது அக்‌ஷர்தாம் கோயில். இந்தியாவின் பண்பாட்டை இருபத்தோராம் நூற்றாண்டியில் நிலைநிறுத்தியிருக்கும் அந்தக் கோயிலின் அழகிய அர்த்தமுள்ள கட்டமைப்பு.

ஜூலை மாதம் :
விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பணி நிறைவடைந்தது. 2014 ஜூலை முதல் 2015 ஜூலை வரை சிறப்பாக ஊடகத் துறையில் இயங்கியதற்காக “சிறந்த மாணவப்பத்திரிக்கையாளர்” சான்றினை விகடன் குழுமம் எனக்களித்தது. விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் தமிழ்/ஆங்கிலம் என இரு மொழியிலும் தனித்தனியாக அச்சான்றைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று காலை விகடன் பாராட்டுச்சான்று பெற்று உடனடியாகக் கிளம்பிவிட்டேன். அங்கிருந்து முதன்முறையா காஞ்சித் தலைவன் பிறந்த மண்ணுக்குப் படையெடுத்தேன். அண்ணா அரங்கில் எல்லாருக்கும் பரிமாறப்பட்ட “முகநூல் வேந்தன்” விருது எனக்குக் கிடைத்திருந்தது. தொடர்ச்சியான என்னுடைய முகநூல் செயல்பாட்டுக்கும், நான் வெளியிட்டு அதிகம் பகிரப்பட்ட காதலர் தின காணொளிக்கும் அது கிடைத்திருந்தது.

செப்டம்பர் மாதம் :
ஆகஸ்ட் மாதத்தில் திருவாரூர் மாவட்ட அளவில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் முதலிடம் பெற்றதால், அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த மாநிலப் போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். அதில் மாநில அளவில் நான்காம் நிலை வெற்றி அதாவது, ஆறுதல் பரிசு பெற்றேன். செப்டம்பர் 15 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் மு.கருணாநிதி அவர்கள் பரிசு தந்திருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனை, தமிழ்நாட்டின் பல்லாயிரம் உடன்பிறப்புகளின் உற்ற தோழனை அவனது குகைக்குள்ளே சென்று வாழ்த்து பெற்றது பசுந்தோல் போர்த்திய நினைவுகள்.

அக்டோபர் மாதம்:
இராமலிங்கர் பணிமன்றத்தின் பொன்விழா ஆண்டு. மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த போட்டியில் தஞ்சாவூர் மண்டல அளவில் கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்றிருந்தேன். “உனக்கு நீயே ஒளியாவாய்” எனும் தலைப்பில் நடைபெற்ற அக்கவிதைப் போட்டியில் மரப்புக்கவிதையில் குறள்வெண்பா நடையில் எழுதியிருந்தேன். பத்துநாட்கள் சென்னை மயிலாப்பூர் ஏ.வி.எம் மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்வில் மூன்றுநாட்கள் கலந்து கொண்டேன். கண்ணில் பார்வை குன்றியிருந்த அந்நாட்களில் தனியாக அச்சூழலை எதிர்கொண்டது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. அந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் மணிவிழா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
திசம்பர் மாதம் :
பன்னெடுங்காலமாக ஆவலாக எதிர்பார்த்த நாடாளுமன்றப் பயணம் இந்த ஆண்டு நிறைவேறியது. ஏப்ரல் மாதம் - திசம்பர் மாதம் என இரண்டு மாதங்களிலும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஒன்று கோடைக் காலம். மற்றொன்று குளிர்காலம். குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதையும் நேரில் நோக்க முடிந்தது.

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்குடிமகன் இருக்கும் இராஷ்ட்ரபதிபவன் - குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவரோடு படமெடுத்துக் கொண்டோம். மேலும், ஜனாதிபதி விருந்து ஏற்றுக்கொண்ட முதல்முறை இதுவே. (இனி எத்தனை முறை பெற்றாலும், முதல் முறை பெற்றதை மறக்க இயலாது). அதோடு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  உட்பட பல எம்பிக்களை அவர்தம் இல்லத்தில் சந்தித்தேன். 

அக்‌ஷர்தாம் கோயில் மடாதிபதியோடு பேசினோம். பின் மாலை வேளையின் நீர்க்காட்சி அமைப்பு கண்டு அதிசயித்துப் போனேன். இந்தியாவின் நவீனம் மிகச் சிறப்பாக இவ்வளவு கட்டமைப்பாக இருக்கும், அது சாத்தியமே என்பதை உணர்த்தியது அந்த நீர்க்காட்சிகள்.

இந்தாண்டின் இறுதியில் சொல்லவருவது என்னோவெனின்,

நிச்சயிக்கப்பட்ட வெற்றியை விட நிதர்சன வெற்றியை கொண்டாடுகிறேன். அதன் வழி ஊடுருகிறேன். பயணப்படுகிறேன்.

இந்த 2௦16ல் நேர மேலாண்மை முக்கியப்பங்கு வகிக்க வழிகோலட்டும். நிகழாண்டு ஏப்ரல் வரை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், என் கல்லூரிக்கும் எனக்குமான இறுதி நாட்கள். இதை உணர்வு ரீதியாக எதிர்கொள்ளுதல் எதிர்காலத்தின் ஏற்றத்திற்கு உதவும்.

இந்த மே மாதத்துக்குப் பின்னான செயல்பாடுகளால் எதிர்கால நிலைகள் மாற்றம் கொள்வது உறுதி. (ஏனெனில் எனது இளமறிவியல் இயற்பியல் படிப்பு நிறைவுறுகிறது). அதனையே எண்ணிக் காத்திருக்கிறேன். அந்த மாற்றமே என்னை பரிமாணத்திற்கான பிரதிநிதியாக அழைத்துச்செல்லும்.

எப்படியாயினும் சென்றதை விடவருவது ஒரு மடங்கு மேலிருப்பதை எல்லாரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான்.

வரும் இரண்டாண்டு நிறைவு; நூறு மடங்கு வளர்ச்சி.
த.க.தமிழ் பாரதன்
Tamil Bharathan
சென்ற 2014 ஆண்டின் பதிவு
http://bit.ly/2C10FsS

1 கருத்து: