நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 24 ஜூலை, 2019

அபாயச் சங்கிலியும் அபயமும் ! (பயணக் கட்டுரை)

22 ஜூலை 2013

கல்லூரி சேர்க்கை போட்டு., கல்லூரி செல்லத் தொடங்காத 17 வயது நிரம்பிய மீசைக்கு ஆசைப்பட்ட இளைஞன்.

மைக்ரோமேக்ஸ் ஆண்டெனா வச்ச போன்,
அதுல மொத்தம் 60-80 தொடர்பு எண்கள்
கழுத்துல என்சிசி ஐடி கார்டு
சின்ன டைரி அதுல ஒரு 16 போன் நம்பர்
ஒரு பை அதுல ரெண்டு செட் துணிகள்
500
ரூ கிட்டத்தட்ட கையிருப்பு

இவற்றோடு அன்றைய பயணம் துவங்கிற்று. சோழன் விரைவு வண்டியை மயிலாடுதுறையில் பிடித்த போது, இரயில் கூட்டத்தால் உள்ளீடதிகம் இருந்தது. ஒரு வழியாக சிதம்பரம் தாண்டுவதற்குள், சராசரி இந்தியக் குடிமகனின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் சிம்மாசனமான Luggages onlyஇல் அமர்ந்து கொண்டதும் பெருவேகமெடுத்தது இரயில்.

ஒரு கான்ஸ்டபிள் உட்பட என்னோடு சேர்த்து மூவர் மேலே அமர்ந்திருந்தோம் பைகளோடு. கடலூர் தாண்டிய பின்னர் கான்ஸ்டபிளின் போனில் சார்ஜ் இல்லை என்பதால் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசினார்  எல்லா இரயில் பயணம் போலவே இயல்பாகத் தான் இருந்தது. அது நடக்கும் வரை....

விழுப்புரம் கடந்து திண்டிவனம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பேரணி எனும் நிலையத்தை தாண்டி 100மீ தொலைவு சென்றிருக்கும். இரயில் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்கியது. எதிரிலிருப்பவருக்காகக் காலை ஒடுக்கி உட்கார்ந்ததில் காதில் மாட்டியிருந்த இயர்போன் கையிலிருக்க, வாலிபாலை விட மோசமாக அங்கிங்கு மாறி ஜன்னலின் வழியே வெளியே விழுந்திட்டது மைக்ரோமேக்ஸ் ஆண்டனா போன்.

ஏதோன்றும் செய்வதறியா நிலையில்,  அபாயச் சங்கிலியை இழுக்க கைகள் நீண்டன. சக பயணிகளான பொதுமக்கள் எல்லாம் ஏதொன்றும் அறியாது பதறிப்போய், அபாயசங்கிலியைப் பிடித்து, நிறுத்துவதற்குள் எனைத் தடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பைப் புறக்கணித்து அபாயச்சங்கிலி இழுத்தபின், செருப்புகூட போடாமல், வேகமாக இரயிலில் இருந்து குதித்தன கால்கள்.(எப்பாஆ எம்மாம் உயரம், நடைபாதையில ஏறி ஏறி, முதல் முறையா நேரடியா தரையில இறங்குனப்ப அம்மாம் உயரம்).

கடைசியில் உள்ள பொதுப்பெட்டியில்(Unreserved) ஏறியதால், உடனே செல்போனை எடுத்துவிடலாம் என்ற எண்ணம். இரயில் கார்டு "என்னப்பா, எங்க ஓடுறே" எனக் கேட்க,"இதோ வந்துடறேன்" என திரும்ப கூட பார்க்காமல் வேகமாக ஓடினேன். இரயில் வந்த பாதையில் போனைத் தேடிய போது, இரயில் செல்லட்டும் பிறகு கடக்கலாம் என, கிடாரிகளை நிப்பாட்டி வைத்திருந்தவர், "தம்பி என்ன தேடுறே.... இரயிலு அந்த டிராக்குலருந்து வந்துச்சி"ன்னு சொல்ல உடனே அங்க ஓடுனேன்.

கீழ பார்த்தா செல்போன் மேல்பாகம், கீழ்பாகம், பேட்டரி எல்லாம் தனித்தனியா கொஞ்சம் எட்டி எட்டி கிடந்தது (ஓடுற இரயிலில் இருந்து விழுந்ததால்). எல்லாத்தையும் கையில எடுத்துட்டு திரும்பிப்பார்த்தால், நான் வந்த இரயில் இரண்டு கி.மீ தாண்டி சென்றுகொண்டிருந்தது. அப்போது தான் தமிழ்த்திரையுலகின் தொட்டுதொடரும் மோசமான அறிவிலி காட்சிப்படுத்தலை மனதார திட்டித் தீர்த்தேன். படங்கள் வழியே பெரும்பாலான வாழ்க்கைப் பாடங்களை கற்க நேர்கிறது. பொதுவாக படங்களில் யாராவது அபாயச்சங்கிலி பிடித்திழுத்தால் இரயில் கார்டு வந்து அபராதம் வசூலிப்பார். பின் வண்டி செல்லும் என்பதே மனதில் பதிந்தது. அந்நிகழ்விற்கு பின் படத்தை பார்ப்பதோடு இரசித்து மட்டும் விடுவதென முடிவு செய்துவிட்டேன். 

எப்போதோ பேசியில் சேமிக்கப்பட்டிருந்த இரயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு "அபாயச்சங்கிலி இழுத்துவிட்டேன், உடைமைகள் யாவும் இரயில் செல்கின்றன" என சொன்னால், அது கேரளா எண்ணாம், அவர்கள் தந்த தமிழக எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக பேரணி இரயில் நிலைய அதிகாரியைச் சந்திக்கச் சொன்னார்கள்.


அங்கு செல்வதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு. துண்டித்தேன். மீண்டும் அழைப்பு
"என்னம்மா(கடும் அமத்தலுடன்)".,
"எங்கே போயிட்டுருக்கே"
"ஏன், திண்டிவணம் போகப்போகுது வண்டி"
"சரி சரிபா"
அழைப்பு துண்டித்தேன்., இரயில் நிலைய அதிகாரியைச் சந்திப்பதற்குள் அடுத்த அழைப்பு அம்மாவிடம்,

"ஒண்ணுமில்லே, நீ இரயில்ல இருந்து கீழ குதிச்சுட்டன்னு சொன்னாங்க, அதான்"
"ஓஓ! தெரிஞ்சிட்டா, கவலைப்படாதே நான் பாத்துக்கறேன், பத்துரமா வந்துடறேன்" என பலவாறு தேற்றி போனை வைத்தேன்.

பேரணி இரயில் நிலைய அதிகாரி பின், இரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். திண்டிவனத்திலிருந்து வந்த அவர்கள், பேரணியிலிருந்து அழைத்துச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் எனக்கு முன்னும் பின்னும் காவலர்கள் அமர திண்டிவனம் சென்றோம். இரண்டு நாட்களில் திண்டிவனம் இரயில் நிலையத்திற்கு.மீண்டும் வரவேண்டும். விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அபராதம் ரூ.500 செலுத்த வேண்டும் என்றனர். ஜாமீன் கையெழுத்து இட்டதும் விடுவித்தனர். (நான் திண்டிவனம் அடைவதற்கு முன்பே கல்லூரி மாணவர்கள் சிலர் குழுமியிருந்தனர். அவர்கள் எனக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள். கல்லூரியில் பணியாற்றும் யாரோ தகவல் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த யாரோ-வுக்குத் தகவல் சொன்னது அம்மா, அப்பா. அந்த இளைஞர்கள் கையெழுத்திட்டதும் காவலர்கள் விடுவித்தனர்)

(குறிப்பு: 
உயிர் பிரச்சினை என்றாலோ, ஆபத்து என்றாலோ, ஐந்திலக்க ரூபாய் மதிப்பிலான பொருட்களாக இருந்தாலோ, அபாயச்சங்கிலி இழுத்தமைக்கு அபராதம் கிடையாது . இது இரயில்வே பாதுகாப்புப் படையினர் சொன்ன தகவல். மற்றபடி தனிப்பயன்பாட்டிற்காக அபாயச்சங்கிலியை இழுப்பது இந்திய இரயில்வே சட்டத்தின் 141வது பிரிவின் படி  குற்றமாகும். இதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். உரிய காரணங்களிருப்பின் ரூ.500யாகக் குறைக்கப்படும். 

பேரணி நிலையத்தை மெதுவாகக் கடந்து வேகமெடுக்கையில் அபயாச்சங்கிலியை இழுத்ததால் இரயிலுக்கு ஏதும் சேதமில்லை. இதே இரயில் பெருவேகமெடுத்துச் செல்லுகையில் அபாயச்சங்கிலி இழுக்கப்படின் இரயில் தண்டவாளத்தை விட்டே வெளியேறிவிடும் சூழலுள்ளது.  இரயில் சக்கரம் - தண்டவாளம் இரண்டுமே ஒரே தனிமம் ஆதலின் ஓரினக்கவர்ச்சி விசையின் காரணமாக  Break அடித்தவுடன் உடனடியாக நிற்காது. சற்று நேரமாகும். 110 கி.மீ வேகத்தில் செல்லும் வண்டி அபாயச்சங்கிலி இழுத்தவுடன் நிற்க 3-4 நிமிடங்களாகலாம். 

மேலும், தனிப்பட்ட ஒருவரின் அபாயச்சங்கிலி இழுப்பால் உடன் பயணிக்கும் மொத்த பயணிகளுக்கும் நேரத்தாழ்ச்சி ஏற்படுகிறது. அதோடு இந்த இரயில் சென்றால் தான் செல்லமுடியும் எனவுள்ள Connection இரயில்களின் பயணமும் பாதிப்புக்குள்ளாகும். இது அழகிய வலைப்பின்னலில் சிக்கலை ஏற்படுத்தும், ஆதலின் பெரும்பாலும் அபாயச்சங்கிலி இழுக்காமல் சூழலை கைக்கொள்வது நல்லது)

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பின், சென்னை வந்தேன். சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அலுவலக அதிகாரியிடம் என் செருப்பு முதற்கொண்டு எல்லா உடைமைகளையும் ஒப்படைத்துச் சென்றார் இரயில் பயணத்தில் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசிய கான்ஸ்டபிள். அவர்தான் என்பையிலிருந்த சிறுடைரியிலிருந்து எண் எடுத்து எனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தவர். தன் வீட்டில் தொடர்பு கொண்டு என் எண்ணை அறிந்து என்னிடம் பேசியவர் (அவர் போனில் சார்ஜ் இல்லாததால் இவையாவும் பிறர் போனிலே செய்திருக்கிறார் என்றறிக. 2013இல் இரயிலில் எல்லா பெட்டிகளிலும் சார்ஜ் ஏற்றும் வசதி செய்துதரப்படவில்லை என்பதறிக)

எழும்பூர் வந்ததும் சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். உறவினரனைவரும் பதட்டத்தில் இருக்க, நான் ஏதும் ஏடாகூடமாய் முடிவெடுக்கக் கூடாதென பரிவாகவே நடந்தனர். ஏனெனில் சித்தப்பாவை அடுத்த நாள் காலை ராஜதானியில் வழியனுப்ப வந்தவன். என்னை பாதுகாக்க அவர்கள் ஆவடியிலிருந்நு எழும்பூர் வந்திட்டார்கள். இரவு 12 மணி அவர்களோடு ஆவடி செல்லும்போது. காலை 04.30க்குலாம் மீண்டும் கிளம்பி சென்ட்ரல் வந்தாச்சு.

அன்றைய அல்ட்ரா டீலக்ஸ் வண்டியில் ஊருக்கும் திரும்பியாயிற்று.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப்பின்,

25 ஜூலை 2018

கையில் பெட்டி, உணவு
ஸ்மார்ட்போன்
அதில் நான்கிலக்க எண்ணிக்கையில் தொடர்பு எண்கள் என 22 வயது கன்னத்து மயிர் முளைத்த இளைஞன் இப்போது! இந்த ஐந்தாண்டுகளில் தான் எவ்வளவு மாற்றங்கள்! ஐந்தாண்டுகளுக்குப் பின் இப்போது தான் சோழன் விரைவு வண்டியில் சென்னை செல்கிறேன்.

ஒரே ஒரு வேறுபாடு :
2013இல் டெல்லிக்கு வழியனுப்பும் பொருட்டு சோழனில் பயணம்.
2018
இல் டெல்லிக்குச் செல்லும் பொருட்டு சோழனில் பயணம்.

-தக
25.07.2018

(தனித்தமிழார்வலர்கள் பொறுத்தருள்க மீஆங்கிலப் பயன்பாட்டிற்காக)

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 4


மார்ச் 20
ஆரம்ப்பா – 18 நிகழ்வு நல்லபடியாக தீபக் கிருஷ்ணனுடன் சேர்த்து அரங்கேற்றினேம். (நிகழ்ச்சிச்சுட்டி https://youtu.be/X-lr2axe2Ig). ஆனால்அரசியல் வயப்பட்ட பகடி நிகழ்வாகிப் போனதால்மாணவர்களிடையே வரவேற்பையும் நிர்வாகத்தில் இருக்கும் பேராசிரியர்களிடத்தில் எதிர்ப்பையும் பெற்றுக்கொடுத்ததுஒரு பேராசிரியர் நேரடியாகவே, “உன்னிடம் இதுபோல் எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்இதற்கொரு காரணம் என்னவெனில்தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மேடையில் அரங்கேறும் நிகழ்வுகள் யாவும் முன்னமே விழாக்குழுவினரால் ஒப்புதல் பெற்றாக வேண்டும்ஆனால்எங்கள் தென்றல் ஆர்மி எப்போதும் அப்படிச் செய்ததில்லைநேரடியாக மேடை தான்ஏனெனில்மேடையேறும் முன்னர்வரை என்ன வெளிப்படுத்தப் போகிறோம் என்பது எங்களுக்கே தெரியாது.  மேடையேறியபின் மாறிய ஸ்க்ரிப்ட்களும் உண்டுஅதுவே அடையாளமாகிப் போய்விட்டதும் கூட.
சரிஜேஎன்யு விற்கு வருவோம்நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினசரி ஜேஎன்யு பல்கலைக்கழக இணையத்திற்குத் தவறாது வருகை புரிந்தால்மாணவர் சேர்க்கை குறித்த எந்தப் பதிவும் இடம்பெற்றிக்காதுஆனாலும்ஏதுமற்ற வானத்தில் எதையோ நோக்கும் ஏது இலார் போலநோக்கிக்கொண்டிருந்தேம்இன்று வரும்நாளை வரும்அடுத்தவாரம் வரும்அடுத்தமாதம் வரும் என நாட்களின் எண்ணிக்கை மூன்றிலக்கத்தையே தொட்டுவிட்டது.
இதற்குள்ளாக,  முதுகலைத்தேர்வுகள் முடிந்து, “ஐங்குறுநூறு நெய்தல் திணை (175-200) : எழுத்துசொல்லிலக்கண ஆய்வு” ஆய்வேடு முடிந்துபல்கலைக்கழகமே முடிந்து விடுமுறையே முடிந்துவிட்டதுகேட்பதற்கு ஒன்று போதும் என்றாலும் இரண்டு இருக்கும் செவியைப்போலஎதற்கும் இருக்கட்டும் என்றுசேரவிருப்பமில்லையெனினும் திருவாரூர் சியுடிஎன்-இலும் முனைவர்/ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேம்மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பொதுநுழைவுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்(37%)  பெற்றிருந்தேம்இருப்பினும்,  50%க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கே சேர்க்கை நிகழும் என எங்கோ ஒரு ஏசி அறையில் கல்வி வல்லுநர்கள்(!) எடுத்த முடிவில் அந்தக் கல்வியாண்டில் சியுடிஎன் தமிழ்த்துறையில் மொத்தம் இரண்டு மாணவர்களே JRF ஒதுக்கீட்டின்கீழ் இணைந்தனர்மீதமிருந்த பெரும்பாலானோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் படையெடுத்தனர்.

இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்ட சேர்க்கைக்கான அறிவிப்பு வந்திருந்ததுசென்னைப் பல்கலையில் இரண்டு துறைகள் உள்ளனஒன்று இலக்கியத்துறைமற்றொன்று மொழித்துறைமொழித்துறைக்கு விண்ணப்பித்திருந்தேம்மெரீனா வளாகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றதுமதியத்திற்கு மேல்நேர்காணல் என அறிவிப்பு வந்ததுஅன்றைய தினம் இராணிமேரி கல்லூரியில் எம்ஜிஆர் பேச்சுப்போட்டியைத் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியதால்அங்கு சென்று நண்பர்களைப் பார்த்து பேசிமதிய உணவு முடித்தேம்.
மதிய உணவுக்குப் பின்னான நேர்காணல் சென்னைப் பல்கலைமொழித்துறைத் தலைவர் அறையில் நிகழ்ந்ததுமுகநூல் வழியே அடையாளந்தெரிந்த பேராசிரியர் சிலர் உள்ளிருந்தனர்சான்றிதழ் சரிபார்ப்பில் இயற்பியல்செம்மொழித் தமிழ் போன்றவை குறித்த வினாக்கள் எழுப்பி யிருந்தனர்காலை நடைபெற்ற எழுத்துத்தேர்வின் பிழைகளுக்கான காரணம் கேட்டறிந்தனர்எல்லாம் முடிந்தபின், ’நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்சேர்வீர்களா ?’ என்ற கேள்விக்கு ஜேஎன்யு முடிவுகளுக்குப் பின்னரே இதற்கு பதில்கூற இயலும் எனக்கூறதேரின் கடிதம் வீடடையும் என்றனர்.

விடைபெற்றுவிடுமுறை நாட்களை எண்ணி எண்ணிக் கழியாதுமொத்தமாய்க் கழித்த வேளையில்நெட் தேர்வு வந்ததுதமிழ்வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை முகாம் வந்தது. 2017ஆம் ஆண்டு துறைக்கு வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், 2018-19ஆம் கல்வியாண்டு தொடக்கத்திலேயே (ஜூலை 16-22) முகாம் நடத்தப்பெற்றதுமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏழுநாள் நிகழ்ந்த முகாம் இதுவரை கலந்துகொண்டதிலேயே மிக ஆர்ப்பரிப்பான முகாமாகும்ஏழுநாளும் கலைகட்டியதுகீழடிமீனாட்சி அம்மன் கோயில் எனக் களப்பயணம்புலவர் இளங்குமணன் அவர்கள் உள்ளடங்கிய ஆளுமைகளின் பயிலரங்குகள் மிகப்பயனுடையாதாக இருந்தது. மாலை நடைபெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் முகப்புத்தகத்திலும் மின்னரட்டையிலும் நேரம்தொலைத்த என்னைபோன்றவர்களுக்கு மிகப்பிடித்தமானதாக இருந்தது.
ஜூலை 20
மாலை ஆறுமணிக்கு கூட்ட அரங்கில் நிறைவு அமர்வு நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல ஜேஎன்யு இணையத்தை பார்வையிட, முடிவுகள் வந்திருந்தன. இணையத்தைத் தீர்க்கமாகப் பார்க்க ஆர்வமிகுதியில் உலகத்தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினால், ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளோம் என வரவேற்றது. அதுகாறும் உடனிருந்து பயணிக்க வைத்த யாவருக்கும் தேர்வான விடயத்தைக் குறுக்கும் நெடுக்குமாகச் சொல்லிமுடிக்க மணிமுள் ஒருவட்டம் அடித்திருக்கும்.

இரவு உணவுக்குள் இனிப்பும் சேர்த்து பகிர்ந்திடலாமென மதுரைத் தம்பி ஹரிபாலா வுடன் மதுரை சுற்றினால், எல்லாம் விலை உயர்வாகவிருந்தது. ஒருவருக்கெனில் வாங்கிக்கொடுத்திடலாம், ஒவ்வொருவருக்குமெனில் என்னசெய்யலாமென யோசித்து இனிப்பு மிட்டாய் பாக்கெட்டுகள் சிலவற்றை வாங்கினால், அந்த ஊரில் அதிகபட்ச சில்லரை விலை என்னவாக இருக்கிறதோ அவ்விலையில் தான் கொடுப்பார்களாம். அது தான் நிரந்தரவிலையும் கூடவுமாம். இத்தனைக்கும் அது சூப்பர் மார்க்கெட் வேறு.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட்த தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்” என கண்ணகி தன் ஊரை அறிமுகப்படுத்தியதும், உயிர்நீத்த பாண்டிய நெடுஞ்செழியன் நினைவுக்கு வர, ஊர்ப்புராணங்கள், எப்படிலாம் விலை குறைப்பாங்க, எத்தனை சதவீதம் குறைப்பாங்கனுலாம் சொன்னாலும், அந்த சூப்பர்மார்க்கெட் விலைக் குறைப்பதாகத் தெரியவில்லை. அதைநீங்கினால் வேறிடம் தொலைவென்பதால் வேறுவழியின்றி அதிகபட்ச சில்லறை விலைக்கே மொத்தமாக வாங்கித் திரும்பினோம்.
  சியுடிஎன் தமிழ்த்துறையில் சேருவதற்கு ஆற்றுப்படுத்திய தமிழ்ப் பல்கலை. அண்ணன் சிவக்குமார் ஜேஎன்யுவிற்குத் தேர்வான விடயமறிந்து அன்றிரவு உறக்கத்திற்கு முன் பொதுவுடைமைப் புத்தகம் வாங்கிப் பரிசளித்தார். இரண்டுநாட்களில் விடைபெறும்முன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் விஜயராகவன், மதுரை உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், தமிழ்ப் பல்கலை. மேனாள் துணைவேந்தர் ம.திருமலை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் கலப்புப் படிப்பு (Cross major) + ஆய்வுப்போக்கு குறித்து மேலும் நெறிப்படுத்தினர். நிறைவுநாள் சான்றளிப்பு விழாவில்  வீரயுகநாயகன் வேள்பாரியை மறுவாசிப்புக்குட்படுத்தியவரும்  இன்றைய மதுரை மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெ யிடம் ஜேஎன்யு மாணவர் அறிமுகப்படுத்தி வழியனுப்பியது மதுரை.



ஜூலை 24
            ஊருக்கு வந்தபின், மூன்று நாட்களுக்குள் சேர்ந்தாகப் பணித்தது ஜேஎன்யு இணையம். தேவையானதை முன்னமே பெற்றுவைத்ததில் சிக்கலில்லை. பகடிவதை செய்யக்கூடாதென முத்திரைத்தாளில் நோட்டரிபப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கத்தான் பெரும்பாடாகிவிட்டது. கடையை மூடும் தருவாயில், பணமேதும் பெறாமல் தட்டச்சு பயிற்சி மையம் வைத்திருக்கும் ஜவகர் பத்திரம் எழுதித்தந்தார்.  “பணம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியபோது, பணம் பெறுவதாக இருந்தால் நாளைக்குத் தான் செய்திருப்பேன் என்று கூறிவிட்டார். கண்ணகி தான் எவ்வளவு சிறப்பான ஊரினை உடைமையாகக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால், நோட்டரி பப்ளிக் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.

ஜூலை 27
புதுதில்லி ஜேஎன்யுவில் சேர்க்கை. கூட்ட அரங்கில் அங்கு, இங்கு, அதற்கு, இதற்கு என ஒருவழியாக்கிவிட்டனர். மூளை கலங்கி, மூக்கொழுகாத நிலைதான். (2019-20 கல்வியாண்டில் தேசியத் தேர்வு நிறுவனம் NTA  வழியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தி, பட்டத்திற்கேற்ப நாட்களை பிரித்து, சில நடைமுறைகளைக் கடைபிடித்ததால் எளிமையாக இருந்திருக்கிறது சேர்க்கை) சேர்க்கை முடித்தாலும், முதல்நிலை இருந்தும் விடுதிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒரு வாரத்திற்குள், தகர அகரமும் பகர அகரமும் தகர இகரமும் சேர்ந்தோடும் ஆறொன்றின் பெயரிலான விடுதி வாய்த்தது. மாடி எடுத்தால், வெயில்காலத்தில் வெக்கை, தரை தளம் எடுத்தால் குளிரில் கொடுமை, நடு தளமே நமக்கு ஏற்புடையதென பலரும் அறிவுறுத்தியிருந்தனர். சிகரெட், போதை வஸ்துக்களின் புழக்கம் அறைக்குள்ளிருப்பது தென்பட்டால், தவிர்ப்பது நல்லதெனவும் சொல்லியிருந்தனர் அனுபவசாலிகள். இவ்வுலகில் நாம் நன்றாக வசிப்பதற்கு நம்மோடு வசிப்பவரும்  நன்றாக இருக்கவேண்டியிருக்கிறது. எல்லா அறைகளும் அவசர அவசரமாகப் பிடித்துக்கொள்ள, சாளரக் கண்ணாடி துடைக்கப்பட்ட அறையொன்றின் நெடுநேர கவனிப்பிற்குப் பின் தெரிந்தெடுத்து நுழைந்தால், வடகிழக்குப் பிரதேச பையன் ’இல்ல மச்சி, சரி மச்சி’ என தன் MCC நினைவுகளிலிருந்து வார்த்தையெடுத்துப் பேசினான்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் இந்த சேர்க்கைக்காக எவ்வளவு அழைப்புகள், எவ்வளவு கலாய்ப்புகள், எவ்வளவு தவி(ர்)ப்புகள். இன்னும் ஓரைந்தாண்டுகளுக்கு பிஎச்டி என்று சொல்லி எல்லார் வாய்களையுமடைத்துவிடலாம் என்ற பெருமூச்சு.  

இதோடு வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் முடிந்து, இப்ப ஆய்வுப் பணிக்கு வந்தாச்சி. எவ்வளவு வேகமாகப் போயிருக்கிறது இந்த ஓராண்டு. படுக்கையோட நூலகம் போயிடணும் எனச்சொன்ன அரசின் வார்த்தையை மட்டும் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இனியேனும் நிறைவேற்றினால் உருப்படலாம். 

தொடர் முற்றும், உருப்படுவதன்பொருட்டு பயணம் தொடரும்...

-தக
23.07.2019  

புதன், 3 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 3

காத்திருப்புக்கு பதில் சொல்லியது மார்ச் 19 நேர்காணல் என வந்த அறிவிப்பு.  நான், நண்பன் சத்தி, அண்ணன் மணிகண்டஹ உட்பட மூவர் சியுடிஎன்-னிலிருந்து தேர்வாகிருந்தோம். இதில் மணிகண்டஹ ஜேஎன்யுவை நிராகரித்ததால் மீதமிருவர் மட்டும் செல்லயிருந்தோம்.  சில நாட்களே இருந்த சூழலில் ஆய்வுச்சுருக்கத்தை முறையாகத் தயாரித்துக் கொண்டுசெல்ல வேண்டும்.

மேலும், இந்திய மாணவர் போராட்டக்களத்தின் ஆதார சுருதியாக விளங்கக்கூடிய ஜேஎன்யுவின் நேர்காணலுக்குச் செல்ல  நன்னடத்தைச் சான்று அவசியமானதாகும். செயற்பாட்டாளர்களாக உருவெடுக்கும் மாணவர்களை முன்பே கணிக்க இது  அவசியமானதென நிர்வாகம் கருதுகிறது போலும்.

தமிழகத்தில் உள்ள கல்லூரி/பல்கலைக்கழகங்களில் என்ன ஆய்வுச்சுருக்கம் கொடுத்துத் தேர்வாகுகிறோமோ., அதையே ஆய்வாகச் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால், ஜேஎன்யுவில் நேர்காணலில் தேர்வாவதற்கான அடிப்படைத் தரவாக மட்டுமே சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கம் அமையும். ஜேஎன்யுவில் சேர்ந்து Coursework முடியும் தருவாயில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கமே முதன்மை.

ஆதலால், நேர்காணலுக்காகத் தற்காலிக ஆய்வுச்சுருக்கம் தயாரிக்க முனைந்தோம். ஜேஎன்யு பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு ஒப்பிலக்கிய ஆய்வையே பெரிதும் மேற்கொண்டு வருவதலால் அதனை முன்னிறுத்தும் சுருக்கத்தைத் தயாரிக்க இருந்தோம். பல்கலை. பாடங்கள்/ முதுகலை, முனைவர் பட்ட ஆய்வுகள் என பல்வேறு வேலைகளுக்கிடையே ஆய்வுச்சுருக்கம் எழுத உதவினார்  நண்பர் ஜவகர்.  இதைப்படி, அதைப்படி என எப்போதும் கூறினாலும் நாட்கள் செல்லச்செல்ல ஆய்வுச்சுருக்கத்தைத் தயாரித்து முடியவில்லை. தன்செலவில் மயிலை-சென்னை,  சென்னை-தில்லி என பயணத்தை உறுதிசெய்துகொடுத்தார். பயணம் உறுதியானாலும் ஆய்வுச்சுருக்கம் இறுதியாகவில்லை.

நாளை சென்னை கிளம்பியாக வேண்டும் எனும் நிலையில் இன்றிரவு நண்பர் ஜவகர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். புத்தகங்களுக்கிடையே வீடு கட்டப்பட்டிருந்தது. அதனுள் மூலப்புத்தகத்தைத் தேடி எடுக்க வேண்டும். நண்பர் சத்திக்கு உடன் கிடைத்த வேலையில், முக்கால் மணிநேர போராட்டத்துக்குப்பின் பெரும் புத்தகங்களுக்குள் அடங்கிக்கிடந்த தாவோதேஜிங் சிறுநூலை அடையாளங்காண முடிந்தது. தாவோதேஜிங் முழுதும் படித்துமுடிக்க 00.00 தாண்டியிருந்தது.

//பொதுமறை அல்ல
பொதுமுறை என்பதே பொருத்தம்...
திருக்குறள்
மந்திரமும் அல்ல
தந்திரமும் அல்ல.
சொல்லப்போனால் அது
சுதந்திரம்.
"மறை"வாக இருக்கும் எதுவும்
பொதுவாக இருக்காது.
"பொது" வான எதுவும்
"மறை"யாக இருக்காது//
என ஆர்.பாலகிருஷ்ணன் இஆப திருக்குறள் பற்றி விதந்தோதியிருப்பார். ஏற்கெனவே திருக்குறள் நாடாளுமன்றம் வரை அழைத்துச் சென்றிருந்ததும் இளம்வயது முதல் உடன்வரும் திருக்குறளைத் தவிர வேறேதும் இலகுவாக இல்லாத சூழலில் தமிழின் திருக்குறளையும் சீனத்தின் தாவோதேஜிங்கும் ஒப்பீடு செய்ய வாய்ப்பாக அமைந்தது.

தாவோதேஜிங்-கை ஒருமுறை ரோபோ ரீடிங் செய்த நண்பர் ஜவகர் உடன் உதித்த ஒப்பீட்டுத் திருக்குறள்களை அடையாளப்படுத்தினார். //பதினோரு பேரு ரெடி, மேட்ச் ஸ்டார்ட்// என்பதைப்போல ஆய்வுச்சுருக்கத்தின் அச்சாரம் கிடைத்த நிலையில் புத்தக மனிதர்கள் குடியிருந்த வீட்டினுள் பின்னிரவு துயில்கொண்டோம். மறுநாள்  தற்காலிக ஆய்வுச்சுருக்கம் விரைவிலேயே நண்பர் சத்திக்கும் தயாராகிவிட்டது.

மயிலை-சென்னை, சென்னை-புதுதில்லி என பயணங்களின் தொடர்ச்சியில் ஹர்சத் நிசாமுதீன்  வந்திருந்தோம். அங்குதான் மொழிப்பிரச்சினை தொடங்கியது. ஓலாவில் ஜேஎன்யு பயணத்தை உறுதிசெய்தும் ஓட்டுநர் மொழி புரியாமல் தவித்தோம். கேட்1, கேட்2 என குழப்பம் வேறு. பிறகு, ஆங்கே இருந்த Ola booking பிரிவில் பதிவு செய்து அவர்களே வழியனுப்ப ஜேஎன்யு பெரியார் விடுதி வந்தோம்.

இங்கு, பெரியார் என்றதும் உங்களுக்குத் தோன்றுவதைப்போல எங்களுக்கும் வினா எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. வட இந்தியாவில் அமைந்துள்ள  இந்தியாவின் மாபெரும் பல்கலை. யின் விடுதிக்கு பெரியார் பெயர் வைத்துள்ளது வியப்பின் உச்சம். ஆனால், ஜேஎன்யுவின் விடுதிகள் அனைத்தும் இந்திய நதிகளின் பெயர்களால் விளிக்கப்படுவதை அறிந்துகொண்ட பின்னர், முல்லைப் பெரியாறு என்பதன் விளியே பெரியார் விடுதி என்பதைத் தெளிவுபடுத்தினர் சீனியர்கள்.

அச்சமயம் மதியம். ஆய்வு தேடி வந்தவர்கள் உணவுதேடி சென்றோம் தமிழ்ப்பிரிவிற்கு. பத்துநாள் பயிலரங்கின் எட்டாவது நாள். தமிழறிஞர்களின் உரைகளுக்கிடையே உணவும் ஈயப்பட்டது. மாலைக்கு மேல் பெரியாரில் விசய் அசண் அறையில் ஓய்வெடுத்தோம். அன்றிரவு சட்லஜ் விடுதியின் விடுதிநாள் என்றுநினைவு. நன்றாக உண்டுவிட்டு டிஜே ஆடிக்கொண்டிருந்தனர்.  பின்னிரவு தூங்க, அடுத்தநாளும் பத்தாம்நாள் பயிலரங்கில் கழிந்தது. பாரதிபுத்திரன், கோ.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்களின் உரைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. அதிலும் மாமல்லபுரம் சிற்பங்களை இலக்கியத்துடன் ஒப்பிட்டு உரைநிகழ்த்திய பாரதிபுத்திரன் இங்கு நினைவுகூறற்குரியவர்.

அன்றைய மாலை மார்ச் 18, நிறைவு விழாவில் அங்குள்ள மாணவ/பேராசிரியர்களின் மேடை உரை வெளிப்படையானதாக  இருந்தது,  புகழுரைகளில் தத்தளிக்கும் தமிழகத்திலிருந்து வந்த எங்களுக்கு வியப்பாக இருந்தது.

அன்றிரவு ஜீலம் விடுதியின் மூன்றாம் மாடியில் தனபால் அறையில் அருண் பிழைதிருத்த பெரும்பான்மையானோர் கூடியிருந்தனர். பின்னிரவு முடிந்த தற்காலிக ஆய்வுச்சுருக்கத்தின் ஒழுங்கமைப்புப் பணியால் தூங்க நேரமானது.

காலை மார்ச் 19,  இரண்டு இடங்களுக்கான நேர்காணலுக்கு ஐவர் வந்திருந்தோம். தமிழ்ப்பிரிவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில்(2) இடங்கள் இருந்தன. இதே Philosophy துறையில் 16க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.

நான்காவதாக நேர்காணலுக்கு சென்றிருந்தேன். சான்றிதழ் கிடங்கிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ஓரிலக்க சான்றிதழ்களை  மட்டும் காட்சிப்படுத்தினேன். விளம்பரமாக அவை தோன்றியிருக்கலாம். சொல்லப்போனால், கடந்தகாலத்தின் நிகழ்கால விளம்பரங்கள் தான் அவை. இது ஆய்வுக்கெப்படி உதவும் என்றெல்லாம் தோன்றவில்லை. அடையாளப்படுத்தலுக்கு வேண்டுமெனில் உதவுமெனத் தோன்றியது.

எதிர்பார்த்தது போலவே, இயற்பியல் பிறகு செவ்வியல் தமிழ், இப்போது சீனம் "என்ன சம்பந்தமில்லாமலே இருக்கே" என்றார்கள். "செவ்வியல் ஆய்வு தான் செய்வீர்களா? நவீன ஆய்வுகள் தான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்விக்கு "நவீன இலக்கியங்களில் ஆய்வு செய்யமாட்டேன் என்றெல்லாம் இல்லை, ஆனால், செவ்வியலில் சிறப்பாகச் செய்வேன்" எனச் சொல்லுமளவு முதிர்வு அப்போது இல்லை.

2ஆம்வேற்றுமை(உருபு)த் தொடர் ஒன்று சொல்லச் சொன்னார்கள். "உணவைச் சாப்பிட்டான்" என்றேன். அதைத் தொகைப்படுத்தச் சொன்னார்கள். தொகைப்படுத்த என்ற சொல்லுக்கு மிகச்சரியான புரிதல் சட்டென்று வராத சூழலில், சான்று ஒன்றை  கேள்விகேட்டோர் பகர உடன் "உணவு சாப்பிட்டான்"என்றேன்.

குலுக்கல் முறையில் ஒரு தலைப்பு வந்தது தொல்காப்பியம். நேர்காணலில் கேள்விகேட்போரில் துறைசாராத மூன்றாம் நபர் தமிழ் தெரியாதவராக இருந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் தொல்காப்பியம் பற்றி விளம்பினேன். அங்கிருந்த தேநீர்க்கோப்பையைச் சுட்டி இதில் என்னவிசை செயல்படுகின்றதென ஒருகேள்வி வைக்கப்பட்டது. இரண்டாண்டுகட்கு முன்பு நினைவின் செல்லரித்துப்போன இயற்பியலை தூசுதட்டி துரிதமாய் தந்த மூளையை இன்னும் எண்ணி வியக்கிறேன். ஆனால், //இதனுள் இது செயல்படுகிறதென காரல் மார்க்ஸ் இதில் குறிப்பிட்டுள்ளார்// என கொடுக்கப்பட்ட விளக்கங்கள் எதிர்பாராதவை.

உடல் ஒத்துழைக்குமா? இத்தனை சான்றிதழ்களை பார்த்தால் UPSC தேர்வுக்கு தயாராகுபவர் போல் இருக்கிறதே? போன்ற கேள்விகளை பதிலளித்து முடிக்க இருபது நிமிடங்களைக் கடந்துவிட்டது. 24 நிமிடங்களுக்குப்பின் நன்றி சொல்லிவிட்டு வெளிவர தமிழ்தெரியாத மூன்றாம் நபருக்கு தன்யவார் சொல்லி வெளிவந்திருந்தேன்.

மதியம் வரை காத்திருக்க வேண்டாம், இல்லம் செல்லுங்கள் முடிவுகள் உரிய பொழுதில் இணையத்தில் அறிவிக்கப்படும் என்று கூற கலைந்தோம். மதிய உணவுண்டு மாலை புதுதில்லிக்கு விடைகொடுக்க இந்திராகாந்தி விமானநிலையத்தில் பயணம் உறுதியானது. அடுத்தநாள் மாலை சியுடிஎன் இல் நிகழவுள்ள ஆரம்ப்பா-18 நிகழ்விற்காக பறக்கத் தயாராயிருந்தேன். மொக்கைக் கவிதைகள் எழுதி முன்னிரவில் சென்னை மீனம்பாக்கம் வர, சாலையில் குடந்தை நோக்கிவந்த விரைவுப் பேருந்திலேறி கண்ணயர விடிந்திருந்தது.

-தக

வியாழன், 13 ஜூன், 2019

“கைத்தறி”க்கான விழிப்புணர்வு வாசகங்கள்


Our Handloom
Our Pride

Wearing Handloom
Looking Handsome

Buying Handloom Dresses
Deeloping Handloom workers

Producting Handloom
Protecting Culture

Buy the Handloom
For the Nation

Lets Wear Handloom
Its our Headline

மேல் அணிய இனியது
காலணியத்திற்கு எதிரது

காந்தி தந்த ராட்டை
பலப்படுத்தும் நாட்டை

கைத்தறி துணிகள்
வளம்தரு துறைகள்

கைத்தறி பயன்படுத்து
பண்பாட்டை பலப்படுத்து

கைத்தறி உற்பத்தி அதிகரிப்பு
உள்நாட்டுப் பொருளாதார மேம்பாடு

கைத்தறி வாங்கிடுவோம்
தேசத்தை மேம்படுத்திடுவோம்.

04.08.2017 | தேசிய கைத்தறி தினத்திற்காக எழுதப்பெற்றது.

சனி, 8 ஜூன், 2019

தேசிய நெல் திருவிழா - 2019



13ஆம் ஆண்டு தேசிய நெல்திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல்திருவிழா இந்த ஆண்டு (2019) ஜூன் 8, ஜூன் 9  நாட்களில் நடைபெறுகிறது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு வாயிலாக 2006ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது நெல் திருவிழா. அது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நெல் திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் நெல் ஜெயராமன். தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் 6ஆம் நாள் மறைந்தார். அவர் இல்லாது நடக்கக்கூடிய முதலாவது நெல் திருவிழாவாகும் இது.

நம்மாழ்வாரும் நெல்ஜெயரமானும் இயற்கை வேளாண்மையை தமிழக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த இருபெரும் ஆளுமைகள். வேளாண்மை அழிந்து வருகிறது, செயற்கை உரங்களால் மண் மலடாகி வருகிறது, இது தவிர்த்து, காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றால் இயற்கை வளமே இல்லாத போகும் சூழல் ஒருபக்கம். இவற்றுக்கிடையே இவையாவற்றையும் தாண்டி விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றி, இயற்கை சார்ந்து பயிரிட்டு சாதிக்கலாம் என்பதை மற்ற விவசாயிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்து செயல்படுத்திக் காட்டியவர் நெல் ஜெயராமன்.

அவர் இல்லாத நடக்கும் முதல் நெல் திருவிழா இதுவாகும்.  தேசிய நெல்திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை காலை உழவர்களின் பேரணி, கண்காட்சித் திறப்பு, மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் படத்திறப்பு விழாவும், புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, விழாப் பேருரையாற்றுகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சுகதீப்சிங் பேடி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரம், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளான் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

நெல்திருவிழாவில் இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பாரம்பரிய நெல்ரகங்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், சான்றிதழ் பெறுவதில் விவசாயிகளின் கூட்டு முயற்சிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், நுகர்வோர் பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதை மீதான உழவர்களின் உரிமையும் அரசின் நெருக்கடிகளும், அழிவின் விளிம்பிலுள்ள நாட்டுரக கால்நடை இனங்கள், வறட்சியை எதிர்கொள்ள சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய நீர்மேலாண்மை யுக்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

நெல் ஜெயராமன் நினைவாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை முகாம் சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர் மல்லிகா தலைமையில் நடக்கவிருக்கிறது. பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டியும், மரபார்ந்த விளையாட்டுகள் போட்டியும் நடத்தப்படவுள்ளன. பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உணவுத்திருவிழா என திருத்துறைப்பூண்டி ஏஆர்வி தனலெட்சுமி திருமண அரங்கில் நடைபெறவுள்ள உணவுத்திருவிழா-2019 களைகட்ட இருக்கிறது.

நெல் திருவிழாவின் முதன்மையான நோக்கமே விதை நெல் தான். கடந்தாண்டு இயற்கை விதை நெல் வாங்கிச் சென்ற விவசாயிகள் அதனை இரட்டிப்பாக திரும்பித்தர வேண்டும். இந்தாண்டு புதியதாக விதை நெல்வாங்கிச் செல்லும் விவசாயிகள் அடுத்த ஆண்டு இரட்டிப்பாக அவற்றைத் தர வேண்டும். அறாத்தொடர்ச்சியாக நிகழும் இது பல்கிப் பெருகி இயற்கை வேளாண்மையை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் முறையாகும். தனிமனிதரின் பிடியில் துறைசார்ந்த யாவற்றையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் பல்கிப்பெருகி வரும் உலகமயமாக்கல் சூழலில்,  அடையாளங்கண்ட இயற்கை பயிர்களையெல்லாம் விதை நெல்லாக பிறருக்கும் கொடுத்து வேளாண்மையை பொதுவுடைமையாக்கிய பெருமை நெல் திருவிழாவையே சேரும்.

நெல் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

-    த.க.தமிழ்பாரதன்
-   படங்கள் க.சதீஷ்குமார்

புதன், 5 ஜூன், 2019

இலையில் தங்கிய துளிகள் | வைரமுத்து கவிதை


இலையில் தங்கிய துளிகள்

காலப் பெருவெளியில்
சிலப்பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும்கண்டுசெல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராம்ம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்ட்தாகவும்
நீளப் பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்.

பட்டுப் பாவடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடை ஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என் மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம்-
தெருவெல்லாம் கார்த்திகைதான்!
மனசெல்லாம் மார்கழிதான்!

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்?

இன்றேனும் பேசு பெண்ணே!

“வாங்க”

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீ மட்டும் நீயில்லை

வீதிஎயல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம்தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருக்சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேநீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இஞ்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான் :
”நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்”

உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்.

-    வைரமுத்து | கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பிலிருந்து.


#தக 05.06.2019